first review completed

வேதபுராணம்

From Tamil Wiki
வேதபுராணம்

வேதபுராணம் (1894) இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த மெய்ஞ்ஞான நூல். இதனை இயற்றியவர் பெரிய நூஹு லெப்பை ஆலிம் சாஹிப்.

பதிப்பு, வெளியீடு

வேதபுராணம், இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த மெய்ஞ்ஞான நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர், காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரிய நூஹு லெப்பை ஆலிம் சாஹிப். இந்நூலின் முதல் பதிப்பு 1894-ல் வெளியானது. இதனை கண்ணகுமது மகுதூமுகம்மதுப் புலவர் பதிப்பித்தார். தொடர்ந்து இரண்டாம் பதிப்பு, காதர் இபுறாகீம்சாகிபின் வேண்டுகோளின்படி கண்ணகுமது மகுதூமுகம்மதுப் புலவரால் சீர்த்திருத்தப்பட்டு, 1897-ல், சென்னை நிரஞ்சனிவிலாச அச்சுயந்திரசாலையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1948-ல், ஹாஜி எம்.ஏ. ஷாஹுல்ஹமீது & ஸன்ஸால், ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது.

ஆசிரியர்

பெரிய நூஹு லெப்பை ஆலிம் சாஹிப் காயல்பட்டினத்தில் பிறந்தவர். இவர், நபி முஹம்மதுவின் தோழர்களில் முதன்மையானவரான அபூபக்கர் ஸித்திக்கின் வம்சா வழியில் வந்தவர். இவருடைய தந்தை அப்துல்காதிர் ஆலிம். பெரிய நூஹு லெப்பை ஆலிம், மஞ்சுக் கொல்லையில் இருந்த சதக்கத்துல்லா அப்பாவின் உடன் பிறந்தவரான அஹமதலி என்பவரிடம் மார்க்கக் கல்வி கற்றார். பரங்கிப் பேட்டை மஹ்மூது தீபியிடம் காதிரியா மெய்ஞ்ஞான நெறியினைப் பயின்றார். பல்வேறு இடங்களுக்குச் சென்று ஞானம் போதித்தார். மே 21, 1741-ல், நாஞ்சில் நாட்டில் உள்ள பூவாறு என்னும் ஊரில் அடக்கமானார்.

நூல் அமைப்பு

வேதபுராணம் நூல் காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கடவுளர் வாழ்த்து இடம்பெற்றுள்ளது. காப்புச் செய்யுள் வெண்பாவில் அமைந்துள்ளது. பிற செய்யுள்கள் பெரும்பாலும் விருத்தப்பாக்களாகவும், கொச்சகக் கண்ணிகளும், வெண்பாக்களுமாக அமைந்துள்ளன. அந்தாதியாகவும் சில பாடல்கள் அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

வேதபுராணம் சமயச் சார்பான கருத்துக்ளையே முதன்மையாகக் கொண்டுள்ளது. திருமறையாகிய திருக்குர்ஆனின் கருத்துகள் இந்நூலின் கருப்பொருளாக அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்தில் அல்லாவும், முஹம்மது நபியும், பிற நபிகளும், சாஹிப் நபியும் போற்றப்பட்டுள்ளனர். அரபுச் சொற்கள் இப்புராண நூலில் பயின்று வருகின்றன. வேதபுராணத்தில் 26 படலங்கள் அமைந்துள்ளன. அவை,

  • கலிமா முதலிய காரணப் படலம்
  • தொழுகைப் படலம்
  • அல்ஹம்துப் படலம்
  • இன்னிசைப் படலம்
  • குத்துபாப் படலம்
  • வாங்குப் படலம்
  • நோன்புப் படலம்
  • சிபாத்துப் படலம்
  • இல்முனிசாப் படலம்
  • தௌஹீதுப் படலம்
  • மிஃறாஜுப் படலம்
  • உபாத்துப் படலம்
  • மகுஷர்க் கேள்விப் படலம்
  • மூலாதாரப் படலம்
  • வேதவுதிப்புப் படலம்
  • பூரணப் படலம்
  • வேதப் புகழ்ச்சிப் படலம்
  • முச்சுடர்ப் படலம்
  • முஷாஹிதாப் படலம்
  • ஈரடிக் கொச்சகப் படலம்
  • இன்சான் படலம்
  • நுஜும் படலம்
  • ஹதீதுகுதுசிப் படலம்
  • ஷஹாதத்துப் படலம்
  • முரீதுப் படலம்
  • யோகமூலிபுனுகு கரந்தைப்படலம்

வேத புராணம் 910 செய்யுட்களைக் கொண்டுள்ளது.

பாடல்கள்

ஞானிகள் அருளிச் செயல்

விரைவாய் எனக்கு இல்ம்இல் லாதநாளில்
வேஷ மாறியோர் சன்யாசி போல்
தெருவில் வரக்கண்டே ஊரிலுள்ளோர்
தெறிகள் பேசித்தான் ஓட்டிவிட்டார்
அருமையுடன் கண்டு சலாமுரைத் தேன்
அப்போது முஹம்மதை எங்கே என்றார்
உரிமையுள நசீப் இல்லை என்றே
உமிழ்நீர் என்வாயில் கிளிறு உமிழ்ந்தார்
உமிழ்ந்தார் வாயிலெற் குடனறிவு
மோசைப் பகுறுபோல் விரிந்து கல்பும்
நவநீத மதான நபியுல்லாவும்
நாட்டமா முகிய்யித்தீன் குதுபும்
கெவுனமுடன் வந்து வாய்திறந்து
கிருபையுடனெனக் கமுதளித்தார்
தவனமில்லாத முஷாஹிதாத்தா
னன்று மின்று மொன்றானதுவே

போலி ஞானிகளின் தன்மை

கஞ்சா சாராயம் அபினும் கள்ளும்
கள்ள மாய்த்தின் றுக்க விழ்ந்திருக்கும்
அஞ்சா முஷாஹிதா தனிலிருந்து
அமுதம் வாங்கினா னுண்டேன் என்பார்
நெஞ்சால் நீர்க்கோழி ஜலத்திற் குள்ளே
நெடு நேர மதாக மூச்சடக்கித்
துஞ்சாப் பெருமூச்சை விட்டது போல்
துய்ய நபிறசூல் ஓதினார்

நபியின் பெருமை

ஆன முகம்மது நபிதமக்கிங்
கடியுந் தோயாது நிழலுமில்லை
தான மண்பூச்சுத் தொடாதவங்கஞ்
சங்கை யாய்மேகக் குடைமணமும்
பானற் பார்வைமுன் கண்டதூரம்
பார்வை யதுபோல பின்னுங் காணும்
கோனி னறுஷுக்கு மேற்சிரசுங்
இடம் குறித்த தகுத்தத றாக்கீழ்பாதம்
பாதம் ரண்டையுங் கண்டதில்லைப்
பார்வை மேற்சிரங் கண்டதில்லைக்
கோதில் மேனியைக் கண்டதில்லை
கூறுமலஜலங் கண்டதில்லை
நீதத் துயிலாடை களைந்ததில்லை
நிசமாய் நகம்ரோமம் வளர்ந்ததில்லை
போதமொருநாளு மறைந்ததில்லைப்
புகழ் முகம்மதா மண்ணலுக்கே

மார்க்கத்தின் சிறப்பு

நல்ல ஷறீஅத்து வித்தாச்சுது
நலமாந் தறீக்கத்து மரமாச்சுது
எல்லை ஹக்கீத்ததுப் பூவாச்சுது
இலங்குங் கனியாச்சு மஹரிபத்துச்
சொல்லும் ஷறீஅத்துத் தோலாச்சுது
தோற்றுந் தறீக்கத்துத் தயாச்சுது
வெல்லும் ஹக்கீகத்து எலும்பாச்சுது
வெண்மூ ளையுமேலு மஹரிபத்தே

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.