first review completed

கந்தர்வன்

From Tamil Wiki
Revision as of 09:08, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

கந்தர்வன்(இயற்பெயர் நாகலிங்கம்)(பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், பொதுவுடமைவாதி ,தொழிற்சங்கத் தலைவர். தொழிற்சங்கவாதியாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்த கலைஞராகவும் தீவிர பங்களிப்பு செய்த கந்தர்வன், வாழ்வின் அரிய தருணங்களைக் கதைகளாக்கியவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் இலக்கியச் சிந்தனை விருதுக்கு கந்தர்வனின் மைதானத்து மரங்கள் கதை தேர்வு செய்யப்பட்டது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கந்தர்வன் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

பிறப்பு,கல்வி

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கலில் கணேசன்-கனகம்மாள் இணையருக்கு பெப்ரவரி 3, 1944 அன்று பிறந்தார். தனது சிறுவயதிலேயே மளிகைக் கடை விற்பனை ஊழியர்,  ஜவுளிக் கடை உதவியாளர், ஓட்டல் தொழிலாளி, பால்பண்ணை மேற்பார்வையாளர் என்று பல வேலைகளையும் பார்த்து, படிக்கும் ஆர்வம் மேலெழ, நிறைய தடைகளை மீறி படித்து, தனது 29-ஆம் வயதில் அரசுப் பணிக்கு வந்தார். அரசுப்பணிக்கு தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.

தனி வாழ்க்கை

கந்தர்வனின் மனைவி பெயர் சந்திராதேவி. மகள்கள் மைதிலி, சாருமதி.

தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பல்லாண்டுகள் பணிக்குப் பிறகு, மாவட்டக் கருவூல அதிகாரியாக (Treasury Officer) பணியாற்றி ஓய்வு பெற்றார். கருவூல ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மாநில அளவில் போராட்டக்காலங்களில் அனைவராலும் அறியப்பட்டவர். அதனாலேயே 19 மாதகாலப் பணியிடை நீக்கம், 6 ஆண்டு ஊதிய உயர்வு ரத்து, ஓயாத பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு  இடையூறுகள் ஏற்பட்டன.

இலக்கியப் பணி    

commonfolks.in

லா.ச.ராவுடன் ஒரு அழுத்தமான உரையாடல், வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற இரண்டு கட்டுரைகளும். கண்ணதாசன் இதழில் வெளிவந்து பரவலாக பேசப்பட்டன.கண்ணதாசன் இதழின் ஆசிரியர் இராம. கண்ணப்பனின் ஆலோசனையினால், திருலோக சீதாராமின் கந்தர்வ கானம் நூலில் வந்த கந்தர்வன் என்ற பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டார். கந்தர்வனின் முதல் சிறுகதை சனிப்பிணம் 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார்.  கண்ணதாசன் இதழில் இலக்கிய விமரிசனங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா , சிகரம், செம்மலர், விகடன் என்று பல இதழ்களில் அவரது படைப்புகள் வெளிவந்தன. தீக்கதிரின் வண்ணக்கதிர் இலக்கியப்பகுதியிலும், புதிய புத்தகம் பேசுது இதழிலும் நூல்விமரிசனங்கள் எழுதினார்.பல கவியரங்குகளில் கவிதை வாசித்தார். கந்தர்வனின் கயிறு என்ற கவிதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. மைதானத்து மரங்கள்[1] எனும் சிறுகதையை எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள் 'இலக்கியச் சிந்தனை’யில் மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார், தண்ணீர் [2]சிறுகதை ஒன்பதாம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

சாசனம் [3]சிறுகதை இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்((NFDC) நிதி உதவியோடு இயக்குநர் மகேந்திரனால் படமாக்கப்பட்டு ஜூலை 28, 2006 அன்று வெளியிடப்பட்டது.

commonfolks.in

கந்தர்வனின் படைப்புகள் முனைவர் மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன எழுத்தாளர் இதயகீதன் கந்தர்வன் படைப்புகளை ஆய்வு செய்து, பழைய சோறும் பாதாம் கீரும் என்ற புத்தகமாக வெளியிட்டார்.

கேள்விகள், விசாரணை போன்ற வீதி நாடகங்களை எழுதி, வீதிகளில் நடிக்கச் செய்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாகவும், பொதுவுடைமை சங்கத்தின் சார்பாகவும் பல எழுச்சிமிக்க பிரச்சார நாடகங்களை எழுதி, இயக்கினார்.

அவர் இறுதியாக எழுதிய குறுநாவல் காவடி. அதன் தொடர்ச்சியாக தன் வாழ்வின் சாரமாக அவர் எழுதிக்கொண்டிருந்த நாவல் முடிவுபெறுவதற்குள் இறந்து விட்டார்.

இலக்கிய இடம்

கந்த்ர்வனின் கவிதைகள் எளிய, அலங்காரமற்ற மொழியில், பிரச்சாரத் தொனியில் அமைந்தவை. எளியவர்களின், பெண்களின் அல்லல்களைப் பேசுபவை.

நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமை பெண்களுக்கில்லை
                                                        என்ற வரிகள் புகழ்பெற்றவை.

கந்தர்வனின் இலக்கிய இடம் அவரது சிறுகதைகளைக்கொண்டே மதிப்பிடப்படுகிறது. வணிக இதழ்களில் எழுதப்பட்டதால் இலக்கிய உலகின் கவனத்தை அவை வெளிவந்தபோது கவரவில்லை. மார்க்ஸியக் கோட்பாட்டின் மேல் இருந்த உறுதியான நம்பிக்கையால் போராளியாகவே வாழ்ந்தும், உழைக்கும் மக்களின் துன்பங்களைப் பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல் கந்தர்வனின் கதைகள் அன்றாடத்தில் நிகழும் அசாதாரணங்களின் கதைகளாகத் திகழ்ந்தன. சிறுகதை என்ற வடிவத்தின் நோக்கத்தை , அது செல்லவேண்டிய உச்சத்தை அடைய முனைந்தவை அவை. சாசனம், காளிப்புள்ளே, கதைதேசம், பத்தினி ஓலம், உயிர், மங்களநாதர் ஆகிய சிறுகதைகள் ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள்- திறனாய்வாளன் பட்டியலில்[4] இடம்பெறுகின்றன. பத்தினி ஓலம் சிறுகதையில் மாபெரும் அநீதி ஒன்றின, ஆற்றமுடியாத துயரம் ஒன்றின் கதை புதைந்து கிடக்கிறது. அக்கதை தமிழ்ச் சிறுகதைகளில் ஓர் மாபெரும் சாதனை எனக் குறிப்பிடும் ஜெயமோகன் கந்தர்வனின் "பல கதைகளில் தமிழின் பெரும் கதைசொல்லி ஒருவரைக் கண்டு கொண்டேன்" எனக் குறிப்பிடுகிறார். கந்தர்வனின் உரையாடல்களும், படைப்புகளும் ஒரு நுட்பமான நகைச்சுவையைத் தன்னுள் பொதிந்திருப்பவை. காளிப்புள்ளே மானுட மனத்தின் அதி நுண்மையான ஒரு இடத்தை மிகச்சிறந்த கலைஞனுக்குரிய விதத்தில் தீண்டிச்செல்லும் கதை.

போராளியாகத் தன்னை அடையாளப்படுத்திகொண்ட கந்தர்வனை தன் இறுதிக்காலத்தில் மரணத்தைக் கண்டுகொண்ட நிலை கோட்பாடுகளை உதறி மனிதர்களை அப்பட்டமாகப் பார்க்கச்செய்தது. தொழிற்சங்கப் போராளியாகப் பல இழப்புகளைச் சந்தித்தவர் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதும், தொழிற்சங்கத்தால் கைவிடப்பட்டது கந்தர்வனின் மனதைப் பாதித்தது. அல்லலுறும் மனநிலையும், தோல்வியும், துரோகமும் நிறைந்த நாட்களெனினும் அவரின் இறுதி நாட்கள்தான் அவர் வாழ்வில் படைப்பூக்க மிக்க நாட்கள். தன்னுடைய சொந்த கிராமத்தையும், மண்மறைந்த உறவினர்களையும், அவர்களுடன் அழிந்த ஒரு வாழ்க்கையையும் எழுதிவிட வேண்டும் என்று முனைந்தார்.

கந்தர்வனின் கடைசிக்கதைகள் ஐம்பதுகளில் துவங்கி புதுக்கோட்டைப் பகுதி மெல்லமெல்ல புஞ்சை விவசாயம் இல்லாமலாகி பாலையாக ஆவதன், நிலத்தை நம்பி வாழ்ந்த சிறுநிலக்கிழார் குடும்பங்களின் அழிவின் சித்திரங்கள். அது அவரது சொந்தக்குடும்பத்தின், கிராமத்தின், அதன் மக்களின் கதை.செழிப்பான ஒரு வாழ்க்கையில் இருந்தும் பண்பாட்டில் இருந்தும் சரிந்து பட்டினி நோக்கிச் சென்று அந்நிலையிலும் தங்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி அவமானமடையும் மக்களின் உக்கிரமான மானுடப்பிரச்சினை பதிவாகியிருக்கிறது.

இறப்பு

சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த கந்தர்வன் ஏப்ரல் 22,2004 அன்று சென்னையில் மகள் வீட்டில் காலமானார்.

படைப்புகள்

கவிதைகள்
  • கிழிசல்கள்
  • மீசைகள்
  • சிறைகள் (இவை மூன்றும் சிவகங்கை அன்னம் வெளியீடுகள்)
  • கந்தர்வன் கவிதைகள் (தொகுப்பு நூல்)
சிறுகதைகள்
  • சாசனம்
  • பூவுக்கு கீழே
  • கொம்பன்
  • ஒவ்வொரு கல்லாய்
  • அப்பாவும் அம்மாவும் (இவை அனைத்தும் சிவகங்கை அன்னம் பதிப்பகம்)
  • கந்தர்வன் கதைகள் (தொகுப்பு நூல்)
குறுநாவல்

காவடி

உசாத்துணை+

கந்தர்வன் கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன்

கந்தர்வன் -ஜெயமோகன்

கந்தர்வன் பவா செல்லதுரை

கந்தர்வன் சிறுகதைகள்-சிறுகதைகள்.காம்

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.