திருவேங்கடநாதன் வண்டு விடு தூது
திருவேங்கடநாதன் வண்டு விடு தூது (1981) தூது இலக்கிய நூல்களுள் ஒன்று. தென்பாண்டி நாட்டில் உள்ள திருவழுதி என்னும் வளநாட்டை ஆண்ட குறுநில மன்னன் திருவேங்கடநாதன், இந்நூலின் பாட்டுடைத் தலைவன். திருவேங்கடநாதன் உலா வரும்போது, அவனைக் கண்டு காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதல் நிறைவேற வண்டைத் தூதாக அவனிடம் அனுப்புவதே திருவேங்கடநாதன் வண்டு விடு தூது நூல். இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு. இந்நூலில், காப்புச் செய்யுள் தவிர்த்து 327 கண்ணிகள் அமைந்துள்ளன.
பதிப்பு, வெளியீடு
திருவேங்கடநாதன் வண்டு விடு தூது நூல், உ.வே. சாமிநாதையர் நூலகச்சுவடியில் ஓலைச்சுவடி வடிவில் பாதுகாக்கப்பட்டது. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, பதிப்பாசிரியர் மு. சண்முகம்பிள்ளை மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர் இரா. நாகசாமியின் முயற்சியால், 1981-ல், இச்சுவடியை நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது.
இதே நூல் பற்றிய ஆய்வை, பேராசிரியர், முனைவர் வீ. அரசு நெறியாள்கையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டத்திற்காக, வே. கார்த்திகேயன் ஆய்வு செய்து, மே 2003-2004 கல்வியாண்டில், பதிப்பித்துள்ளார்.
மேற்கண்ட இரண்டு நூல்களுக்கிடையேயும் காப்புச் செய்யுள் தொடங்கி, பாடல்களின் சொற்கள், அமைப்பு, எண்ணிக்கை எனப் பல வேறுபாடுகள் உள்ளன.
ஆசிரியர் குறிப்பு
திருவேங்கடநாதன் வண்டு விடு தூது நூலை எழுதிய ஆசிரியர் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இவர், மன்னன் திருவேங்கடநாதனால் ஆதரிக்கப்பட்டவர் என்ற செய்தியையும், தமிழ் மற்றும் வடமொழி அறிந்தவர் என்பதும் நூல் மூலம் அறிய முடிகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.