போர்வாள் (இதழ்)
போர்வாள் (1947) திராவிட இயக்கத்தின் சார்பில் வெளிவந்த இதழ். காஞ்சி மணிமொழியார் நிர்வாக ஆசிரியராகவும், மா. இளஞ்செழியன் ஆசிரியராகவும் செயல்பட்டனர். தனித்திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி, அது பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து போர்வாள் இதழ் வெளியிட்டது.
பிரசுரம், வெளியீடு
போர்வாள் இதழ், தனித்திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்திய திராவிட இயக்க இதழ். ஆகஸ்ட் 16, 1947-ல், சென்னையில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. காஞ்சி மணிமொழியாரும், அவரது மகன் மா. இளஞ்செழியனும் இணைந்து இவ்விதழைத் தோற்றுவித்தனர். திராவிட நாடு பெறுவதை நோக்கமாகக் கொண்டு இவ்விதழ் செயல்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின் மா. இளஞ்செழியன் அரசுப்பணியான பேராசிரியர் பணிக்குச் சென்றதால், காஞ்சி கல்யாணசுந்தரம் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். என்.வி. கலைமணி, மா.கு. நெடுமாறன், மா . சேரலாதன் போன்றோர் துணை ஆசிரியர்களாகச் செயல்பட்டனர். இதழுக்கு அச்சுக் கோர்க்கும் பணியைக் காஞ்சி மணிமொழியாரின் மனைவி அபிராமி அம்மாள் மேற்கொண்டார். குடும்பத்தினர் பிறரும் இதழின் பிற பணிகளைச் செய்தனர்.
போர்வாள் இதழ் தொடக்க காலத்தில் 12 பக்கங்கள் கொண்ட இதழாக, ஒன்றரை அணா விலையில் வெளிவந்தது. சில காலங்களுக்குப் பின் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டு 8 பக்க இதழாக 2 அணா விலையில் வெளிவந்தது.
உள்ளடக்கம்
போர்வாள் இதழின் முகப்பில், போர்வாள் என்ற தலைப்புடன் ,வாளின் ஓவியமும் இடம் பெற்றது. ‘திராவிடர் வார வெளியீடு' என்ற உள் குறிப்புடன் ஆகஸ்ட் 16, 1947 முதல், வாரந்தோறும் சனிக்கிழமை வெளிவந்தது. இதழின் ஆண்டு எண்ணிக்கையைக் குறிக்க வாள் என்பதையும், மாதத்தைக் குறிக்க வீச்சு என்பதையும் பயன்படுத்தியது. கேலிச்சித்திரத்திற்கு இவ்விதழ் இடமளித்தது. ‘இன்பத்திராவிடமே நமது இலட்சியம்’ என்ற கருத்தை வலியுறுத்திப் பல கட்டுரைகள் வெளிவந்தன. இதழ்தோறும் தலையங்கம் இடம் பெற்றது. திராவிட இயக்கக் கொள்கைளை வலியுறுத்திப் பல கட்டுரைகள் எழுதப்பட்டன. பகுத்தறிவுக் கொள்கைகையை வலியுறுத்தும் பல கட்டுரைகள் வெளிவந்தன.
ஐம்பதுகளில் திராவிட முன்னேற்றக் கழக நாட்குறிப்பைப் போர்வாள் வெளியிட்டது . அதில் கழக உறுப்பினர்களின் பெயர்கள் , சட்டதிட்டங்கள், கோட்பாடுகள், முகவரிகள் போன்ற பல செய்திகள் இடம் பெற்றன. தமிழகம் மட்டுமல்லாது இலங்கை , சிங்கப்பூர் , மலேசியா, பர்மா , ஆந்திரா, கர்நாடகா, கோலார் தங்கவயல் எனப் பல பகுதிகளிலும் இவ்விதழுக்கு முகவர்கள், வாசகர்கள் இருந்தனர். இளைஞர்கள் பலர் இவ்விதழின் வாசகர்களாக இருந்தனர். பத்தாயிரம் பிரதிகள் வரை போர்வாள் இதழ் விற்பனை ஆனது.
மலர்கள்
போர்வாள் ஆண்டுதோறும் பல்வேறு மலர்களை வெளியிட்டது. அவற்றுள்,
- பெரியார் பிறந்தநாள் மலர்
- பெரியார் சிறப்பு மலர்
- தி.மு.க. முதலாண்டு நிறைவு நாள் மலர்
- தி.மு.க. முதலாவது மாநாட்டு மலர்
- கலைவாணர் என்.எஸ் . கிருஷ்ணன் நினைவு மலர்
- போன்ற மலர்கள் குறிப்பிடத்தகுந்தனவாகும். பொங்கல் மலர்களையும் ஆண்டு மலர்களையும் போர்வாள் இதழ் வெளியிட்டது. ஆண்டுதோறும் திராவிட இயக்கத் தலைவர்களின் படங்களைக் கொண்ட நாள்காட்டியையும் வெளியிட்டது.
பங்களிப்பாளர்கள்
- அண்ணா
- பாரதிதாசன்
- திண்டுக்கல் தங்கவேலர்
- திருவனந்தபுரம் இளஞ்சேரன்
- தில்லை வில்லாளன்
- தில்லை மறை முதல்வன்
- டி.கே.சீனிவாசன்
- கே.ஜி. ராதாமணாளன்
- ந. ஜெகன்நாதன்
- ஆ.ல. நாராயணன்
- க . அறிவழகன்
- கௌதமன்
- பி.சி. கணேசன்
- தாமரைக்கண்ணன்
- எஸ்.எஸ் . தென்னரசு
- தமிழ்ஒளி
- முடியரசன்
- வாணிதாசன்
- மா. இளஞ்செழியன்
- காஞ்சி மணிமொழியார்
மற்றும் பலர்
இதழ் நிறுத்தம்
1954 ஆகஸ்ட் வரை போர்வாள் இதழ் வெளிவந்தது. 1955, 1956-ல் இடை நின்று, பின் மீண்டும் ஜனவரி 1957-ல் வெளிவந்தது. மே, 1958 வரை வெளிவந்து பின் நின்றுபோனது.
சில காலத்திற்குப் பின்னர் ஏ.கே. வில்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு போர்வாள் இதழ் வெளிவந்தது. அது நின்று போன பின் அ . மறைமலையான் அவர்களை ஆசிரியராகக் கொண்டுச் சில காலம் வெளிவந்து பின் நின்றுபோனது.
உசாத்துணை
- திராவிட இயக்க இதழ்கள் : தொகுதி 1, பதிப்பாசிரியர்கள்: இ.சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு , பதிப்பு ஆண்டு: 2005.
- போர்வாள் இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.