under review

து. ராமமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 18:23, 10 April 2023 by Logamadevi (talk | contribs)
சரோஜா, து. ராமமூர்த்தி (நன்றி: பாரதி)

து. ராமமூர்த்தி (செப்டம்பர் 11, 1916 - அக்டோபர் 31, 1999) நவீனத் தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், காந்தியவாதி.

வாழ்க்கைக் குறிப்பு

து. ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

து. ராமமூர்த்தி எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தியைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி, கணேசகுமார், குமரன். மகள் பாரதி எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் ரவீந்திரனும், ஜெயபாரதியும் எழுத்தாளர்கள்.

அரசியல் வாழ்க்கை

து.ராமமூர்த்தியும் அவர் மனைவி சரோஜா ராமமூர்த்தியும் காந்தியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்றனர். இருவரும் காந்தியின் வார்தா ஆசிரமத்தில் சிறிது காலம் வசித்துள்லனர். சுதந்திரத்துக்குப்பின் கிராமநிர்மாணப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதழியல்

து. ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம் சிரித்தது' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. சிற்றிதழ் சூழலில் சிறுகதைகள் வெட்டப்பட்டு வெளிவருவதற்குக் கடுமையான எதிர்க்குரல் எழுப்பியதால் பலரையும் பகைத்துக் கொண்டார் எனவும், பெரும்பாலான கதைகளை எழுதி இதழ்களுக்கு அனுப்பாமல் தன்னிடமே வைத்துக் கொண்டதாகவும் மகள் பாரதி குறிப்பிடுகிறார்.

நினைவேந்தல்

து. ராமமூர்த்தி 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற நாவல் அவர் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.

மறைவு

து. ராமமூர்த்தி அக்டோபர் 31, 1999-ல் காலமானார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • கதம்பச்சரம் சிரித்தது
குறுநாவல்
  • வானத்தாரகை
நாவல்
  • குடிசை

உசாத்துணை


✅Finalised Page