first review completed

ஜூனியர் விகடன்

From Tamil Wiki
Revision as of 06:21, 6 February 2024 by Tamizhkalai (talk | contribs)
ஜூனியர் விகடன்

ஜூனியர் விகடன் (1983) தமிழின் முன்னோடிப் புலனாய்வு வார இதழ். ஆனந்த விகடன் குழுமத்தைச் சேர்ந்த இவ்விதழை எஸ். பாலசுப்பிரமணியன் தொடங்கினார். வார இதழாக வெளிவந்த ஜூனியர் விகடன் பின்னர் வாரம் இருமுறை இதழாக வெளிவந்தது.

வெளியீடு

ஜனவரி 1983-ல், ஜூனியர் விகடன் இதழ் தொடங்கப்பட்டது. ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளியான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் எஸ். பாலசுப்பிரமணியன். முதல் இதழ், ஜனவரி 15, 1983-ல் வெளியானது. 32 பக்கங்களுடன் 90 காசு விலையில் வெளிவந்தது. மதன் இணை ஆசிரியராகச் செயல்பட்டார்.

நோக்கம்

மக்களுக்குச் செய்திகளோடு செய்திகளின் பின்னணியையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையும், ஒரு நிகழ்வின் பின்னணியில் உள்ள அனைத்து விஷயங்களையும் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதையும் ஜூனியர் விகடன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.

உள்ளடக்கம்

ஜூனியர் விகடன் இதழ், தொடக்க காலத்தில் ‘தமிழ் மக்களின் நாடித்துடிப்பு’ என்ற முன்னட்டைக் குறிப்புடன் வெளியானது. பிற்காலத்தில் ‘குரலற்றவர்களின் குரல்’ என்ற முகப்பு வாசகம் இடம் பெற்றது. ஜூனியர் விகடன் தொடர்ந்து சமூக, அரசியல் அவலங்களை அம்பலப்படுத்தியது. குற்றச் செய்திகள் குறித்தும் காவல் துறை விசாரணைகள் குறித்தும் விரிவான செய்திகளை வெளியிட்டது. அரசியல், சமூக நிகழ்வுகளின் பின்னணிகளை உள்ளது உள்ளபடிக் கூறும் ’கழுகு’ என்னும் அரசியல் பகுதி மே 04, 1983-ல் வெளியானது. தொடர்ந்து மாநிலத்தின் நள்ளிரவில் நடக்கும் நிகழ்வுகளைக் கூறும் ‘ஆந்தையார்’ என்ற பகுதி வெளியாகி வாசக வரவேற்பைப் பெற்றது.

தீண்டாமை, வறுமை, கந்துவட்டி போன்ற சமூகத்திற்கு தீங்கான நிகழ்வுகளைக் கண்டறிந்து அரசு மற்றும் மக்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றது. தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை அரசும் மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், ஆவணங்களுடன் பல புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் செல்லாத மலையோர மக்கள், காட்டுப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சனைகளை, தேவைகளை வெளியிட்டு அரசுக்குக் கவனம் ஏற்படுத்தியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியது. உலகளாவிய பல நிகழ்வுகளுக்கும், போர் போன்ற செய்திகளுக்கும், சூழ்நிலை மாற்றம் குறித்த தகவல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. வாசகர்களின் பங்களிப்பாக டீக்கடை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இருவர் பேசிக்கொள்வது போன்ற சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பகுதி ‘டயலாக்ஸ்’ என்ற தலைப்பில் வெளியானது.

நிதி நிறுவங்கள் செய்யும் குற்றங்கள், ரியல் எஸ்டேட் ஊழல்கள், திருமணத்திற்கும் நடக்கும் குற்றங்கள், பாலியல் பிரச்சனைகள் என்று பல செய்திகளை விரிவாக வெளியிட்டது, கழுகார் பதில்கள், வாக்கி டாக்கி, ஆபிஸர் அட்ராசிட்டி, கிசுகிசு, மைக் ப்ளீஸ், ஒன் பை டூ போன்ற அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் சார்ந்த தகவல்கள் வெளியாகின. ‘மிஸ்டர் மியாவ்’ என்ற தலைப்பில் திரைப்படம் சார்ந்த செய்திகள் வெளியாகின.

ஜூனியர் விகடன் இதழ், புலனாய்வுச் செய்திகளை வெளியிட்டதற்காக அரசியல்வாதிகளிடமிருந்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவங்களிடமிருந்தும் பல்வேறு வழக்குகளைச் சந்தித்தது. மக்களின் பிரச்சனைகளைப் பேசும் முக்கிய இதழாக ஜூனியர் விகடன் இதழ் வெளிவந்தது.

தொடர்கள்

தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள், சுஜாதாவின் ‘என்ன ஆச்சரியம்’, மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’, பிரபலங்களின் காதல் அனுபவப் பகிர்வான ‘காதல் படிக்கட்டுகள்’, ‘தோற்றவர்களின் கதை’, ’கொலம்பஸ் சாகசப் பயணங்கள்’, மகா தமிழ்ப் பிரபாகரனின் புலித்தடம் தேடி, எஸ். ராமகிருஷ்ணனின் எனது இந்தியா, நரனின் வேட்டை நாய்கள், போன்ற பல தொடர்கள் ஜூனியர் விகடனில் வெளியாகி வாசக வரபேற்பைப் பெற்றன.

மதிப்பீடு

தனக்கென்று ஒரு தனித்தன்மையுடன் வெளியான இதழ் ஜூனியர் விகடன். நகரத்துச் செய்திகளை மட்டுமல்லாது கிராமப் புறச் செய்திகளையும் முதன்மைப்படுத்தி வெளியிட்டது. சுனாமி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது வாசகர்கள் மூலம் நிதி திரட்டி பலரது வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தது. ஜூனியர் விகடனைப் பின்பற்றி அதனை முன்னோடியாகக் கொண்டு பல புலனாய்வு இதழ்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டி முன்னோடிக் குற்றப் புலனாய்வு இதழ்களுள் ஒன்றாக ஜூனியர் விகடன் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.