under review

வெ. அலெக்ஸ்

From Tamil Wiki
Revision as of 18:33, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
அலெக்ஸ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அலெக்ஸ் (பெயர் பட்டியல்)
வெ.அலெக்ஸ்

வெ.அலெக்ஸ் (1966 -3 செப்டெம்பர் 2017) தலித் சிந்தனையாளர். தலித் ஆவணங்களின் பதிப்பாசிரியர். மதுரை இறையியல் மையத்தின் தலித் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர். தலித் எழுத்துக்களை வெளியிடுவதற்கான எழுத்து என்னும் பிரசுரத்தின் நிறுவனர்.

வெ.அலெக்ஸ்

பிறப்பு, கல்வி

வெ.அலெக்ஸ் அவர் தந்தை மில்தொழிலாளியாகப் பணி புரிந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். அதன்பின் மதுரை பசுமலைக்கு இடம்பெயர்ந்தார். மதுரையில் கல்வி கற்றார்

தனிவாழ்க்கை

வெ. அலெக்ஸ் மதுரை இறையியல் மையத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். அதன்பின் எழுத்து பதிப்பகத்தை நடத்தினார்.

அலெக்ஸின் மனைவி மதி மதுரை இறையியல் மைய ஊழியர் . எழில் காஸ்ட்ரோ, எழில் இனிமை என இரண்டு குழந்தைகள்.

அமைப்புப் பணிகள்

அலெக்ஸ் தொடக்ககால தலித் இயக்கச் செயல்பாடுகளை ஒருங்கிணைந்த்தார். மதுரை இறையியல் கல்லூரியில் தலித் பண்பாட்டுப் பொருட்காட்சி ஒன்றை உருவாக்கினார்.

எழுத்து பிரசுரம்

அலெக்ஸ் 2009-ல் அவர் தொடங்கிய எழுத்து பிரசுரம் வழியாக நான்கு நூல்களை 2009-ல் வெளியிட்டார். பஞ்சமி நில உரிமை - முதல் தொகுதி, எம்.சி.ராஜா சிந்தனைகள் - முதல் தொகுதி, தலித் மக்களும் கல்வியும், தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும் ஆகிய நான்கு நூல்களும் தலித் வரலாற்றில் முக்கியமானவை. அலெக்ஸ் தலித் ஆவணங்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இலக்கியப் பணிகள்

அலெக்ஸ் பேரையூர் பெருமாள் பீட்டர் பற்றி 1990-களில் ‘கரிசலில் ஓர் ஊருணி’ என்ற நூலை எழுதினார். ஜெயமோகன் எழுதிய வெள்ளை யானை, ராய் மாக்ஸம் எழுதிய உப்பு வேலி ஆகியநூல்களை பதிப்பித்தார். ஈழத்து நூல் வரிசை என்ற தலைப்பின் கீழ் 5 நூல்களை வெளியிட விரும்பியிருந்தார். அவற்றுள் தெணியான், தெளிவத்தை ஜோசப் நூல்கள் வெளிவந்தன.

மறைவு

சிறுநீரக நோயால் சிகிச்சையில் இருந்த அலெக்ஸ் 3 செப்டெம்பர் 2017-ல் மறைந்தார்.

நூல்கள்

  • கரிசலில் ஒரு ஊருணி (1990)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Sep-2022, 13:23:12 IST