மச்சவல்லபன் போர்
மச்சவல்லபன் போர்: தமிழகத்தில் வழக்கில் உள்ள ராமாயண நாட்டார் கதைகளுள் ஒன்று. இக்கதை மயில் ராவணன் கதையின் உபகதையாகவும் உள்ளது.
கதை
ராவணனுடன் போர் செய்ய இலங்கைக்குப் புறப்பட்ட போது கிஷ்கிந்தைக்கும், இலங்கைக்கும் நடுவே கடலிருந்ததால் யாராலும் அதனைக் கடக்க முடியவில்லை. கிஷ்கிந்தை கரையில் இருந்த வானரப் படைகள் செய்வதறியாது நின்றனர். அப்போது ஜாம்பவான் அனுமனிடம் வந்தான். அனுமனால் கடலைக் கடந்து பறந்து செல்ல முடியும் எனக் கூறினான். அதுவரை தன் ஆற்றல் அறியாது அனுமன் ஜாம்பவான் சொல் கேட்டு பறந்து கடலைக் கடந்தான். இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு இலங்கையை தீயிட்டு வந்தான். பின் கிஷ்கிந்தையிலிருந்து இலங்கைக்கு பாலம் செய்யும் பணியில் ராமனுடன் துணை நின்றான்.
இப்படி அனுமன் கிஷ்கிந்தைக்கும், இலங்கைக்கும் பயணம் செய்த போது அனுமனின் நிழலை கடலில் வாழ்ந்த வெட்கை என்னும் அரக்கி கவ்விக் கொண்டாள். அனுமன் அவள் வாய் வழியாகச் சென்று வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான். வெளியே வந்த அனுமனின் உடல் முழுவதும் வியர்வைக் கொண்டிருந்தது. அதனை கையிலெடுத்து வீசிய போது அங்கே வாய் திறந்து நின்றிருந்த திமிதி என்னும் மச்சகன்னியின் வாயுள் வியர்வை சென்றது.
அனுமனின் வியர்வையால் திமிதி கருவுற்றாள். இதனை அறியாத அனுமன் மீண்டும் ஆகாயத்தில் பறந்து இலங்கைக்குச் சென்றான்.
திமிதி பத்து மாதம் கருவை காத்து ஆண் மகனொன்றைப் பெற்றாள். அவனுக்கு மச்சவல்லபன் எனப் பெயரிட்டாள். மச்சவல்லபன் பிறந்ததும் அவன் தந்தை வழி பாட்டனான வாயு தேவன் அவனிடம் வேண்டும் வரத்தைக் கேட்கும்படி கூறினார்.
மச்சவல்லபன், “என் தந்தைக்கு நிகரான ஆற்றல் கொண்டவனாக வேண்டும். அவரையும் வெல்லும் ஆற்றல் எனக்கு வேண்டுமென்றான்.” வாயுதேவன் மச்சவல்லபனுக்கு அவ்வரத்தை அருளினார்.