வாஸவேச்வரம் (நாவல்)

From Tamil Wiki
நன்றி:காலச்சுவடு பதிப்பகம்

வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) எழுதிய, வாசவேஸ்வரம் என்ற ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை. தன்முனைப்பும் காமமுமே மனிதர்களைச் செலுத்தும் விசையாக இருக்கின்றன. தமிழின் முக்கியமான நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது

நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல்​பெண் படைப்பாளி கிருத்திகா இவரது நான்காவது நாவல் வாஸவேச்வரம் கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல் தமிழகத்தின்​தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக்கிராமத்தை கதாபத்திரங்களை ​மையமாகக் கொண்டு கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது, எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு,

ஆசிரியர்

கிருத்திகா வின் இயற்பெயர் மதுரம் பூதலிங்கம் ( 1915 - 2009) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே பூதப்பாண்டியில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். திருப்பதிசாரத்தைச்(திருவெண்பரிசாரம்) சேர்ந்த இந்திய அரசில் உயரதிகாரியாக இருந்த பூதலிங்கம் பிள்ளையை மணம் செய்துகொண்டார்.

.ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில் புகை நடுவினில், சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம். தர்ம ஷேத்ரே ,புதிய கோணங்கி,நேற்றிருந்தோம் போன்ற நாவல்களை எழுதியவர்.

உருவாக்கம், பதிப்பு

கிருத்திகா 1966 ல் எழுதிய வாசவேஸ்வரம் நாவலில் தன் புகுந்த ஊரான திருப்பதிசாரத்தைக் களமாக்கி, அங்கு வாழ்ந்த மக்களின் சாயலில் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். சுதந்திரத்துப்பின் தேக்க நிலையில் நின்ற, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இன்னும் தலை தூக்காத கிராமத்தை சித்தரித்திருக்கிறார். முதல் பதிப்பு 1966ல் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் வெளிவந்த அதே வருடம் வெளிவந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு 2007 டிசம்பரில் வெளி வந்தது.

கதைச்சுருக்கம்

வாஸவேச்வரத்தில் உள்ள கோவிலில் குடிகொண்ட ஈசன் பெண்ணாசையால் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்ததைப் பற்றிய கதாகாலட்சேபத்துடன் நாவல் தொடங்குகிறது.ஒரு சிறிய வட்டத்துக்குள் ஆன்மா தேங்கிய ஊர்மக்கள் தன்முனைப்பாலும் காமத்தாலும் மட்டுமே செலுத்தப்படுகின்றனர். பண்பாலும், ஆளுமையாலும் ஓங்கி உயர்ந்து நிற்பவர் பெரியபாட்டா என்ற ஊர்த்தலைவர் மட்டுமே.

முக்கியமாக மூன்று குடும்பங்களின் கதை சொல்லப்படுகிறது. பாட்டாவின் பெண்வழிப் பேத்தி தங்கம். அவள் கணவன் டாக்டர் சுந்தா. வாய் கிழிய முறை என்றும் நெறி என்றும் பேசி தன் வாழ்வில் எதுவும் கடைபிடிக்காதவன்.

சந்திரசேகரனும் சுப்பையாவும் ஒன்று விட்ட சகோதரர்கள், தாயாதிகள். பெரிய பாட்டாவின் தமக்கை பேரன்கள்.

செயலூக்கமும் தன் முனைப்பும் கொண்ட சந்திரசேகரன் , தன் உழைப்பில் நிலத்தை நாநூறு ஏக்கராகப் பெருக்குகிறார். மனைவி ரோகிணி பேரழகி, நகரத்தில் வளர்ந்தவள், கிராமத்தில் பொருந்தாமல் ,கணவனின் அன்புக்காக ஏங்கி அவன் தன் அழகை ஆராதிக்க வேண்டுமென்று விரும்புபவள். சந்திரசேகரன் ஊருக்கெல்லாம் இன்முகம் காட்டி, மனைவியைத் துரும்பாக மதிப்பவர்.

சுப்பையா சிறு வயதிலிருந்தே சந்திரசேகரனுடன் ஒப்பிடப்பட்டே வளர்ந்தவன். அவன் தாய் மட்டுமே அவன்மேல் நம்பிக்கை வைத்து நடத்திச் சென்றவள். தாயின் மரணத்துக்குப்பின் சுப்பையாவின் மனம் அமர்ந்து விட்டது. செயலூக்கமின்றி கடும் மன அழுத்தத்தோடு வாழ்கிறான். மனைவி விச்சுவும் அவனை சந்திரசேகரனோடு ஒப்பிட்டுத் தேளாகக் கொட்டுகிறாள். சுந்தாவுக்கும் விச்சுவுக்கும் மணவினை தாண்டிய உறவு முளைக்கிறது

பிச்சாண்டி முற்போக்குக் கொள்கைகளும், எதற்கும் அஞ்சா நெஞ்சுரமும் உடைய இளைஞன். பொதுவுடமைவாதி. ரோகிணியும் அவனும் மனதிற்குள் ஒருவரையொருவர் ரகசியமாக ஆராதிக்கிறார்கள்.

பிச்சாண்டி குடும்பக் கட்டுப்பாடு, தொழிலாளர் உரிமை பற்றியெல்லாம் ஊரில் பிரச்சாரம் செய்க்றான்.ஊரைச் சீர்திருத்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறான். பாட்டாவை எதிர்த்து சவால் விடுகிறான்.

பிச்சாண்டி வென்றால் தங்கள் அதிகாரம் செல்லாது என்பதால் சுந்தா சந்திரசேகரனை தேர்தலில் போட்டியிட வைக்கிறான். ஊர்த் திருவிழா அன்று பிச்சாண்டியின் குழுவை சேர்ந்தவர்களே அவனை எதிர்த்துக் கலகம் செய்ய, காயங்களுடன் "இந்த ஊரைத் திருத்தமுடியாது" என்று வெறுப்புடன் ஊரை விட்டே செல்லும் வழியில் ரோகிணியைக் கடைசி முறையாகப் பார்க்கச் செல்கிறான். அங்கே சந்திரசேகரன் உலக்கையால் அடிபட்டு இறந்துகிடக்கிறான்.பிச்சாண்டி மேல் கொலைப்பழி விழுகிறது.

சுப்பையா ஒரு முறையாவது தான் வென்று அதை விச்சுவுக்கு நிரூபிக்க சந்திரசேகரனை உலக்கையால் கொன்று, விச்சுவுக்கு அதைக் கடிதமெழுதி, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான். அப்போதுதான் பேரன் ரங்கனை இழந்திருந்த பாட்டா தலையில் இடி மேல் இடி. இருந்தும் காவல்துறையிடம் கடிதத்தைத் தந்து பிச்சாண்டியை விடுவிக்கிறார். ரோகிணியிடம் மட்டும் உண்மையச் சொல்லும்படி கோரிவிட்டு பிச்சாண்டி ஊரைவிட்டே போகிறான்.

கதை மாந்தர்

பெரிய பாட்டா- குடும்பத்தின் ஆலமரம்.ஊர்த் தலைவர்

சந்திரசேகரன் ,சுப்பையா-பாட்டாவின் தமக்கை பேரன்கள், தாயாதிகள்.

பிச்சாண்டி-அஞ்சா நெஞ்சன் , பொதுவுடமைவாதி

ரோகிணி-சந்திரசேகரனின் மனைவி, பேரழகி

விச்சு- சுப்பையாவின் மனைவி

தங்கம்-பாட்டவின் மகள் வயிற்றுப் பேத்தி

சுந்தா-தங்கத்தின் கணவன்

அம்மாளு அம்மாள்-சுந்தாவின் தாய்

ரங்கன் -பாட்டாவின் மகன் வயிற்றுப் பேரன்

கோமதி- தூரத்து உறவுமுறையில் தாத்தாவின் பேத்தி

சுப்புக்குட்டி சாஸ்திரிகள்-கதாகாலட்சேபம் செய்பவர்


இலக்கிய இடம்

உசாத்துணை

வாசவேஸ்வரம்-Silicon Shelf

சில கடிதங்களும் இரண்டு நாவல்களும்- கிருத்திகா