being created

நடராஜகுரு

From Tamil Wiki
Revision as of 17:53, 25 September 2023 by Ramya (talk | contribs) (Created page with "நடராஜகுரு (நடராஜன்) (1895 - 1973) சிந்தனையாளர், தத்துவ அறிஞர், நாராயண குருவின் மாணவர். == பிறப்பு, கல்வி == ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்(SNDP) அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகனா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நடராஜகுரு (நடராஜன்) (1895 - 1973) சிந்தனையாளர், தத்துவ அறிஞர், நாராயண குருவின் மாணவர்.

பிறப்பு, கல்வி

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்(SNDP) அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகனாக 1895-இல் நடராஜன் பிறந்தார். இலங்கை கண்டியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். சென்னை ராஜதானி கல்லூரியில் உயிரியலிலும் நிலவியலிலும் முதுகலை பட்டம் பெற்றார்.

ஆன்மிக வாழ்க்கை

முதுகலை பட்டம் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடராஜ குரு நாராயணகுருவை சந்தித்தார். அவருடன் வர்க்கலை ஆசிரமத்தில் தங்கினார். வர்க்கலை நாராயண உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தார். அவருக்கும் நாராயணகுருவின் அமைப்புக்கும் நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டன. எஸ்.என்.டி.பி அமைப்பு ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்து 1921இல் அவ்வமைப்பை விட்டு முழுமையாக வெளியேறினார்.

பல இடங்களில் அலைந்து திரிந்த நடராஜ குரு ஊட்டிக்கு வந்துச்சேர்ந்தார். ஃபெர்ன் ஹில் என்ற இடத்தில் நாராயணகுருகுலம் ஒன்றை 1923இல் நிறுவினார். அங்கே அனாதைக்குழந்தைகளுக்கான ஒரு கல்விநிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் அதை முன்னெடுக்க முடியவில்லை. அந்நிலையில் நாராயணகுருவின் உடல்நிலை மோசமானது. நடராஜகுரு மீண்டும் வர்க்கலைக்குச் சென்று நாராயணகுருவுடன் தங்கினார்.

தத்துவம்

மேற்கத்திய தத்துவம் கற்க பிரான்ஸ் போகும்படி அவரை நாராயணகுரு கேட்டுக் கொண்டார். லண்டனுக்குச் செல்வதற்காக கப்பலில் ஏரிய நடராஜ குரு கப்பலில் ஒருவர் சொல்லிய ஆலோசனையின்படி ஜெனிவா சென்றார். அங்கே கிளாண்ட் என்ற இடத்தில் இருந்த ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து இயற்பியல் கற்பித்தார். பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றார்.

நடராஜகுரு பாரீஸில் உள்ள சார்போன் பல்கலையில் முனைவர் படிப்புக்கு பதிவு செய்துகொண்டார். உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார."Le Facteur Personnel dans le Processus Educatif (Personal factor in Education)" என்ற தலைப்பில் ஐந்தாண்டுகள் ஆராய்ச்சி செய்து தன் ஆய்வை சமர்ப்பித்தார். குருசீட உறவைப்பற்றியது அந்த ஆய்வேடு. அவருக்கு சிறப்பு பாராட்டுகளுடன் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் அவர் காந்தியையும் தாகூரையும் சந்தித்தார்.

1933ல் நடராஜகுரு இந்தியா திரும்பினார். இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தபின் மீண்டும் ஊட்டிக்கே திரும்பிவந்து ஊட்டி நாராயணகுருகுலத்தை மீண்டும் ஆரம்பித்தார். அங்கே கிட்டத்தட்ட 15 வருடங்கள் தங்கியிருந்தார். ஸ்காட்லாந்துகாரரான ஜான் ஸ்பியர்ஸ் நடராஜகுருவின் முதல் மாணவரானார்.

அமைப்புப்பணிகள்

ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி

அந்த செயல்பாட்டின் நீட்சியாக உலகசிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பயிலும் நோக்குடன் ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். ஒட்டுமொத்த தத்துவப்பார்வையை கற்பிக்கக்கூடிய ஒன்றாக இந்த கல்விநிறுவனம் செயல்படவேண்டும் என நடராஜகுரு ஆசைப்பட்டார்.

நாராயணகுருகுலம்

1928ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிராதனசீடர் குமாரனாசான் ஏற்கனவே இறந்துவிட்டார். சகோதரன் அய்யப்பன், டி.கெ.மாதவன் போன்ற பலர் எஸ்.என்.டி.பி அமைப்பை விட்டு விலகிவிட்டனர். அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில்முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாறியது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது.

ஆகவே நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய நாராயணகுருகுலம் எனும் அமைப்பை நிறுவினார். அதன் தலைமையகமும் வர்கலாவில்தான் அமைந்திருந்தது. சார்போனில் நடராஜ குருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரனதும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். நடராஜ குருவே நாராயணகுருவின் செய்தியை உலகம் முழுக்க கொண்டு சென்றவர்.

நாராயணகுருகுலம் நடராஜகுருவுக்குப் பின்னர் அவரது மாணவரான நித்ய சைதன்ய யதியால் தலைமைதாங்கப்பட்டது. அதன் தலைமையிடம் கேரளத்தில் வர்க்கலையில் உள்ளது. நித்ய சைதன்ய யதியின் மறைவுக்குப் பின்னர் அதன் தலைவராக முனி நாராயணபிரசாத் உள்ளார்.

மாணவர்கள்

  • ஜான் ஸ்பியர்ஸ்
  • மங்கலானந்தா
  • சிதம்பர தீர்த்தா
  • வினய சைதன்யா
  • குரு ஃப்ரெடி
  • நித்ய சைதன்ய யதி
  • முனி நாராயண பிரசாத்

எழுத்து

நடராஜகுரு ஆங்கிலத்தில் மட்டுமே அவரது நூல்களை எழுதியிருக்கிறார். தமிழில் அவரது நூல்கள் எவையும் வெளிவரவில்லை. ஊட்டி ஃபெர்ஹில் குருகுலத்தில் தங்கியிருந்து நடராஜ குரு THe Word Of Guru' பகவத்கீதை உரை போன்ற நூல்களை எழுதினார். 1950ல் நடராஜகுரு உலகக் குடிமகன் என்று தன்னை அழைத்துக்கொண்ட காரி டேவிஸை சந்தித்தார். எந்த நாட்டுக்கும் குடியுரிமை கொள்ளாத ஒரு கலாச்சாரத்துக்காக அவர் போராடிக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து நடராஜ குரு பணியாற்றினார். ஓர் உலக அரசுக்கான முன்வரைவை அவர்கள் உருவாக்கினர். 'An Integrated Science of the Absolute' என்ற நூலை இரு தொகுதிகளாக எழுதி முடித்தார்.

மறைவு

நடராஜ குரு 1973இல் காலமானார். அவரது சமாதி வற்கலாவில் உள்ளது. அங்கே அவர் நினைவாக ஒரு பிரார்தனைக்கூடமும் தத்துவ நூலகமும் அமைந்துள்ளது.

நடராஜகுரு பற்றிய நூல்

நித்ய சைதன்யயதியுடன் நடராஜ குரு நிகழ்த்திய பயணத்தைப் பற்றி நித்ய சைதன்ய யதி ’குருவும் சீடனும்’ என்ற நூலாக எழுதினார். ப.சாந்தி தமிழில் மொழிபெயர்த்தார்.

நூல்கள் பட்டியல்

  • The Word of the Guru: Life and Teachings of Narayana Guru
  • Vedanta Revalued and Restated
  • Autobiography of an Absolutist
  • The Bhagavad Gita, Translation and Commentary
  • An Integrated Science of the Absolute (Volumes I, II)
  • Wisdom: The Absolute is Adorable
  • Saundarya Lahari of Sankara
  • The Search for a Norm in Western Thought
  • The Philosophy of a Guru
  • Memorandum on World Government
  • World Education Manifesto
  • Dialectical Methodology
  • Anthology of the Poems of Narayana Guru

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.