மு. படிக்கராமு
மு. படிக்கராமு (பிறப்பு: ஜூன் 01, 1938) தமிழ்ப் புலவர். பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
மு. படிக்கராமு, ஜூன் 01, 1938 அன்று, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், வாழவந்தாள் புரம் என்னும் சிற்றூரில், ப.இரா.முத்தையா - சீனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின், தமிழில் புலவர் பட்டம் பெற்றார். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். தமிழில் முதுகலை ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
மு. படிக்கராமு, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்பது ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணியார்றினார். கோவில்பட்டி ஆ.வை. மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருபத்தெட்டு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: முத்துலக்குமி. மகன்கள்: முனைவர் ப. வேல்மணி திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரி கணினித்துறைத் துணைப் பேராசிரியர்; ப. திருமாவேலன், இதழாளர், ஊடகவியலாளர்.
இலக்கிய வாழ்க்கை
மு. படிக்கராமு, குறள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். குறள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். இவரது வள்ளுவ வளம் (மூன்று பாகங்கள்) குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூல்.
மேடையுரை
மு. படிக்கராமு, சங்கரன் கோயிலில் இந்து சமயத் தமிழ்ப் பேரவை சார்பில் 133 வாரங்கள் திருக்குறள் தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.
பொறுப்பு
மு. படிக்கராமு, ராஜபாளையம், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றங்களில் செயலாளராகப் பணியாற்றினார். பாவாணர் கோட்ட நெறியாளராகச் செயல்பட்டார்.
விருதுகள்
- இளம் தமிழ்த் தென்றல்
- அறிவுச்சுடர்
- செந்தமிழ்ச் செல்வர்
- செந்தமிழ்ச் செம்மல்
- குறளாயச் சான்றோர்
- திருக்குறள் மாமணி
- நூலறி நுண்ணியர்
- வாழ்வியல் வழிகாட்டி
- தமிழ் அறிஞர்
- தமிழக அரசின் திருவள்ளுவர் விருது (2025)
மதிப்பீடு
மு. படிக்கராமு சொற்பொழிவாளர் மற்றும் ஆய்வாளராகத் திகழ்ந்தார். குறள் மற்றும் தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெடுத்தவராகவும், திருக்குறள் அறிஞர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.