பெரியார் காவியம் (இரா. மணியன்)
பெரியார் காவியம் (2009), ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையை, எண் சீர் விருத்தப் பாக்களில் கவிதை வடிவில் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர் முனைவர் இரா. மணியன். இந்நூல் தமிழக அரசின் சிறப்புப் பரிசைப் பெற்றது.
(’பெரியார் காவியம்’ என்ற இதே தலைப்பில், பா. நாராயணன், நா. காமராசன் உள்ளிட்ட சிலரும் காவிய நூல்களை எழுதினர்)
பிரசுரம் வெளியீடு
பெரியார் காவியம் நூல், 2009-ல், சீதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதனை இயற்றியவர் முனைவர். இரா. மணியன்.
ஆசிரியர் குறிப்பு
இரா. மணியன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நத்தம் என்ற கிராமத்தில், ஜூன் 1, 1932-ல், இராமையா – சரசுவதி இணையருக்குப் பிறந்தார். இளங்கலை, முதுகலை, மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்ற இவர் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
புறநானூறு ஓர் அழகோவியம், அறிஞர் அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா கோவை, வ.உ.சி. வாழ்க்கை வரலாறு, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு எனப் பல நூல்க்ளை எழுதினார். இரா. மணியன் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று பெரியார் காவியம்.
நூல் அமைப்பு
பெரியார் காவியம் நூல், ஏழு காண்டங்களையும், 55 படலங்களையும் கொண்டுள்ளது. இந்நூலில் 1000 ஆசிரிய விருத்தப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
காண்டங்கள்
- ஈரோட்டுக் காண்டம்
- பேராயக் காண்டம்
- சுயமரியாதைக் காண்டம்
- திராவிடர் காண்டம்
- காமராசர் காண்டம்
- அண்ணா காண்டம்
- கலைஞர் காண்டம்