மமங் தாய்
மமங் தாய் (Mamang Dai) (23 பெப்ருவரி1957) அருணாச்சலப்பிரதேசத்து கவிஞர். ஆங்கில மொழியில் எழுதுபவர்
பிறப்பு, கல்வி
அருணாச்சல பிரதேசத்தில், கிழக்கு சியாங் மாவட்டத்தில், பாஸிகாட் (Pasighat) என்னும் ஊரில், ஆதி என்கிற பழங்குடி இனத்தில் ,மாடின் தாய் - ஓடின் தாய் இணையருக்கு 23 பெப்ருவரி1957 ல் பிறந்தவர் மமங் தாய்.
மமங் தாய் மேகாலயாவில் ஷில்லாங் நகரில் பைன் மௌண்ட் பள்ளியில் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டத்தை அஸாமில் கௌகாத்தி பல்கலைக் கழகத்தில் முடித்தார்.
மமங் தாய் 1979ல் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வானார். அருணாச்சலப்பிரதேசத்தில் இருந்து குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அவரே . ஆனால் உடனடியாக அந்தப் பணியை துறந்தார்
ஊடகவியல்
மமங் தாய் இலக்கிய ஆர்வத்தால் குடிமைப்பணியை துறந்தார். டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ், செண்டினெல் ஆகிய இதழ்களில் இதழாளராகப் பணியாற்றினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் செய்தியாளராகவும், வானொலி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்
அமைப்புப்பணிகள், பதவிகள்
- சர்வதேச இயற்கை நிதி (Worldwide Fund for Nature, WWF) ஆதரவில் கிழக்கு இமையமலைப் பகுதியின் பல்லுயிர்த்தளங்களை அடையாளம் கண்டு பேணும் பணியில் ஈடுபட்டார்.
- இடாநகர் இதழாளர் சங்க செயலாளராக பணியாற்றினார்
- அருணாச்சலப்பிரதேச இதழாளர் சங்கம் (Arunachal Pradesh Union of Working Journalists (APUW)) தலைவாக இருந்தார்
- மமங் தாய் 2011 ல் அருணாச்சலப்பிரதேச மாநில பொதுத்தேர்வுக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். (Arunachal Pradesh state public service commission)
இலக்கியவாழ்க்கை
எழுத்து ஊடகத்தில் தொடர்ந்து பணியாற்றிய மமங் தாய் ஆரம்பத்தில் கவிதைகள் எழுதத்தொடங்கி பின்னர் சிறுகதை நாவல்களும் எழுதினார். மமங் தாய் எழுதி முதல் பதிப்பாக வந்த புத்தகம் ‘ஆற்றங்கரை கவிதைகள்' (River Poems) எனும் கவிதைத்தொகுப்பு . மறைந்து வரும் பழங்குடி கலாச்சாரத்தைப் பற்றி தேசிய, சர்வதேச மேடைகளில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து பேசிவருகிறார். அவருடைய கவிதைகள் மற்றும் புனைவெழுத்தின் மூலமாக தன்னுடைய மக்களைப் பற்றிய கதைகளை எடுத்துச்சொல்கிறார்.
அழகியல்
“உலகின் முணுமுணுப்புக்களை சுமந்து செல்லும் பத்தாயிரம் தூதுவர்களுள் நானும் ஒருத்தி” என்று தன் படைப்புளைப் பற்றி பேசும்போது மமங் தாய் சொல்கிறார்.
காடுகளும், மலைகளும் ஆறுகளும் சூழ்ந்த அவருடைய நிலத்தின் பிரதிபலிப்பாகவே அவருடைய படைப்புகளைக் காணலாம். காடுகளின் மரங்கள் நிலம் ஆகியவை எப்படி மர்மம், தொன்மம் மற்றும் பல நூற்றாண்டுகள் நினைவை தன்னுள் கொண்டிருக்குமோ அதைப் போலவே அவருடைய எழுத்துக்களும் ஒரு அடர்த்தியான தன்மை கொண்டவை. அவருடைய எழுத்துக்களில் மேலோட்டமாக காணும் அழகியலுக்குள் மண்ணின் முக்கிய அரசியலையும் கால மாற்றங்களையும் காண முடியும்.
அவருடைய எழுத்துக்கள் எத்தனை எளியவையாக தென்படுகின்றனவோ அத்தனை ஆழமானவையும் கூட. அந்தப் படிமங்கள் தொடர்ந்து மனதில் நின்று எளிய முடிவுகளுக்கு வருவதை தடுப்பவை. இயற்கை சூழ்ந்த இடத்தில் இருந்து வந்தாலும் அந்த அழகியலில் மட்டும் சிக்கிக்கொள்ளாத எழுத்துக்கள். தன்னுடைய மக்களை ‘ஊழைத்தேடும் பயணிகள்' என்று கூறுகிறார். பழங்குடிகளின் மறந்துபோன கடந்த காலங்கள், திசையற்று இருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பதற்றம் அவருடைய படைப்புலகம் நமக்கு தொடர்ந்து உணர்த்துபவை.
விருதுகள்
- 2003ம் ஆண்டு ‘அருணாச்சல பிரதேசம் : மறைந்திருக்கும் நிலம்' என்ற அவருடைய புத்தகத்திற்கு வெர்ரியர் எல்வின் விருது.
- 2011ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது
- 2017ம் ஆண்டு ‘கருப்பு மலை’ (the black hill) என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது.