மணல்கடிகை

From Tamil Wiki
Revision as of 20:35, 24 January 2023 by Jeyamohan (talk | contribs)
மணல்கடிகை

மணல்கடிகை (2004) எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவல். திருப்பூர் நகரம் தொழில்மயமாதலின் பின்னணியில் அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் வரும் மாற்றங்களை யதார்த்தவாத அழகியலுடன் சித்தரிக்கிறது. நான்கு வெவ்வேறு இளைஞர்களின் வாழ்க்கை வழியாக அந்த மாற்றங்களை ஆராய்கிறது

எழுத்து, வெளியீடு

மணல்கடிகை எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவல். 2004 ல் வெளிவந்த இதன் முதற்பதிப்பை தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. 'தொழில் வளர்ச்சியும் கலாச்சார வளர்ச்சியும் எதிரெதிர் திசையில் பயணிக்கும் திருப்பூர் நகரத்தை இந்த நாவல் களமாக மட்டுமே கொண்டுள்ளது. மற்றபடி இது திருப்பூரைப் பற்றிய நாவல் அல்ல; மனிதனைப் பற்றியது' என்று எம்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

கதைச்சுருக்கம்

திருப்பூர் நகரத்தின் பின்னணியில் தோராரயமாக 1975 முதல் 2003 வரை இக்கதை நிகழ்கிறது. சிவராஜ், பரந்தாமன், அன்பழகன், திருச்செல்வன், சண்முகம் என ஐந்து நண்பர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து சைக்கிளில் பேசிக் கொண்டு வருவதுடன் நாவல் தொடங்குகிறது. ஆறு பகுதிகள் கொண்ட இந்த நாவலில் ஒவ்வொரு பகுதியின் முதல் அத்தியாத்திலும் இந்த நண்பர்கள் தங்களுடைய வெவ்வேறு வயதில் திருப்பூருக்கு வெளியே பயணிக்கின்றனர். இந்த பயணங்களுக்கு இடையேயான இவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, இவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று இந்நாவல் சித்தரிக்கிறது. திருப்பூர் நகரம் ஒரு சிற்றூராக இருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் தொழில்நகரமாக மாறுவதன் வழியாக இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.

இலக்கிய இடம்

'நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக மணல் கடிகை காலத்தை அதை உணரும் மனித அகத்தை மிக வெற்றிகரமாக பிரதிபலிக்கிறது' என்று சுரேஷ் பிரதீப் இந்நாவலை மதிப்பிடுகிறார்

உசாத்துணை