under review

பெ.சுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 19:52, 16 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
பெ.சுந்தரம் பிள்ளை

பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ) (4 ஏப்ரல்1855 - 26 ஏப்ரல் 1897). தமிழறிஞர், தமிழ் வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டாய்வாளர், அறிவியல் கட்டுரையாளர், நாடக ஆசிரியர், கவிஞர். இவர் எழுதிய மனோன்மணீயம் என்ற நாடகத்தின் காரணமாக இவர் பெயரின் முன்னொட்டாக “மனோன்மணீயம்” அமைந்தது. கடந்த 40 ஆண்டுகளாகப் பள்ளிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படும் ’நீராரும் கடலுடுத்த’ பாடல் இவரால் எழுதப்பட்டது.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டுப் பகுதியிலிருந்து கேரளம், ஆலப்புழைக்குக் குடியேறிய தெக்கேகரக் குடும்பத்தினரில் ஒருவர் துணி வணிகரான அர்ஜுனன் பிள்ளையின் மகனான பெருமாள் பிள்ளைக்கும் மாடத்தி அம்மாளுக்கும் ஏப்ரல் 5, 1855-ல் சுந்தரம்பிள்ளை பிறந்தார். 1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். சுந்தரம் பிள்ளை இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவருடைய தமிழாசிரியர் நாகப்பட்டினம் நாராயணசாமி. 1876ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார்.

தனி வாழ்க்கை

சுந்தரம் பிள்ளை 1877ல் இருந்து ஆசிரியராக பணியாற்றினார். திருநெல்வேலி ஆங்கில தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலை பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார். பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

மூன்றாண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார்.

1891இல் சுந்தரம் பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயர்கலைக் கழக உறுப்பினராக இருந்தார். இதே காலத்தில், இப்பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ், வரலாறு, தத்துவம் ஆகிய பாடங்களுக்குத் தேர்வுநிலை உறுப்பினராகவும் இருந்தார்.

1877ல் சிவகாமி அம்மாளை திருமணம் புரிந்தார். ஒரே மகன் நடராஜன், வழக்குரைஞராக இருந்தவர். கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது திரு-கொச்சி மாகாணத்தின் நிதியமைச்சராக இருந்தார். நடராஜன் கேரளத்தில் சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை

இலக்கிய வாழ்க்கை

சுந்தரம் பிள்ளையின் முதல்நூல் 1877இல் வெளிவந்தது. 1891இல் மனோன்மணீயம் நாடகம் வெளிவந்தபின் தமிழறிஞர்களிடம் பிரபலமானார். 90 ஆண்டுகளுக்கும் மேலாக மனோன்மணியம் தமிழில் கல்லூரிகளில் பாடமாக உள்ளது. தமிழில் எழுதியவற்றில் நூல் வடிவில் வந்தவை மனோன்மணீயம் நாடகம் (1891), சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம் (1888).

பாடல்கள்

சுந்தரம் பிள்ளை திருநெல்வேலியில் இருந்தபோது எழுதிய பாடல்கள் 'சிவகாமியின் சரிதம்' என்னும் தலைப்பில் சிறு பிரசுரமாக வந்தன. பின்னர் மனோன்மணீயம் நாடகத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன. சைவ சித்தாந்தத் தத்துவம் தொடர்பான இப்பாடல்களை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இராமலிங்கத் தம்புரானின் உரையுடன் வெளியிட்டுள்ளது.

’ஒரு நற்றாயின் புலம்பல்’ என்னும் தலைப்பில் அமைந்த இவரது பாடல்கள் விவேக சிந்தாமணியில் (1885) வந்தன. இவை தத்துவார்த்தப் பாடல்கள் வகையைச் சார்ந்தவை. ’பொதுப்பள்ளி எழுச்சி’ என்னும் தலைப்பில் சில பாடல்களை விவேக சிந்தாமணியிலும் (1895) அன்பின் ‘அகநிலைப் பாடல்கள்’ என்னும் தலைப்பில் சில பாடல்களை என்ற பத்திரிகையிலும் (1891) வெளியிட்டுள்ளார். பின்னது புனித பவுல் கூறிய அன்பு பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

அறிவியல்,பொது நூல்கள்

சுந்தரம் பிள்ளை எழுதிய புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892), மரங்களின் வளர்ச்சி (1892), ஜீவராசிகளின் இலக்கணம் (1897) ஆகிய மூன்று அறிவியல் கட்டுரைகள் விவேக சிந்தாமணியில் வெளிவந்தன பின்னர் அவற்றைச் செந்தமிழ் செல்வி வெளியிட்டது. சுந்தரம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி இதழில் வந்தன. The Ten Tamil Idylls, (1890-1891), Hobbes - The Father of English Ethics (1894-95), Bentham The Juristic Moralist (1896) என்னும் இக்கட்டுரைகளில் The Ten Tamil Idylls மட்டும் 1957இல் நூல் வடிவில் வந்தது. ஆங்கில அறிவியலின் தந்தையாகக் கருதப்பட்ட ஹாபஸ் பற்றிய செய்திகளைக் கூறுவது Hobbes the Father of English Ethics என்ற கட்டுரை.

இலக்கிய ஆய்வுகள்

சுந்தரம் பிள்ளை எழுதிய நூற்றொகை விளக்கம் என்னும் உரைநடை நூல் 1888இல் ஆங்கில முகவுரையுடன் வெளிவந்தது. சைவசித்தாந்த நூல் பதிப்புக்கழகம் 1936இல் இந்நூலை மறுபதிப்பு செய்துள்ளது. இதன்பிறகு இந்நூல் அச்சில் வரவில்லை. நூற்றொகை விளக்கம் 94 பக்கங்களைக் கொண்ட சிறுநூல் தமிழ் உரைநடை வடிவத்தைப் பழைய மரபின்படி 38 சூத்திரங்களில் விளக்குகிறது. ஒரு நூல் எப்படி அமைந்திருக்க வேண்டும்; உரைநடை வடிவம் எத்தகைய பிரிவுகளை உடையது என்பனவற்றை இந்நூல் விளக்குகிறது.

எஸ்.வையாபுரிப் பிள்ளை கட்டுரை
சம்பந்தர் கால வரையறை

சுந்தரம் பிள்ளை எழுதிய ஆய்வுநூல்களில் திருஞான சம்பந்தரின் காலகட்டத்தை அவர் கணித்து வரையறை செய்தது முக்கியமாகக் கருதப்படுகிறது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் இவர் தொடராக வெளியிட்ட Some Milestones in the History of Tamil Literature or The Age of Thirugnanasambandha என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் 1896இல் நூல் வடிவில் வந்தன. அந்நூலுக்கு தொல்லியல் ஆய்வறிஞர் வெங்கய்யா முகவுரை எழுதியுள்ளார்.

தமிழில் பின்னர் மொழியாக்கம் செய்து விரிவுபடுத்தி வெளிவந்த திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி பற்றிய நூல் 65 பக்கங்களைக் கொண்டது. 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியக் காலஆராய்ச்சி பற்றி வந்த துல்லியமான நூல் இது. வையாபுரிப்பிள்ளை இந்நூல் பற்றி “சுந்தரனார் செய்த இந்தக் கால ஆராய்ச்சி பிற்காலத்தில் கிடைத்த கல்வெட்டுகள் வழி உறுதி செய்யப்படுவதுடன் மறுக்க முடியாமலும் உள்ளது” என்கிறார். ஆதிசங்கரர், சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிட்ட செய்தியை சுந்தரம்பிள்ளைதான் இந்த நூலில் முதலில் கூறுகிறார். திராவிடம் என்னும் சொல் தமிழரைக் குறிக்கப் பயன்பட்டது என்னும் கருதுகோளைத் தமிழ் ஆய்வாளர்களுக்கு எடுத்துக்கொடுத்தவரும் இவர்தான்.

கால்டுவெல் சம்பந்தர் காலத்து பாண்டிய மன்னனான நின்ற சீர் நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் கி.பி. 1292இல் மதுரையை ஆண்டவன் எனக் கூறிச் சம்பந்தரைக் கிபி 13ஆம் நூற்றாண்டினர் என்கிறார். சி.வை. தாமோதரம் பிள்ளை கூன்பாண்டியன் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவன் என்றார். அக் கருத்துக்களை மறுத்து வரலாற்றுச் சான்றுகளுடன் காலவரையறை செய்திருக்கிறார் சுந்தரனார்.

சம்பந்தர், இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்ற சிறுத்தொண்டர் காலத்தவர்; வாதாபியில் நடந்த இப்போர் கி.பி 642 இல் நடந்தது. அதனால் சம்பந்தர் கி.பி. 7ஆம் நூற்றாண்டினர் என்கிறார் சுந்தரம் பிள்ளை. வேறு சான்றுகளையும் கொடுத்துச் சம்பந்தர் காலத்தை நிறுவியுள்ளார். பிற்கால ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காலத்தின் அடிப்படையில் சம்பந்தர் காலத்துக்கு முன்னரோ பின்னரோ எனக் கணித்து பக்தி இயக்கக்காரர்களின் காலங்களை நிர்ணயித்துள்ளனர்.

மனோன்மணியம் சுந்தரனார் சிலை
பத்துப்பாட்டு திறனாய்வு

சுந்தரம் பிள்ளையின் The Tamil Idylls என்னும் சிறுநூல் பத்துப்பாட்டுப் பற்றிய திறனாய்வு நூல். இது 1890-92 அளவில் எழுதப்பட்டதாயினும் 1953இல் தான் நூல் வடிவில் வந்தது. உ.வே.சாமிநாதய்யரின் பத்துப்பாட்டுப் பதிப்பு பற்றிய திறனாய்வுக் கட்டுரை இது . இந்நூலில் சுந்தரம் பிள்ளை சங்ககால நக்கீரரின் காலத்தை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். முருகாற்றுப்படையைக் காலத்தால் பின் தள்ளியதற்குரிய காரணங்களைத் துல்லியமாக முன்வைக்கிறார்.

மனோன்மணீயம் நாடகம்

மனோன்மணீயம் நாடகம் 1891 மார்ச்சில் வெளிவந்தது. இது Edward Bulwer Lytton (1803-1873) எழுதிய The Secret way என்ற ஆங்கில இலக்கியத்தைப் பின்பற்றியது. இதில் இணைக்கப்பட்டுள்ள சிவகாமி சரிதம் Goldsmith எழுதிய The Hermit என்னும் கவிதையைத் தழுவியது என்றாலும் இந்த நாடகத்தை மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் எனக் கூறமுடியாது.

மனோன்மணீயம் நாடகம் காளிதாசரின் மேகசந்தேசம் போன்று படிப்பதற்காக எழுதப்பட்டது என்ற கருத்தை இது வெளிவந்த காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியார் கூறியிருக்கிறார். சேலம் தியேட்டர்ஸ் இந்த நாடகத்தைத் திரைப் படமாக்கினர் (1942). இதில் பி.யூ.சின்னப்பா புருஷோத்தமனாகவும் டி.என்.பாலையா குடிலனாகவும் பி.ஆர்.ராஜகுமாரி மனோன்மணீயாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருக்கிறார். மனோன்மணீயம் நாடகம் சென்னை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைத்தபோது (1891) உ.வே.சாமிநாதய்யர். அந்த நாடகத்தில் சில குறைகளைச் சுட்டிக்காட்டி சுந்தரம்பிள்ளைக்குக் கடிதம் எழுதியுள்ளார். வையாபுரிப்பிள்ளை இந்த நூலை 1922இல் பதிப்பித்தார். மனோன்மணீய நூலினை தன் ஆசிரியர் ஹார்விக்கு உரிமையாக்கினார். அவரின் பெயருக்கு முன்னொட்டாக “மனோன்மணீயம்” நிலைக்குமளவு இலக்கியத்தில் கல்வித்துறையில் திகழ்ந்த நாடகமாக விளங்கியது.

தமிழ்த்தாய் வாழ்த்து

கடந்த 40 ஆண்டுகளாகப் பள்ளிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படும் நீராரும் கடலுடுத்த என்னும் பாடலை எழுதியவர். மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மனோன்மணீயம் நாடகத்தில் வரும் நீராரும் பாடலைத் தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். மோகன ராகத்தில் திஸ்ர தாளத்தில் இப்பாடலைச் சுரப்படுத்தியவர் எம்.எஸ். விஸ்வநாதன் மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப்பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !”

இதழியல்

சுந்தரம் பிள்ளை திருவனந்தபுரத்தில் இருந்து People's Opinion என்னும் இதழை நடத்தினார். இதில் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, கே.என். சிவராஜ பிள்ளை போன்றவர்கள் எழுதினார்கள்.

கல்வெட்டாய்வு

சுந்தரம் பிள்ளை ஒரு கல்வெட்டாய்வாளர். சில ஆண்டுகள் திருவிதாங்கூர் கல்வெட்டுத் துறையிலும் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலும் (சோழபுரம். புரவசேரி) இடநாட்டிலும் (திருவட்டாறு) கல்வெட்டுகளைத் தேடிக் கள ஆய்வு செய்திருக்கிறார். இவரே படி எடுத்திருக்கிறார். இந்தக் கல்வெட்டுகளின் வழி வேணாட்டு, செய்திகளை முறைப்படித் தொகுத்திருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் தொல்லியல் துறையில் 1894 மார்ச் மாதம் சுந்தரம்பிள்ளை ஆற்றிய சொற்பொழிவுகள் Some Early Sovereigns of Travancore என்னும் தலைப்பில் வெளிவந்தன. இதற்கு ஆசிரியர் முகவுரையும் உண்டு. இதன் இரண்டாம் பதிப்பு 1943இல் வந்தது. இது நான்கு இயல்களும் மூன்று பின்னிணைப்புகளும் கொண்ட நூல். முதல் மூன்று இயல்களும் வேணாட்டு மன்னர்களின் பட்டியல்களையும் வரலாற்றையும் நான்காம் இயல் திருவிதாங்கூரில் கிடைத்த சில கல்வெட்டுகளையும் கூறுவன. பின்னிணைப்பில் கல்வெட்டு மூலங்களும் சுந்தரம்பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்பும் உள்ளன.வேணாட்டு அரசர்களின் வரலாற்றை முதல் முறையாக கல்வெட்டுச் செய்திகளின் வழி கணிக்கும் நூல் இது. இந்த நூலுக்காக உ.வே.சாமிநாதய்யரின் சிலப்பதிகார முதல் பதிப்பை (1892) இவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்நூல் ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த 9 அரசர்களைப் பற்றிக் கூறுகிறது. Directory of Archaeology என்னும் தொகுப்பு நூலையும் திருவிதாங்கூர் அரசுப் பொறுப்பில் பெ.சுந்தரம் பிள்ளை வெளியிட்டார்.

ஆன்மிகம்

சைவப் பின்னணி கொண்ட சுந்தரம் பிள்ளை இளமையில் சைவசித்தாந்தத்தை கற்றவர். திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையை உருவாக்கியவர்களில் ஒருவர். சைவசித்தாந்தம் பற்றி அறியாதிருந்த சுவாமி விவேகானந்தருக்கு அதை அவர் எடுத்துரைத்தார் என்று சொல்லப்படுவதுண்டு

ஆனால் 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார் என்றும் சொல்லப்படுகிறது

விருதுகள்

  • இவரதுகல்வெட்டு ஆய்விற்காக பிரிட்டிஷ் அரசு M.R.A.S (Member of the Royal Asiatic Society of Great Britain and Ireland) பட்டத்தைக் கொடுத்தது.
  • தொல்லியல் ஆய்வாளர்களுக்கான லண்டன் வரலாற்று ஆய்வு மையம் FRHS என்ற விருதை வழங்கியது (1896).
  • 1896ம் ஆண்டு இந்திய பிரிட்டிஷ் அரசு ராவ்பகதூர் விருது வழங்கியது.
  • திருநெல்வேலிப் பல்கலைக்கழத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மறைவு

பேராசிரியர் சுந்தரனார் தமது 42வது வயதில் ஏப்ரல் 26, 1897-ல் காலமானார்.

நூல்கள்

கவிதை
  • ஒரு நற்றாயின் புலம்பல் – 1885
  • அகநிலைப் பாடல்கள் - 1891
  • பொதுப்பள்ளி எழுச்சி – 1895
  • நூற்றொகை விளக்கம் (1888)
  • சிவகாமி சரிதம்
நாடகம்
  • மனோன்மணீயம் நாடகம் - 1891
கட்டுரை
  • புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் – 1892
  • மரங்களின் வளர்ச்சி - 1892
  • ஜீவராசிகளின் இலக்கணம் – 1897
ஆங்கிலம்
  • The Ten Tamil Idylls, (1890-1891) - 1957
  • Hobbes - The Father of English Ethics (1894-95),
  • Bentham The Juristic Moralist (1896)
  • Some Milestones in the History of Tamil Literature or The Age of Thirugnanasambandha – 1896.
  • Early Sovereigns of Travancore, 1894
ஆய்வுநூல்கள்
  • திருஞானசம்பந்தர் காலம்
  • நூற்றொகை விளக்கம் (1885,1889)
  • பத்துப்பாட்டு (1891)
  • முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894)
  • ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896)
  • திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.