first review completed

திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:11, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளை (1879 - அக்டோபார் 8, 1958) ஒரு தவில் கலைஞர். பல தவிற்கலைஞர்களை உருவாக்கிய ஆசிரியர்.

இளமை, கல்வி

பசுபதிப் பிள்ளை நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்புன்கூருக்கு அருகே உள்ள திருவாழ்கொளிப்புத்தூர் (திருவாழப்புத்தூர்) என்ற ஊரில் 1879-ஆம் ஆண்டு, நாட்டியக் கலைஞர் அம்மணி அம்மாளின் மகனாகப் பிறந்தார்.

முதலில் ஆச்சாள்புரம் தருமலிங்கம் பிள்ளையிடம் நான்காண்டுகள் தவில் கற்கத் துவங்கினார். பிறகு எழாண்டுகள் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளையிடம் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

பசுபதிப் பிள்ளைக்கு பொன்னுஸ்வாமி நட்டுவனார், கோவிந்தப்பிள்ளை (தவில்), வைத்தியலிங்கம் பிள்ளை (மிருதங்கம்), கந்தஸ்வாமி பிள்ளை என்ற சகோதரர்களும், பரதக் கலை வல்லுனர்களாகிய கல்யாணி அம்மாள், காமு அம்மாள், குணவதி அம்மாள் என்ற சகோதரிகளும் இருந்தனர்.

நாதஸ்வரக் கலைஞர் சீர்காழி வையாபுரி பிள்ளையின் மகள் காவேரி அம்மாளை மணந்தார். இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் தன் தம்பி கோவிந்தப் பிள்ளையின் மகன் அருணாசலம் பிள்ளையைத் தத்தெடுத்துக் கொண்டார். இந்த அருணசலம் பிள்ளையின் மகன் பிரபல தவிற்கலைஞர் டி.ஏ. கலியமூர்த்தி.

இசைப்பணி

பல நாதஸ்வரக் கலைஞர்களுக்கு தவில் வாசித்த பசுபதிப் பிள்ளைக்கு கல்யாண சோழபுரத்தில் சிங்கமுகச்சீலையும் சாதராவும் வழங்கப்பட்டது. அறந்தாங்கியில் ஒரு செல்வந்தர் தங்கத்தோடா பரிசளித்து கௌரவித்தார்.

பசுபதிப் பிள்ளைக்கு தவில் வாசித்தால் நகக்கண்களில் ரத்தம் கசியும் பிரச்சனை தொடங்கியதால் அதிகம் தவில் வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அந்நிலையிலும் பல மாணவர்களுக்கு தவிற் கலையைக் கற்பித்து பெரிய குருநிலையாக விளங்கினார் பசுபதிப் பிள்ளை.

உடன் வாசித்த கலைஞர்கள்

திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மாணவர்கள்

திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளையின் முக்கியமான சில மாணவர்கள்:

  • நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
  • யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் பிள்ளை
  • பொறையார் வேணுகோபால பிள்ளை
  • திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை
  • நாச்சியார்கோவில் ராமதாஸ் பிள்ளை
  • திருவிழந்தூர் வேணுகோபால பிள்ளை
  • பெரும்பள்ளம் வெங்கடேசப் பிள்ளை
  • திருவிடைமருதூர் வெங்கடேசப் பிள்ளை
  • திருமுல்லைவாயில் ஷண்முகவடிவேல்
  • இலுப்பூர் நல்லகுமார்
  • திருவாழப்புத்தூர் கலியமூர்த்தி

மறைவு

திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளை அக்டோபார் 8, 1958 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.