under review

மதுரைத் தத்தங்கண்ணனார்

From Tamil Wiki
Revision as of 20:04, 26 February 2025 by SakthivelS (talk | contribs) (Created page with "மதுரைத் தத்தங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== மதுரைத் தத்தங்கண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரைத் தத்தங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைத் தத்தங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணன் என்னும் இயற்பெயர் கொண்டவர். தத்தன் என்பாரின் மகன். மதுரை நகரில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைத் தத்தங்கண்ணனார் பாடிய பாடல் அகநானூறில் 335 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டுவதற்காக தலைவியை பிரிந்து செல்வதால் ஏற்படும் துன்பத்தை எண்ணி பார்க்கும் தலைவன் தனக்குத்தானே தலைவியை உடன் அழைத்து செல்வோம் என கூறுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மன துன்பத்தால் அல்லல்படும் மக்களை குணப்படுத்தும் அருட்தன்மை இருந்தும், ஒருவரிடம் பொருள் செல்வம் இல்லையென்றால் அவரது அருட்தன்மை பயன்தராது வீணாகும்.
  • தலைவன் பொருளீட்ட செல்லும் பாதையானது கடும் வெப்பம் வீசும் பாலை நிலப்பகுதியாகும். அங்கு தனது பெண் யானையின் தாகத்தினை தீர்க்க ஆண் யானையானது தனது தந்தங்கள் உடையும்படிக்கு வலிமையான யா மரத்தை குத்தி அம்மரத்தின் பட்டைகளை உரித்து நீர்ச்சத்து மிக்க மரத்தின் தண்டுப்பகுதியை கொண்டு செல்லும்.
  • மதுரை நகரத்தை ஆண்ட பாண்டியன் மன்னர்களில் வெற்றி மிக்க போர்களை செய்தவன் செழியன். அவனது கோட்டை மதிலின் புறத்தில் பனைமரங்கள் காணப்படும். அப்பனைமரங்கள் மழை காணாது நீண்ட காலம் வெயிலில் கிடந்து வாடியிருக்கும். பனைமட்டைகளால் சூழப்பெற்ற பனம் பூக்கள் காற்றில் வெண்ணிறமாக அசைந்தாடுகின்றன. பனைமட்டைகளுக்குள் பனக்காய்கள் குலைகுலையாக உள்ளன. அவற்றின் உள்ளமைந்த நுங்கு நீரை காட்டிலும் இனியதாக இருக்கும்.
  • உவமை: தலைவியுடனான இருத்தல் தலைவனுக்கு பாண்டியனின் மதில் புறத்தே இருக்கும் பனையை ஒத்ததாக அமைந்துள்ளது.

பாடல் நடை

அகநானூறு - 335

  • திணை: பாலை
  • துறை:தலைமகன் பொருள்கடைக் கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவழுங்கியது.

இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
யானும் அறிவென்மன்னே; யானை தன்
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
இன்னா வேனில் இன் துணை ஆர,
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
அரிய அல்லமன்,
...............................................................
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.