கீழடி
கீழடி: மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் வைகை நதீக்கரையை ஒட்டி அமைந்த ஊர். கீழடி சங்க கால நகர நாகரிகமும், தொழிற் பகுதியுமாக அமைந்த இடமென பொ.யு. 2017-2018 ஆண்டுகளில் தொல்லியல் துறையால் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
கீழடி தற்போது சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர். கீழடி வைகையாற்றங்கரையில் மதுரையிலிருந்து தென்கிழக்காக பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது.[1] 90 51' 40” வடக்கு அட்ச ரேகைக்கும், 780 11’70’’ கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமைந்த தொடக்க வரலாற்றுக் கால நகர குடியிருப்பு மற்றும் தொழிற்கூடப் பகுதி.
கீழடியின் அகழ்வு பகுதியிலிருந்து வைகையாறு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கீழடிக்கு கிழக்கு பகுதியில் மணலூர் கிராமமும் அதன் வடக்கில் கண்மாய் ஒன்றும் உள்ளது. தெற்கில் அகரம் என்னும் சிற்றூரும், மேற்கில் கொந்தகை என்ற ஊரும் உள்ளது.
அகழாய்வு மேற்கொண்ட ஆண்டு
கீழடியில் 2014-15, 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பிரிவின் கீழுள்ள பெங்களூரு பிரிவு அகழாய்வு மேற்கொண்டது. கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வை பொ.யு. 2017-18 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டது. அதை தொடர்ந்து இறுதியாக பொ.யு. 2018-19 ஆண்டுகளில் ஐந்தாம் கட்ட முறையான தொல்லியல் அகழாய்வு நிகழ்ந்து நிறைவு பெற்றுள்ளது.
கண்டுபிடிப்புகள்
நான்காம் கட்ட அகழாய்வு
கீழடியில் பொ.யு 2017-18ல் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செங்கற் கட்டுமானம், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் அமைந்த கூரை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
தங்க அணிகலன் பகுதிகள், செம்பு பொருட்கள், இரும்புக் கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், மணிக்கற்கள்[2] ஆகியவை கிடைத்துள்ளன. அக்கால மட்பாண்ட ஓடுகள்[3], ரௌலட்டட் மட்பாண்டங்கள், அரட்டைன் ஓடுகள் வெளிக்கொணரப்பட்டன. மட்பாண்டங்கள் பலவற்றில் சுடுவதற்கு முன்பு பொறிக்கப்பட்ட கீறல்கள், குறியீடுகள், வடிவங்கள் காணகிடைக்கின்றன.
அகழாய்வில் ஐம்பதற்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கிடைத்துள்ளன.
கீழடியின் காலம்
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரத்தில் அமைந்த பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் (Beta Analytic Testing Laboratory) ரேடியோ கார்பன்டேட்டிங் முறையில் கால கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆறு கரிம மாதிரிகளின் காலம் பொ.யு.மு. 6-ஆம் நூற்றாண்டிற்கும், பொ.யு.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொருட்கள் நிலத்திலிருந்து 353செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்றவை. 200 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம பொருட்களின் காலம் பொ.யு.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கு முன் பகுதி என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இக்காலம் கணிக்கப்பட்ட அடுக்கிற்கு மேலும் கீழும் மண்ணடுக்குகள் காணப்படுவதால் கீழடி பண்பாட்டின் காலம் பொ.யு.மு 6-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு. 1-2 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளது.
கீழடியின் ஆய்வு முடிவுகளை கவனமாக ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா. ராஜன், “பழந்தமிழரின் தொன்மை தொடர்பாக இதுவரை நிலவி வந்த சில கேள்விகள் மற்றும் கருதுகோள்களுக்கு உறுதியான விடைகள்/சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன” என தன் ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார். பொதுவாக தமிழ்நாட்டில் தொடக்க வரலாற்று காலம் பொ.யு.மு. 3-ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது என்றும், தமிழ்நாட்டில் இரண்டாவது நகரமயமாதல் நிகழவில்லை என்றும் நிலவி வந்த கருத்துகள் கீழடி ஆய்வு முடிவுகள் மூலம் மறுபரீசிலனை செய்யப்படுகின்றன.
அடிக்குறிப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.