சிறுவாணி வாசகர் மையம்
சிறுவாணி வாசகர் மையம் கோயம்புத்தூரிலிருந்து செயல்பட்டு வரும் ஓர் இலக்கிய அமைப்பு. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், ஜனவரி 1, 2017-ல் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. மாதம் ஒரு நூல் என்பதை நோக்கமாகக் கொண்டு, சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களுக்கு கலை, இலக்கிய, வரலாற்று நூல்களை அறிமுகம் செய்கிறது.
தோற்றம்
எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன் மற்றும் வ. ஸ்ரீநிவாசன் ஆலோசனையின்படி, லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய ‘வாசகர் வட்டம்’ இலக்கிய அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, கோவையில், ஜனவரி 1, 2017-ல், சிறுவாணி வாசகர் மையம் தோற்றுவிக்கப்பட்டது.
நோக்கம்
சிறுவாணி வாசகர் மையம் கீழ்க்காணும் கொள்கைகளைத் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
- எழுத்துலக மேதைகளின் படைப்புகளை இளைய தலைமுறைக்குக் குறைந்த வருடக் கட்டணத்தில் கிடைக்கச் செய்தல்.
- மறுபதிப்பு இல்லாத நூல்களை மீண்டும் பதிப்பித்தல்
- வணிக நோக்கில்லாமல் சிறந்த படைப்புகளை வாசிப்பவரின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்தல்.
- வாசிப்பின் ருசியை பரவலாக்குதல்.
அடிப்படை நோக்கங்கள்
- தேச விரோதமான எழுத்துகளை வெளியிடாதிருத்தல்
- சாதி, மத, இனம் முதலிய வேற்றுமைகளை உருவாக்கும் படைப்புகளை வெளியிடாதிருத்தல்
- பெண்களை இழிவுபடுத்தும் விதமான எழுத்துகளைத் தவிர்த்தல்
அமைப்பாளர்கள்
எழுத்தாளரும், காந்தியவாதி T.D.திருமலை அவர்களின் மகளுமான திருமதி சுபாஷிணி, சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவராக உள்ளார். நாஞ்சில்நாடன் இம்மையத்தை வழிநடத்துகிறார். கோவையில் RAAC அமைப்பின் செயலர் திரு. ஆர். ரவீந்திரன், சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான திரு.வ. ஸ்ரீநிவாசன் ஆகியோர் சிறப்பு ஆலோசகர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். ஓவியர் ஜீவா, சிறுவாணி வாசகர் மைய நூல்களுக்கான அட்டைப் படங்களை வடிவமைக்கிறார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.