ஆறு. இராமநாதன்
ஆறு. இராமநாதன் (முனைவர் ஆறு. இராமநாதன்; ஆறு. ராமநாதன்; ஆறுமுகம் இராமநாதன்; ஆறுமுகம் ராமநாதன்) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) தமிழ்ப் பேராசிரியர். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர். தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் உள்படப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய ஆய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
ஆறு. இராமநாதன், சிதம்பரம் வட்டம் வீராணம் அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஆறுமுகம் - சீதாலட்சுமி இணையருக்கு, ஆகஸ்ட் 3, 1950 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை மஞ்சக்கொல்லையில் படித்தார். கல்லூரிக் கல்வியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ‘நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஆறு. இராமநாதன், மணமானவர். மனைவி: பவளக்கொடி. மகன்: அருணன். மகள்: எழிலரசி.
கல்விப் பணிகள்
ஆறு. இராமநாதன், கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக் கல்லூரியில், தமிழ்த் துறையில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், பேராசிரியர் தொடங்கி நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநர், பதிப்புத்துறை இயக்குநர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
ஆறு. இராமநாதன், நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ‘வெளி வந்த குமுறல்’ என்பது ஆறு. இராமநாதன், எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதழ்களில் இலக்கியம், ஆய்வு, நாட்டுப்புறவியல் சார்ந்து பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார். ஆறு. இராமநாதன், 35-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
ஆய்வுகள்
ஆறு. இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வு தொடங்கி பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்தார். பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், செயலரங்குகள் போன்றவற்றில் பங்கேற்றார். பொறுப்பேற்று நடத்தினார். ஆறு. இராமநாதனின் ’தமிழில் புதிர்கள்’ என்னும் ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. தனது முனைவர் பட்ட ஆய்வான ‘நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்பதை நூலாக்கி வெளியிட்டார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிலுள் தீப்பாஞ்சாயி என்ற சிறு தெய்வம் எவ்வாறு தீப்பாய்ந்த நாச்சியம்மன் திருக்கோயிலானது என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தினார்.
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுவதும் நாட்டுப்புறவியல் சார்ந்த களப்பணியில் ஈடுபட்டார். ஆய்வின் முடிவுகளை ‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்’ என்ற தலைப்பில் பத்து தொகுதிகளாக வெளியிட்டார். முதல் ஐந்து தொகுதிகள் ஆறு. இராமநாதன் தொகுத்தவை. பிற ஐந்து தொகுதிகளுக்கும் முதன்மைப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.
ஆறு. இராமநாதன், தனது ஆய்வை, ‘வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை’ என்ற வகைமையில் மேற்கொண்டார். ஒரு கதை வாய்மொழியாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பரவும்போது நிலவியல் கூறுகள் அக்கதையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை ஆவணப்படுத்தினார். நாட்டுப்புறக் கலைகள் குறித்து ஆய்வு செய்து அதனை நூலாக ஆவணப்படுத்தினார்.
விருதுகள்
- ஆறு. இராமநாதன் எழுதிய ‘தமிழர் வழிபாட்டு மரபுகள்’ நூல், 2006-ல், தமிழ் வளர்ச்சித் துறையின், நாட்டுப்புறவியல் துறை சார்ந்த சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
- தமிழர் கலை இலக்கிய மரபுகள் நூல், 2007, சிறந்த நூலுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு பெற்றது.
- நொண்டிப் பிள்ளையார் சிறுகதை நன்னன் அறக்கட்டளை வழங்கிய அண்ணல் நினைவுப் பரிசைப் பெற்றது.
- நாட்டுப்புற கலைகள் - நிகழ்த்து கலைகள் நூலுக்கு, 2001-ல், காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது கிடைத்தது.
- தமிழர் கலை இலக்கிய மரபுகள் நூலுக்கு சிறந்த நாட்டுப்புறவியல் நூலூக்கான தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.