being created

குற்றுழிஞை

From Tamil Wiki
Revision as of 03:08, 28 June 2025 by Jayashree (talk | contribs)

குற்றுழிஞை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. மதிலைக் குறுகிச் சென்று போர் செய்வதைக் கூறுவது குற்றுழிஞை. நொச்சியாரின் கடத்தற்கரிய காவல்காட்டினைக் கடந்து தனி வீரனோ, படையோ, எயிலுக்குள் புகுவதும், மறக்களிப்பால் கூத்தாடியபடி அரணுக்குள் புகுவதும் குற்றுழிஞையின் பாற்படும்.

விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் மூன்று கொளுப்பாடல்கள் இதன் இலக்கணத்தை வகுக்கின்றன.

கொளு 1

பகைவரது அழிவற்ற அரண் ஒன்றின்மேல், தான் ஒருவன் மட்டுமே நின்று உழிஞை மறவன் ஒருவன் தன் வீரத்தை வெளிப்படுத்திப் போரிடுவது .

கருதாதார் மதில் குமரி மேல்
ஒருதானாகி இகல் மிகுத்தன்று(கொளு 6.13)

வெண்பா

குளிறு முரசினான் கொண்டான் அரணம்
களிறும் கதவு இறப் பாய்ந்த - ஒளிறும்
அயிற்றுப் படைந்த அணிஎழு எல்லாம்
எயிற்றுப் படையால் இடந்து (107)

வெண்பா: உழிஞை வேந்தன் நொச்சியாரின் அரணை வென்று கைப்பற்றக் கருதி, எயிலின் புறத்தே காத்து நின்ற நொச்சியாரை வென்று அரணின் வாயிலை அவன் அடைந்ததும் அவன் களிறுகளும், தமது கொம்புகளால் வாயில் கதவுகளும் உடையும்படி குத்திப் பாய்ந்தன.

கொளு 2

வீரச்சங்கம் முழங்க ஊதுகொம்பு ஆரவாரிக்க உழிஞை மறவர்கள் நொச்சியாரின் கடத்தற்கரிய காவல்காட்டினைக் கடந்து எயிலுக்குள் புகுவதும் குற்றுழிஞை.

வளை ஞரல அயிர் ஆர்ப்ப
மிளைகடத்தலும் அத்துறை ஆகும்(கொளு 6.14)

வெண்பா

அந்தரம் தோயும் அமை ஓங்கு அருமிளை
மைந்தர் மறிய மறங்கடந்து - பைந்தார்
விரை மார்பின் வில் நரல் வெம்கணை தூவார்
வரைமார்பில் வைகின வாள் (108)

பொருள்: உழிஞை மறவருடைய வாள்கள், கடத்தற்கரிய காவற்காட்டில் நின்று போர் புரியும் நொச்சி மறவர் முதுகிடும்படி போரை வென்று, நொச்சி மறவருடைய மலை போன்ற மார்பிடத்தே தங்கின.

கொளு 3

பெருமையினை உடைய கிடுகுப் படையைக் கொண்ட உழிஞை மறவர்கள் மறக்களிப்பால் கூத்தாடியபடி அரணினைக் குறுகுவது

படரும் தோல் படை மறவர்
ஆடலொடு அடையினும் அத்துறை ஆகும்(கொளு 6.15)

வெண்பா

நிறைபொறி வாயில் நெடுமதில் சூழி
வரைபுகு புள்ளின மான - விரைபடைந்தார்
வேல்ஏந்து தானை விறலோன் விறல் மறவர்
தோல் ஏந்தி ஆடல் தொடர்ந்து (109)

பொருள்: மிக்க வெற்றியை உடைய உழிஞை மன்னனின் மறவர்களும் வெற்றியாளரே. இவர்கள் கிடுகுப்படையைத் தம் கரங்களில் ஏந்தி மறக்களிப்பால் ஆடத் தொடங்கினார்கள்; ஆடியபடியே பெரிய மதிலின் உச்சியை விரைந்து சேர்ந்தார்கள். அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த காட்சி மலையின் உச்சியை அடைந்த பறவைக் கூட்டம் போன்று இருந்தது.

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.