under review

பாஸ்கரதாஸ்

From Tamil Wiki
Revision as of 17:30, 1 March 2023 by Ramya (talk | contribs)
பாஸ்கரதாஸ்

பாஸ்கரதாஸ் (மதுரை பாஸ்கரதாஸ்) (ஜூன் 6, 1892 - டிசம்பர் 20, 1952) இசைவாணர், சுதந்திரப்போராட்ட வீரர், நாடக ஆசிரியர். தமிழ்த்திரையுலகின் முதல் திரைப்பாடலாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

பாஸ்கரதாஸின் இயற்பெயர் வெள்ளைச்சாமி. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில்(விளாத்திகுளம்) முத்துச்சாமித்தேவருக்கு மகனாக ஜூன் 6, 1892-ல் பிறந்தார். மதுரையில் தன் பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கு நாடகக் கலையில் ஈடுபட்டார். ராமனாதபுரம் சேதுபதி மன்னர் இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்” என்ற பெயரிட்டார்.

தனிவாழ்க்கை

பாஸ்கரதாஸின் முதல் மனைவி அமிர்தம், இரண்டாவது மனைவி ஒண்டியம்மாள். முதல் மனைவிக்கு ஆறு பிள்ளைகள், இரண்டாம் மனைவிக்குப் பன்னிரண்டு பிள்ளைகள். மகன்கள் வேல்சாமி, சேது, மருதுபாண்டி, தினகரன், மனோகரன். மகள்கள் சரஸ்வதி, இந்துராணி, ஜானகி, முத்துலட்சுமி, காந்திமதி, கமலா. மகள்(சரஸ்வதி) வழிப் பேரன்களான தமிழ்ச்செல்வன், இளங்கோவன் (எ) கோணங்கி, முருகபூபதி ஆகியோர் படைப்பாளிகள்.

அரசியல் வாழ்க்கை

பாஸ்கரதாஸ்

காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். கதராடை அணிந்தார். பிரிடிஷ் அரசாங்கத்தை எதிர்த்து பாடல்கள் பாடியதால் 29 முறை கைது செய்யப்பட்டார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாசு, காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் காவலர்களால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டர். 1921இல் காந்தியடிகள் மதுரை வந்த பொழுது ’காந்தியோ பரம ஏழை சந்நியாசி’ என்ற பாடலை எழுதினார். காந்தியடிகள் அப்பாடலைக் கேட்டார். தீண்டாமையை எதிர்த்தார். கலப்புத்திருமணங்கள் செய்து வைத்தார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி, கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். காந்தி, நாமக்கல் கவிஞர், ஈ.வே.ரா, இ.மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம்.எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் போன்றோருடன் தொடர்பில் இருந்தார்.

நாடக வாழ்க்கை

தமிழகம், கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் அரங்காற்றுகை செய்துள்ளார். கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக இவரது ஏராளமான நாடகங்களில் நடத்தார். மதுரையில் சித்ரகலா ஸ்டுடியோவை நிறுவினார். மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்தார். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், நினைவாற்றல், குரல் வலிமை, உடை, ஞானம் ஆகியன பற்றி வகுப்புகள் நடத்தினார். தேசபக்தி நாடகங்களை அரங்காற்றுகை செய்தார். மக்கள் புழங்கு மொழியில் நாடக வசனங்களை அமைத்தது குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாக உள்ளது. பாணபுரத்து வீரன் என்ற நாடகப்பிரதியை எழுதியுள்ளார். பம்மல் சம்மந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள், தேவதாஸ் இயக்குநர் பி.வி.ராவ், மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம், டாக்டர்.பி.டி.ராஜன் போன்றவர்களோடு நட்பு கொண்டிருந்தார்.

இசை வாழ்க்கை

பாஸ்கரதாஸ் தன்னுடைய 16-வது வயதில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைக்கவிஞராக இருந்தார். இவரது முதல் பாடல் தொகுதி 1915-இல் ’பக்தி ரச கீர்த்தனை’ என்ற பெயரில் வெளிவந்தது. 1925-இல் 'இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம்' என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக் கூடியவையாயிருந்தது. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும், தனிப் பாடல்களும் 'பிராட்காஸ்ட்' என்ற நிறுவனத்தின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ போன்ற பாட்டுக்கள் புகழ்பெற்றது. எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், அவ்வை சண்முகம்‌, சுப்பையா பாகவதர்‌, அரியக்குடி, விசுவநாதய்யர்‌ போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடினர். பாஸ்கரதாஸ் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்தார். புதிய இசையுருக்களை அமைத்தார். இவருடைய பாடல்கள் 'மதுரகவி பாஸ்கரதாஸ் கீர்த்தனைகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

அவர்‌ பாடல்களில்‌ “காந்தியோ பரம ஏழை சந்நியாசி” பாடல்‌ கே.பி. சுந்தராம்பாள்‌ பாடி புகழ் பெற்றது. இராட்டினம்‌, மதுவிலக்கு, கதர்‌, தீண்டாமை ஒழிப்பு முதலியவை பற்றியும்‌ பல பாடல்கள்‌ பாடினார்‌. ’வரவேணும்‌ மயில்வாகனா’, ’பருவதராஜ குமாரி’, ’கார்த்திகேய காங்கேய’ ஆகிய பக்திப்‌ பாடல்கள் பாடினார்.

பாஸ்கரதாஸ்

எழுத்து

பாஸ்கரதாஸ் 1917 முதல் 1951வரை எழுதியுள்ள நாட்குறிப்புகள் தொகுக்கப்பட்டு ’மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்பு’ எனும் நூலாக பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. பாஸ்கரதாசின் மகள் வயிற்றுப் பேரன் ச.முருகபூபதியால் தொகுக்கப்பட்டது. 1925இல் இந்து தேசபிமானிகள் செந்தமிழ் திலகம் நூலை வெளியிட்டார். இதன் இரண்டாம் பாகத்தினை 1925இல் வெளியிட்டார்.

திரை வாழ்க்கை

1930களில் நாடகக்கலை திரைப்படக்கலை நோக்கி சென்ற போது திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதுபவராக விரும்பப்பட்டார். நாடக நடிகராகவும், நடிப்பு பயிற்சியாளராகவும் தொடர்ந்து செயல்பட்டார். நடிகர்களின் அமைப்பிற்கு முன்னோடியாக அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926-இல் தோற்றுவித்தார்.

பாடலாசிரியர்

1931-இல் தமிழ் திரையுலகின் முதல் பேசும் படமான காளிதாஸில் அனைத்துப் பாடல்களையும் எழுதித் தமிழ் திரையுலகின் முதல் திரைப்பாடலாசிரியரானார். இத்திரைப்படத்திற்குப் பாஸ்கரதாஸ் தன்னுடைய நாடகத்திற்கு எழுதிய பாடல்களும் பயன்படுத்தப்பட்டது.

எழுதிய திரைப்பாடல்கள்

பாஸ்கரதாஸ் பத்து திரைப்படங்களுக்கு திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.

  • காளிதாஸ் (1931)
  • வள்ளி திருமணம் (1933)
  • போஜராஜன் (1935)
  • சந்திரஹாசன் (1936)
  • ராஜா தேசிங்கு (1936)
  • உஷா கல்யாணம் (1936)
  • தேவதாஸ் (1937)
  • சதி அகல்யா (1936)
  • ராஜசேகரன் (1937)
  • கோதையின் காதல் (1941)
  • நவீன தெனாலிராமன் (1941)

விருது

1922இல்‌ சிதம்பரத்தில்‌ நாதஸ்வர வித்துவான்‌ வைத்தியநாத பிள்ளை இவருக்குப்‌ பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்தார்‌. ஆனால்‌ இவர்‌ அதை நிராகரித்து விட்டார்‌.

மறைவு

பாஸ்கரதாஸ் டிசம்பர் 20, 1952-இல் நாகலாபுரத்தில் காலமானார்.

நினைவு

  • மதுரையில் பாஸ்கரதாஸ் வாழ்ந்த பகுதிக்கு 'மதுரகவி பாஸ்கரதாஸ் சாலை' எனப் பெயரிடப்பட்டது.
  • பாஸ்கர தாஸின் சமாதி நாகலாபுபரத்தில் உள்ளது.

நூல்கள்

இவரைப் பற்றிய நூல்கள்
  • மதுரகவி பாஸ்கரதாஸ் - வாழ்வும் பணியும்
  • மதுரகவி பாஸ்கரதாஸ் - இந்திய இலக்கியச் சிற்பிகள் (சாகித்ய அகாடமி)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.