தற்குறிப்பேற்றணி (தற்குறிப்பு ஏற்ற அணி)
இயல்பாக நிகழும் நிகழ்விற்கு கவிஞர் தன் உள்ளக்குறிப்பை/காரணத்தை ஏற்றுவது தற்குறிப்பேற்றம் (தன் குறிப்பு ஏற்றம்) எனப்படும். அது ஒரு செய்யுளில் பயின்று வருவது தற்குறிப்பேற்றணியாகும்
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டு -1 சிலப்பதிகாரம்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட - சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
எடுத்துக்காட்டு-2 கம்பராமாயணம்
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று அழைப்பது போன்றது அம்மா!
மிதிலைக்கு சீதையின் மணத் தன்னேற்புக்கு மிதிலையில் நுழையும் போது மிதிலை நகரத்து மதில்கள் மேலுள்ள கொடிகள் அசைவது திருமகள் தன்னிடத்தில் சீதையாகப் பிறந்துள்ளாள் என்பதைக் குறிப்பாகச் சொல்லி அவளுக்குக் கணவனாவதற்கு ஏற்ற இராமனை விரைவிலே வந்து மணம் புரியுமாறு அந்த நகரம் தன் கொடிகளான கைகளைக் காட்டி அழைப்பது போன்றது.
இயல்பாக கொடிகள் அசைவதை இராமனை அழைப்பதாக தன் குறிப்பை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்றணி ஆயிற்று.