குத்தூசி குருசாமி
சா. குருசாமி (சாமிநாதன் குருசாமி; குத்தூசி குருசாமி) (ஏப்ரல் 23, 1906 - அக்டோபர் 11, 1965) எழுத்தாளர்; இதழாளர்; மொழிபெயர்ப்பாளர். திராவிட இயக்கம் சார்ந்து இயங்கினார். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் நடத்தி வந்த ‘ரிவோல்ட்’ மற்றும் ‘விடுதலை’ இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தார்.
பிறப்பு, கல்வி
சா. குருசாமி என்னும் இயற்பெயரை உடைய குத்தூசி குருசாமி, ஏப்ரல் 23, 1906 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவிக்கரம்பையில், கு. சாமிநாத முதலியார்-குப்பு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூர் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். திருவாரூரில் இடைநிலைக் கல்வி கற்றார். பெற்றோர் காலமானதால் அத்தையின் ஆதரவில் வளர்ந்தார். மேற்கல்வியை திருச்சியில் படித்தார். திருச்சி தேசியக் கல்லூரியில் இண்டர்மீடியட் பயின்றார். தனித்தேர்வராக இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
குருசாமி, சென்னை செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு எழுத்தராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகள் காவல் துறை அலுவலகத்திலும், ஆய்வாளர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 1935-ல், உதவி பஞ்சாயத்து அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 16 ஆண்டுகள் அரசுப் பணியாற்றிய இவர் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பு ஏற்கும் பொருட்டுப் பணியிலிருந்து விலகினார். இசை வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த குஞ்சிதத்தை, ஈ.வெ.ரா. பெரியார் முன்னிலையில் மணம் செய்து கொண்டார். தமிழகத்தில் நிகழ்ந்த முதல் கலப்புத் திருமணமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. மகள்: ரஷ்யா. மகன்: கௌதமன்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.