ஜி.ஏ. நடேசன்

From Tamil Wiki
Revision as of 23:16, 21 January 2024 by ASN (talk | contribs) (Para Added)
ஜி.ஏ. நடேசன்

ஜி.ஏ. நடேசன் (கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன்) (ஆகஸ்ட் 24, 1873 – ஜனவரி 10, 1949) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீர்ர். காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. ஆங்கிலத்தில் பல புத்தகங்களைப் பதிப்பித்தார். இதழ்களை நடத்தினார். காந்திக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். காந்தி நடேசனுக்கு எழுதிய கடிதங்கள் குறிப்பித்தகுந்தவை.

பிறப்பு, கல்வி

கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன் எனும் ஜி.ஏ. நடேசன், தஞ்சை திருவையாறு அருகே உள்ள கணபதி அக்ரஹாரத்தில், ஆகஸ்ட் 24, 1873 அன்று, அண்ணாதுரை ஐயர் – அன்னபூரணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார்.  நடேசனின் தந்தை இரண்டு வயதிலேயே காலமானார். நடேசன் தாய்மாமாவின் ஆதரவுடன் பள்ளிக் கல்வியை கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் படித்தார். இடைநிலை வகுப்பை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜி.ஏ. நடேசன், மணமானவர். மனைவி, மங்களம்மாள். மகன்கள் மணியன் நடேசன், சந்திரன் நடேசன்.

ஜி.ஏ. நடேசன் நூல்

இலக்கிய வாழ்க்கை

ஜி.ஏ. நடேசன் தனது இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை, தலையங்கங்களை எழுதினார். நடேசன் எழுதிய நூலான, ‘What India wants – Autonomy within the Empire’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அவர் எழுதிய ஒரே நூலாக இந்நூல் கருதப்படுகிறது. பிற பெரும்பாலான நூல்கள் தொகுப்பு நூல்களாகவே வெளிவந்தன.  இந்நூலில் அரசியலமைப்புச் சீர்திருத்தம், சுதந்திரம், சுயாட்சி, தனிமனித சுதந்திரம் போன்றவற்றின் தேவை குறித்து விரிவாக எழுதிக் கவனமேற்படுத்தினார். வில்லியம் வெட்டர்பனுக்கு அந்நூலைச் சமர்ப்பித்திருந்தார் நடேசன்.

காந்தி, தாதாபாய் நௌரோஜி, மதன்மோகன் மாளவியா, வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, அன்னிபெசண்ட் உள்ளிட்ட பலர் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தனர்.

ஜி.ஏ. நடேசன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். அவை அனைத்துமே ஆங்கில நூல்கள்.

பதிப்பு

ஜி.ஏ.நடேசன், 1897-ல், ஜி.ஏ. நடேசன் & கோ என்ற பதிப்பக நிறுவனத்தை நிறுவினார். அதற்கு முன் ’லட்சுமி கம்பெனி’ என்ற பெயரில் ஒரு புத்தக நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார். அதுவே பின்னர் ‘நடேசன் & கோ’வாக உருமாற்றம் பெற்றது. Indian Politics என்பது நடேசன் & கோ வெளியிட்ட முதல் நூல். அது 1898-ல் வெளிவந்தது. ஜி.ஏ. நடேசன் தொடர்ந்து தன் பதிப்பகம் மூலம் தேசிய விடுதலை உணர்வுகளை வளர்க்கும் நூற்றுக்கணக்கான நூல்களை மலிவு விலையில் வெளியிட்டார்.

அன்னிபெசன்ட் மொழிபெயர்த்த கீதை தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை ஜி.ஏ.நடேசன் ஆங்கிலத்தில் வெளியிட்டார். ஞானியர் வரிசை, சுதந்திரப் போராளிகள் வரிசை, கல்வியாளர்கள் வரிசை, இலக்கியவாதிகள், வெளிநாட்டு அறிஞர்கள், சமய, தத்துவவாதிகள் எனப் பலரைப் பற்றிய நூல்களை வெளியிட்டார். தமிழில் ஜி.ஏ. நடேசன் சில நூல்களை மட்டுமே பதிப்பித்தார்.

இதழியல்