மா.சு.சம்பந்தன்
- சம்பந்தன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சம்பந்தன் (பெயர் பட்டியல்)
மா. சு. சம்பந்தன் (மே 25, 1923 - செப்டெம்பர் 25, 2011) மாரம்பேடு சுப்ரமணியன் சம்பந்தன். தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், இதழியல் வரலாற்றாய்வாளர், தனித்தமிழ் ஆர்வலர், பெரியாரியச் சிந்தனையாளர். தமிழ் இதழியல் மற்றும் அச்சுத்தொழில் வளர்ச்சி பற்றிய இவருடைய ஆய்வுநூல்கள் முன்னோடியான முயற்சிகள்.
பார்க்க ஈழ எழுத்தாளர் சம்பந்தன்
பிறப்பும் கல்வியும்
சம்பந்தன் ஆந்திராவின் நகரி அருகில் மாரம்பேடு எனும் ஊரில், சுப்பிரமணியனின் மகனாக மே 25, 1923-ல் பிறந்தார். மாரம்பேடு சுப்பிரமணியன் மகன் சம்பந்தன் என்பதன் சுருக்கமே மா. சு. சம்பந்தன். சென்னை முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப்பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார்.
தனிவாழ்க்கை
மா.சு.சம்பந்தன் சென்னைக் கன்னிமாரா நூலகத்தில், இளநிலை அலுவலராகப் பணிபுரிந்தார். இவருக்கு ஐந்து மகன்கள்.மா.ச.இளங்கோவன் மூத்த மகன்.
இதழியல்
மா.சு சம்பந்தன் தொடக்க காலத்தில் தமிழர் மலர் என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். முருகு, மதி ஆகிய மாத இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தார். எங்கள் நாடு என்னும் நாளேட்டில் சிறிதுகாலம் துணையாசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
தனித்தமிழ் இயக்கம்
மா.சு.சம்பந்தன் தனித்தமிழியாக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழிலேயே முதல் எழுத்துக்களைப் போடவேண்டும் என்றும், தமிழில் பெயர்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். தன் பெயரை தொடர்பன் என்று மாற்றிக்கொண்டார். அப்பெயரில் எழுதியுமுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தின், 'செனட்' உறுப்பினராக பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில், அதிகம் பயன்படுத்திய தமிழ் அல்லாத சொற்களான ஸ்ரீ, ஸ்ரீமதி, அபேட்சகர் போன்றவற்றை, முறையே திரு, திருமதி, வேட்பாளர் என்று மாற்றிப் பயன்படுத்த, நடைமுறைகளை கொண்டு வந்தார். ’எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கன்யாகுமரி முதல் சென்னை வரை நடைப்போராட்டம் மேற்கொண்டார்.
அரசியல் கட்டுரைகள்
மா.சு.சம்பந்தன் தமிழியக்கம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார். வ.ராமசாமி ஐயங்கார் நடத்திய பாரத தேவி இதழிலும் சி. பா. ஆதித்தனார் நடத்தி வந்த தமிழன் இதழிலும் , ம.பொ.சிவஞான கிராமணி நடத்திய போர்வாள் இதழிலும் தமிழ் உலகம் போன்ற இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார்.
இதழியல் வரலாறு
மா.சு.சம்பந்தன் கன்னிமாரா நூலக ஆவணங்களில் இருந்து உருவாக்கிய தமிழ் இதழியல் வரலாறு முக்கிய்மான ஒரு முன்னோடி முயற்சியாகும். எழுத்தும் பதிப்பும், எழுத்தும் அச்சும் உட்பட இதழியல் வரலாறாக ஐந்து நூல்களை எழுதினார்.
அரசியல்
மா.சு.சம்பந்தன் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர். 1959 முதல் 1964 வரை சென்னை மாநகராட்சி சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.சி.என்.அண்ணாத்துரையுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.
அமைப்புப்பணிகள்
தமிழ்ப்பேரவை அமைப்பாளராகவும். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளராகவும் மா.சு.சம்பந்தன் பணியாற்றினார். தமிழர் கழகம் என்னும் அமைப்பை தொடங்கி நடத்தினார்
சென்னை பல்கலைக்கழக பேரவை (செனெட்) உறுப்பினராகவும் பணியாற்றினார்.
பதிப்பகம்
மா.சு.சம்பந்தன் தமிழர் பதிப்பகம் என்னும் வெளியீட்டகத்தை 1947 முதல் நடத்தினார். கா.அப்பாத்துரை எழுதிய வருங்கால தமிழகம், மு. வரதராசன் எழுதிய கிபி 200 , கி.ஆ.பெ. விசுவநாதம் எழுதிய வானொலியிலே தமிழ் ஒளி எழ்திய வீராயி போன்ற பல குறிப்பிடத்தக்க நூல்களை வெளியிட்டார்.
மறைவு
மா.சு.சம்பந்தன் தன் 89-வது வயதில் செப்டெம்பர் 25, 2011-ல் இலக்கியக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும்பொருட்டு வெளியே சென்றார். அதன்பின் காணாமலானார்[1].
விருதுகள்
- 1966-ம் ஆண்டு, 'அச்சுக்கலை' என்ற நூலுக்கு, தமிழக அரசின் முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார்.
- 1982-ம் ஆண்டு, 'அச்சும் பதிப்பும்' என்ற நூலுக்கு, எம்.ஜி.ஆர். தமிழக அரசின் பரிசை வழங்கினார்.
- 1986-ம் ஆண்டு'தமிழ் இதழியல் வரலாறு' என்ற நூலுக்கு, தமிழக அரசின் விருது பெற்றார்.
இலக்கிய இடம்
தமிழிலக்கியம், தமிழ் இதழ்கள் ஆகியவற்றின் வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவர் மா.சு.சம்பந்தன்.
நூல்கள்
- சிறந்த பேச்சாளர்கள் - 1947
- சென்னை மாநகர் - 1949
- திருச்சி விசுவநாதம் - 1949
- அச்சுக்கலை - 1959
- அச்சும் பதிப்பும் - 1980
- எழுத்தும் அச்சும் - 1981
- தமிழ் இதழியல் வரலாறு - 1989
- தமிழ் இதழியல் சுவடுகள் - 1990
- தமிழ் இதழியல் களஞ்சியம் - 1990
- தொடர்பன் கட்டுரைகள் - 1998
உசாத்துணை
- மா.சு.சம்பந்தன் வாழ்க்கைக்குறிப்பு
- மா.சு.சம்பந்தன், தினமணி செய்திl
- அச்சும்பதிப்பும், தமிழ் இணையநூலகம்
- தமிழ் இதழியல் வரலாறு இணையத்தில்
- மா.சு.சம்பந்தன் நூல்கள் இணையநூலகம்
- மா.சு சம்பந்தன் திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:50 IST