மருதக்கலி
மருதக்கலி கலித்தொகையிலுள்ள மருதத்திணைப்பாடல்கள். மருதன் இளநாகனார் பாடியது.
ஆசிரியர்
மருதன் இளநாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன. மதுரை என்னும் ஊர்க்குறிப்புடன் ‘மதுரை மருதன் இளநாகன்’, ‘மதுரை மருதன் இளநாகனார்’ என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார். பாலை பாடுதற்குப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சி பாடுதற்குக் கபிலரும் போல, மருதம் பாடுதற்கு இளநாகனார் சிறந்தவரென்று கொண்டு 'மருதன் இளநாகனார்' என அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதினர். இவர் கலித்தொகையில் மருதத்திணை சார்ந்த 35 பாடல்கள் பாடினார்.
மருதக்கலி பற்றி
கலித்தொகையில் மருதத்திணைப்பாடல்கள் 35 உள்ளன. இவை மருதக்கலி என வழங்கப்பட்டது. இவை கலித்தொகை நூலில் 66-100 என்ற எண் கொண்ட பாடல்களாக உள்ளன. இதிலுள்ள பாடல்கள் தலைவன் தலைவிக்கு இடையேயான ஊடல் பாங்கினை பல்வேறு கோணங்களில் காட்டுகின்றன.
ஊடலும் ஊடல் தீர்க்கும் உரையாடல்களும், தலைவியின் ஊடல், காமக்கிழத்தியின் ஊடல், ஊடல் தீர்கின்றாள் தோழிக்குக் கூறியது, மகன் வாயில் ஆதல், தலைவன் வாயைக் கிண்டி அவன் பரத்தமையை வாங்கல், இழிந்தோர் ஊடல், உருவகப்படுத்தி ஊடல், பரத்தையைக் கடவுளாக்கி ஊடியது, பரத்தையைக் காடைச்சண்டை, குதிரையேற்றம், யானையேற்றம், புனலாடல் ஆகிய விளையாட்டுகளோடு ஒப்பிட்டு ஊடியது, ஆண்மகன் ஊடி விலகிய பெருந்திணை, தலைவி தன் மகனிடம் கூறி ஊடியது, மகன் வாயிலாக ஊடல் தீர்ந்தது, தோழியோடு கோயிலுக்கு அனுப்பிய மகன் பர-தாயர் பூட்டிய அணிகளுடன் வந்ததைக் கூறி ஊடியது, விளையாடச் சென்ற மகன் அணிகலன்களுடன் வந்ததைக் கூறி ஊடியது, குழந்தையைப் பாராட்டிக்கொண்டே தலைவனோடு ஊடியது, குழந்தையைச் சொல்லி ஊடல் தீர்ந்தது என பாடல்கள் அமைந்துள்ளன.