under review

இலக்கியவட்டம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 17:35, 24 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Standardised)

இலக்கியவட்டம் (1963- ) க.நா.சுப்ரமணியம் தொடங்கி நடத்திய இலக்கியச் சிற்றிதழ். நவீன கவிதை, சிறுகதை பற்றிய விவாதங்களுக்காக இலக்கியத்தில் கவனிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து இலக்கியவட்டம் என்னும் இன்னொரு சிற்றிதழ் வெளிவந்துள்ளது (பார்க்க இலக்கியவட்டம் மலேசியா)

வரலாறு

சூறாவளி, சந்திரோதயம் இதழ்களை நடத்திய க. நா. சுப்ரமண்யம் இலக்கிய வட்டம் என்னும் மாதம் இருமுறை இதழை நவம்பர் 22, 1963-ல் தொடங்கினார். ‘பிரபலஸ்தர்களின் பாராட்டுக்கள் தேவையில்லை; சாஹித்ய அகாடமிக்காரர்களின் பரிசுகளோ பதவிச் சிபாரிசுகளே தேவையில்லை. இலக்கியத்தரம் உயர விமர்சகர்களும் வாசகர்களும் போதும் . . . அப்படிப்பட்ட ஒரு ஜாதியைத் தமிழில் தோன்றச் செய்வதற்காகவே இலக்கிய வட்டம்’ உருவெடுக்கிறது என்று உண்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தன் நிலைப்பாட்டை முதல் இதழ்த் தலையங்கத்தில் எழுதினார்.

1959-ல் வெளிவந்த எழுத்து இதழில் க.நா.சுப்ரமணியம் தொடர்ந்து எழுதிவந்தார். பின்னர் அதில் இருந்து விலகினார். எழுத்து இதழுக்கு மாற்றாக அவர் ஆரம்பித்த இதழ் இலக்கிய வட்டம். ஏப்ரல் 30, 1965-ல் தன் 38-வது இதழுடன் தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது இலக்கிய வட்டம்

உள்ளடக்கம்

நவீன இலக்கியம் ஓர் இயக்கமாக ஆகவேண்டும் என்னும் எண்ணத்தை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தவர் க.நா.சுப்ரமணியம். ’உலக இலக்கியப் பரப்பையும், அதில் சில பகுதிகளையுமாவது எடுத்துச் சொல்ல அவ்வப்போது இலக்கிய வட்டம் முயன்றுவரும்’ என்று ஜனவரி 3, 1964 இதழில் எழுதினார். உலக இலக்கியாசிரியர்கள் பற்றிய குறிப்புகளையும் மொழிபெயாப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டது இலக்கிய வட்டம். இதே காலகட்டத்தில் வெளிவந்த எழுத்து இதழில் புதுக்கவிதை இயக்கம் தீவிரமாக நடந்துவந்தது. இலக்கியவட்டத்தில் கவிதைகள் குறைவாகவே வெளிவந்தாலும் நவீனத்துவக் கவிதைக் கோட்பாடுகளை வெளியிட்டு வந்தது இலக்கியவட்டம்

சுப்பிரமணிய பாரதியார், கு. அழகிரிசாமி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ஆனந்த குமாரசாமி இவர்கள் பற்றி இலக்கிய வட்டம் தனிச் சிறப்பிதழ்கள் வெளியிட்டது. நவீன இலக்கிய விமர்சனத்தை வெளியிட்ட இலக்கியவட்டம் க.நா.சுப்ரமணியத்தின் இலக்கிய பரிந்துரைப் பாணியை கடைப்பிடித்தது. கல்வித்துறையாளர்களை கடுமையாக தாக்கினாலும் ரசனை அடிப்படையில் மரபுக்கவிதையை அணுகிய டி.கே.சிதம்பரநாத முதலியாருக்குச் சிறப்பிதழ் வெளியிட்டது

தொகுப்பு

க.நா.சுப்ரமணியம் நடத்திய இலக்கிய வட்டம் இதழ்கள் சந்தியா பதிப்பகத்தால் 2004-ல் தொகுப்பாக வெளியிடப்பட்டன. தொகுப்பு கி.ஆ.சச்சிதானந்தம்

இலக்கிய இடம்

இலக்கிய வட்டம் இன்று அதில் வெளிவந்த நவீனக் கவிதை சார்ந்த விவாதங்களுக்காகவும், ரசனைவிமர்சனம் சார்ந்த கட்டுரைகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறது

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.