under review

ராணிமைந்தன்

From Tamil Wiki
ராணிமைந்தன் (படம் நன்றி: SocialTalkies Youtube Page)

ராணிமைந்தன் (கு. ராதாகிருஷ்ணன்) (பிறப்பு: அக்டோபர் 15, 1944) தமிழக எழுத்தாளர். தமிழக ஆளுமைகளின் வாழ்க்கைவரலாறுகளை எழுதியவர் என புகழ்பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கு. ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயரை உடைய ராணிமைந்தன், அக்டோபர் 15, 1944-ல் பிறந்தார். இளங்கலை வணிகவியல் பயின்றார். Certified Associate of Indian Institute of Bankers நிறைவு செய்தார்.

ராணிமைந்தன் இளம்வயதுப் படம் (நன்றி: தினமணி)

தனி வாழ்க்கை

ராணிமைந்தன் மனைவி கஸ்தூரி (அமரர்). மகன்கள்: நிர்மல், விஜய்.

ராணி மைந்தன், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளையில் அக்டோபர் 1965 முதல் மார்ச் 1997 வரை 32 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் இதழியலாளராக பணியாற்றினார்.

இதழியல்

பின் லண்டன் பி.பி.சியின் தமிழ் வானொலிப் பிரிவான 'தமிழோசை’ யில் நல்லுறவு அதிகாரியாகச் சென்னையிலிருந்து பணிபுரிந்தார். ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகி வரும் 'தமிழ் முழக்கம்’ பண்பலை வானொலியில் செய்தி வாசிப்பாளராகச் சென்னையிலிருந்து பணியாற்றினார்.

சுதந்திரப் பத்திரிகையாளராக ‘சாவி இதழில் பணியாற்றினார். கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். சாவி ஆசிரியராகப் பணிபுரிந்த 'தினமணி கதிர்', 'குங்குமம்' இதழ்களில் பல பேட்டிக் கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், நாட்டு நடப்புகளை எழுதினார்.

ராணிமைந்தன் நூல்கள்
சிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை புத்தக வெளியீடு
தனிமரத் தோப்பு: எம்.பி. நிர்மல் புத்தக வெளியீடு (படம் நன்றி: SocialTalkies Youtube Page)
அப்பச்சி ஏவி.எம். புத்தக வெளியீட்டு நிகழ்வு (படம் நன்றி: SocialTalkies Youtube Page)

இலக்கிய வாழ்க்கை

சாவி இதழில் மொழிபெயர்ப்புத் தொடராக எழுதிய ‘நாயர்ஸான்’ என்பதுதான் இவரது முதல் வாழ்க்கை வரலாற்று நூல். தொடர்ந்து சாவியின் வேண்டுகோளுக்கிணங்க ‘ராசாராம்-60’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். சாவியினுடனான தனது அனுபவங்களை ‘சாவி-85’ என்ற பெயரில் எழுதினார். சாவியின் மறைவுக்குப் பின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதுவதில் முனைப்புக் கொண்டார். எம்.பி. நிர்மல், என். கிருஷ்ணசாமி, ஏவி.மெய்யப்பன், எஸ்.பி. முத்துராமன் எனப் பலரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தினார்.

ராணிமைந்தன்30-க்கும் மேற்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். 70-க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார். தனது வாழ்க்கை அனுபவங்களைத் தற்போது நூலாக எழுதி வருகிறார்.

எழுத்துமுறை

”வாழ்க்கை வரலாறு என்பது ஒருவரது சாதனைகளை மட்டும் சொல்வதல்ல; அவரது சரிவுகள், தோல்விகள், வீழ்ச்சி, அதிலிருந்து அவர் எழுந்து வந்த விதம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது வாசிப்பவர்களுக்கு ஒரு பாடத்தைத் தருவதாக, அனுபவத்தைத் தருவதாக அமையும். அந்தப் பாணியையே நான் பின்பற்றி எழுதி வருகிறேன்” என்கிறார்.

ராணிமைந்தனின் எம்.எஸ்.வி. நூல் குறித்து விமர்சகர் சிலிகான்ஷெல்ஃப் ஆர்வி, “ராணிமைந்தன் சுவாரசியமான பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். இந்தப் புத்தகம் வாழ்க்கை வரலாறு இல்லை. இது எம்எஸ்வியின் புகழ் பாடும் புத்தகம்.” என்கிறார்.

விருதுகள்

  • சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2002)
  • சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழ் வாகைச் செம்மல் விருது (2003)
  • ஃபிரான்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய நூல் வேந்தர் விருது (2006)
  • அகில இந்திய சமூக நல அமைப்பு, புதுச்சேரி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2009)
  • ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய சான்றோர் விருது (2010)
  • தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது (2011)
  • சென்னை தேவன் அறக்கட்டளை வழங்கிய தேவன் நினைவுப் பதக்கம் (2011)
  • சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்கான சேக்கிழார் விருது (2016)
  • இலக்கியச் சிந்தனை வழங்கிய, 2017 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான விருது - 'ராம்கோ ராஜா' நூலுக்காக.
  • சென்னை கம்பன் கழகம் வழங்கிய திருமதி சி.எம்.பிரேமகுமாரி நினைவுப்பரிசு (2018)
எழுத்தாளர்கள் சாவி, சுஜாதா, சிவசங்கரி, ரவிபிரகாஷ் உடன் ராணிமைந்தன்

இலக்கிய இடம்

ராணிமைந்தன் வாழ்க்கைவரலாறுகள் எழுதுபவராக அறியப்படுகிறார். . ராணிமைந்தனின் வாழ்க்கை வரலாறுகள் இதழியல்செய்திகள் வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் ஆளுமைகளின் வாழ்க்கைச்சித்திரத்தை அளிப்பவை. பொதுவாசகர்களுக்கு உரியவை. ஆளுமைகளின் வெற்றியையும் புகழையும் மட்டும் முன்வைப்பவை.

ராணிமைந்தன் புத்தகங்கள்

நூல்கள்

  • நாயர்ஸான்
  • ராசாராம் - 60
  • சாவி 85
  • எம்.பி. நிர்மல்
  • ஜஸ்டிஸ் ஜெகதீசன்
  • முஸ்தபா
  • தடைகள் பல தாண்டி...
  • ஊடகத் தேனீ ஸ்ரீதர்
  • என் காவல் சுவடுகள்
  • ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்
  • மலைச்சாமி ஐ.ஏ.எஸ்.
  • டாடா ஸ்டீல்
  • ராம்கோ ராஜா
  • பயணங்கள் பாடங்கள்
  • சிவாஜி: சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை
  • அப்பச்சி ஏவி.எம்.
  • ஏ.வி.எம். எங்கள் பார்வையில்
  • ஏவி.எம். தந்த எஸ்பி.எம்.
  • உழைப்பால் உயர்ந்தவர்
  • எலும்போடு ஒரு வாழ்க்கை
  • பிரசாத் என்றொரு தாய்
  • இறைவன் நெய்த நான்
  • நான் - இவர்கள்
  • இந்திய மலர்கள் இரண்டு
  • நோக்கமிகு வாழ்க்கை
  • டாக்டர் பி. கே. பாஸ்கரன்
  • நான்-மருத்துவம்-மற்றவை
  • எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
  • நிர்வாக ஆளுமை என். ராமதாஸ் வாழ்க்கை வரலாறு
  • ஒரு நீதியரசரின் நெடும் பயணம்
  • சங்கீதப் பெருங்கடல் -பாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாறு
  • ஐ.பி.எம்.
  • என் வாழ்க்கை ஓடம் வழங்கிய பாடம்
  • திருமறைக்காட்டுத் திருமகன்
  • சுல்தானா
  • கலைமாமணி வி.சி. குகநாதன்
  • என். கிருஷ்ணசாமி
  • அடையாறில் இன்னோர் ஆலமரம்
  • வேளாண் காதலர் வெங்கடபதி
  • மதிஒளி என்றொரு மந்திரம்
  • இலக்கிய வீதி இனியவன் வாழ்க்கை வரலாறு
  • வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு
  • இசை வானில் ஒரு பயணம் - பிரமீளா குருமூர்த்தி
  • அ.அ.ஜின்னா தி,மு.க.முன்னாள் எம்.பி.வாழ்க்கைப் பாதை

உசாத்துணை


✅Finalised Page