standardised

இந்திரகாளியம்

From Tamil Wiki
Revision as of 16:37, 24 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)

இந்திரகாளியம் (பொ.யு. 5-ஆம் நூற்றாண்டு) இந்திரகாளியம் என்னும் பெயரில் இரண்டு இலக்கண நூல்கள் உள்ளன. முந்தியது இசைத்தமிழ் நூல். பிந்தியது பாட்டியல் நூல். பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்வகைமையின் இலக்கணத்தைப் பேசும் துறை.

இந்திரகாளியம் இசைத்தமிழ் நூல்

யாமளேந்திரர் என்பவரால் எழுதப்பட்டது.  இது இசை இலக்கணம் கூறும் நூல். இப்பெயருள்ள இசைத்தமிழ் நூலை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியம்” என்று அவர் எழுதுகிறார். இது அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை எழுதுவதற்கு உதவியாக இருந்தது.

இந்திரகாளியம் - பாட்டியல் நூல்

இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலைப் பற்றி பன்னிரு பாட்டியல் என்னும் நூல் கூறுகிறது. சில பாடல்களை எடுத்து தொகுத்துள்ளது. இந்திரகாளியர் சமணர் என்று கருதப்படுகிறது. இந்த நூல் இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியலிலும், நவநீதப் பாட்டியலிலும் இருந்து இதன் 40 பாடல்கள் வரை எடுக்கப்பட்டுள்ளன. வச்சணந்திமாலை எனவும் வழங்கும் வெண்பாப் பாட்டியல் என்னும் பாட்டியல் நூல் இந்திரகாளியத்தை அதன் முதல் நூலாகக் குறிப்பிடுவதால் இந்நூல் அதற்கு முற்பட்டது. இது பொ.யு. 5-6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்

அகத்தியர் மரபும் இந்திரகாளிய மரபும்

சில நூல்களில் அகத்தியர் மரபும் இந்திரகாளிய மரபும் வேறுவேறு கிளைகள் என்று கூறப்படுகின்றன. அவிநயம் அகத்திய இலக்கணத்தின் வழிவந்தது என்று கூறப்படுகிறது. அகத்தியர் பாட்டியல் மரபின் முதல் இலக்கண நூலை படைத்தார் என்றும், அவருடைய மாணவர்கள் இரு பிரிவாயினர் என்றும் பிற்கால உரைகளில் உள்ளது. மு.அருணாச்சலம் அதை ஏற்பதில்லை. அகத்தியர் மரபு ஒரு தொன்மமாகவே சொல்லப்படுகிறது என்கிறார். பல அகத்தியர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். பொதுவாக தொல்காப்பிய முறைப்படி மூன்று இயல்களுக்குள் இலக்கணம் அமைப்பது ஒரு மரபாகவும் பஞ்சலக்ஷணம் என ஐந்து இயல்களை கொண்டு அமைப்பது இன்னொரு மரபாகவும் நீடித்தது என்கிறார்.[1]

உசாத்துணைகள்

இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.