தி. த. கனகசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
தி.தா.கனகசுந்தரம் பிள்ளை

தி.த. கனகசுந்தரம் பிள்ளை ( 22 ஆகஸ்ட் 1863 - 1922) தமிழறிஞர், பதிப்பாசிரியர்.

பிறப்பு, கல்வி

திருகோணமலை தம்பிமுத்துப் பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை 1863 ஆவணி 24 ல் திருகோணமலை அரசூழியரான தம்பிமுத்துப்பிள்ளைக்கும் அம்மணி அம்மாளுக்கும் பிறந்தார். திருகோணமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரைவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். கனகசுந்தரம் பிள்ளை 1880 ஆம் ஆண்டில் சென்னைக்கு சென்று சூளையில் உள்ள செங்கல்வராய நாயகர் பாடசாலையில் சேர்ந்து பயின்றார். சென்னைப் பல்கலைக்கழக மத்திய பாடசாலைத் தேர்வில் தேறியபின் பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ தேர்வில் வென்று சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

முதல் தமிழ் சரித்திர நாவலை எழுதிய தி. த. சரவணமுத்துப் பிள்ளையின் தமையன்.

தனிவாழ்க்கை

கனகசுந்தரம் அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த, ஆந்திரத்தின் சித்தூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி இலாக அலுவலகத்தில் கணக்காளர் பணியிலும் பின்னர் சென்னை அரசுச் செயலகத்தில் கல்வித்துறை நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

கனகசுந்தரம் தெல்லிப்பழை சிதம்பரநாத முதலியார் மகள் சுந்தரம்பாளை 1895ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இராசராசன், இராசசேகரன், இராசேசுவரன், இராசமார்த்தாண்டன் என நான்கு ஆண் பிள்ளைகளும், செல்வநாயகி என பெண் பிள்ளையும் பிறந்தனர். சென்னை ஆயலூர் முத்தையா முதலியார் வீதியில் இவர் வசித்து வந்தார். செல்வநாயகி ராவ்பகதூர் க. வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரின் புதல்வர் அரங்கநாதனை மணந்தார்.

கல்விப்பணி

கனகசுந்தரம் பிள்ளை சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1905ல் பணியேற்றார். தி. செல்வகேசவ முதலியார் மறைந்ததை அடுத்து, அப்பதவி கனகசுந்தரம்பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்க்ழகத் தேர்வுக்குழு உறுப்பினராகவும் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் தேர்வாளர்களில் ஒருவராக இவரை நியமித்தது.

இவரது மாணாக்கர்களில் சோமசுந்தர முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார், மோசூர் கந்தசாமி, வித்துவான் சுப்பிரமணிய ஆச்சாரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.