ய.மகாலிங்க சாஸ்திரி
ய. மகாலிங்க சாஸ்திரி (ஜூலை 31, 1897 - ஏப்ரல் 14,1967) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சம்ஸ்கிருத அறிஞர். முழுப் பெயர் யக்ஞசுவாமி மகாலிங்க சாஸ்திரி.
பிறப்பு, கல்வி
மகாலிங்க சாஸ்திரி, யக்ஞசுவாமி-சம்பூர்ணம்மாள் இணையருக்கு ஜூலை 31, 1897 அன்று மூத்த மகனாகப் பிறந்தார். நீலகண்ட தீக்ஷிதர், அப்பய்ய தீக்ஷிதரின் பரம்பரையைச் சேர்ந்தவர். மகாலிங்க சாஸ்திரியின் கொள்ளுத் தாத்தா மன்னார்குடி ராஜூ சாஸ்திரிகள், பிரிட்டிஷாரிடமிருந்து முதன் முதலில் மஹாமகோபாத்யாயா பட்டம் பெற்றவர், தந்தை யக்ஞசுவாமி சம்ஸ்கிருத அறிஞர். இசையில் தேர்ந்தவர். தந்தை யக்ஞசுவாமி நடத்தி வந்த பாடசாலையில் பயின்ற மகாலிங்க சாஸ்திரிக்கு, கல்வி கற்கும்போதே 1913-ல் மரகதவல்லியுடன் திருமணம் நிகழ்ந்தது. 1933-ல், சென்னை மாநிலக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் மகாலிங்க சாஸ்திரி. தொடர்ந்து பயின்று எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என மும்மொழிகளில் வல்லவரானார். ஜோதிடம் கற்றுக் கொண்டதுடன், கர்நாடக இசையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். புல்லாங்குழல் வாசிப்பில் தேர்ந்தவரானார்.
தனி வாழ்க்கை
படிப்பை முடித்ததும் சில காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார் மகாலிங்க சாஸ்திரி. பின் மதுரா காலேஜ் மற்றும் அண்ணாமலைப் பல்கலையில் சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். அதன் பின் தருமபுரம் ஆதினத்தைச் சேர்ந்த ஓரியண்டல் கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார். அங்கு தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் ஆகம சாஸ்திரத்தை மாணவர்களுக்குப் போதித்து வந்தார். தன்னுடைய மூன்று மகன்களையும் நான்கு மகள்களையும் உயர் கல்வி பயில வைத்தார். பணி ஓய்வு பெறும் வரை தருமபுரம் ஆதினக் கல்லூரியிலேயே பணியாற்றினார்.
இலக்கியப் பங்களிப்பு
1920-ல், விவேகபோதினி இதழ் மூலம் மகாலிங்க சாஸ்திரியின் எழுத்துப் பயணம் தொடங்கியது. அவ்விதழில் ஜோதிடம் மற்றும் இசை பற்றிச் சில கட்டுரைகளை எழுதினார். அக்காலத்தின் புகழ் பெற்ற ஆங்கில இதழான ‘திரிவேணி’ ஆசிரியர் குழுவினருடன் ஏற்பட்ட நட்பால் அவ்விதழிலும் சில கட்டுரைகளை எழுதினார். கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், எழுத்தாளர் கி.சந்திரசேகரன் ஆகியோரின் ஊக்குவிப்பால் சிறுகதைள் எழுத ஆரம்பித்தார். 1942-ல், ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் ‘மண்ணாங்கட்டி’ என்ற இவரது நகைச்சுவைப் படைப்பு வெளியானது. ‘ராஜூ என் நண்பன்’ என்பது, 1945-ல், சுதேசமித்திரனில் வெளியான இவரது நகைச்சுவைச் சிறுகதையாகும். தொடர்ந்து கலைமகள், பாரதமணி, சில்பஸ்ரீ, குமரிமலர் போன்றவற்றில் இவரது கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகின. ஹிந்து இதழிலும் சில மதிப்புரைகளை எழுதினார். மதுரை புஷ்பவனம், பல்லவி சோமு பாகவதர் போன்ற அக்காலத்து இசை மேதைகள் பற்றி பாரதமணி. சுதேசமித்திரன் இதழ்களில் விரிவாக எழுதியிருக்கிறார்.
மகாலிங்க சாஸ்திரி, ஜோதிட மேதை பி.வி. ராமனின் ஜோதிட இதழில் ஜோதிடம் குறித்து நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர். மகாலிங்க சாஸ்திரியின் நகைச்சுவைக் கதைகள் தொகுக்கப்பட்டு ‘மாப்பிள்ளை ஆல்பம்’ என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது.
மொழிபெயர்ப்புகள்
மகாலிங்க சாஸ்திரி, பல சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்ததுடன் ஔவையின் ‘வாக்குண்டாம்’, ‘நல்வழி’ போன்ற நூல்களை சம்ஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த், செஸ்டர்ஃபீல்ட், மற்றும் ஷேக்ஸ்பியரின் கவிதை மற்றும் பாடல்களை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார். சம்ஸ்கிருதம் பயிலும் மாணவர்களுகுப் பாட நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். கா.சி.வேங்கடரமணியின் ‘A day with Sambhu' ஆங்கில நூலை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது சம்ஸ்கிருதப் படைப்புகளை, கவிதைகளை ஏ.பி. கெய்த் (A.B. Keith), ஈ.ஜே. ராப்ஸன் (E.J. Rapson), எல்.டி.பர்னெட் (L.D.Barnet), எஃப் எட்கெர்டன் F.Edgerton உள்ளிட்டப் பல வெளிநாட்டுப் படைப்பாளிகள் பாராட்டியுள்ளனர்.
பிற பங்களிப்புகள்
சிறுவர்களுக்காகவும் கதைகள் எழுதியுள்ளார் மகாலிங்க சாஸ்திரி. தருமபுரம் ஆதினம் சார்பாக வெளிவந்த ‘ஞானசம்பந்தம்’ இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். ’ஆர்ய தர்மம்’ இதழிலும் இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. ஓரியன்ட் ரிசர்ச் ஜர்னல், தமிழுலகு, நவயுவன், தினமணி, ரஸிகன், உமா, அமுதசுரபி என இவர் எழுதியுள்ள இதழ்களின் பட்டியல் நீளமானது. வானொலியிலும் உரையாற்றியுள்ளார். கவிதை, காவியம், நாடகம், தத்துவ நூல்கள், மொழிபெயர்ப்பு என சம்ஸ்கிருதத்தில் சுமார் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.
தி.ஜானகிராமன், ஹிந்து என். ரகுநாத ஐயர் (ரஸிகன்) கா.சி.வேங்கடரமணி, சர்.சி.பி.ராமசாமி ஐயர் உள்ளிட்ட பலராலும் மதிக்கப்பட்ட மகாலிங்க சாஸ்திரி காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் போன்றோரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்தார். திருவாலங்காட்டில் ஆஸ்ரமம் ஒன்றை நிறுவி அதன் மூலம் சம்ஸ்கிருத இலக்கியங்களை அச்சிட்டு வந்தார். இசைக் கலைஞர்களுக்காகப் பல கிருதிகளை எழுதியுள்ளார்.
விருதுகள்
- ‘கவி சர்வ பௌமா’ பட்டம் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வழங்கப்பட்டது.
- சம்ஸ்கிருத அகாடமி ‘கவி சேகரா’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.
- சுவாமி சிவானந்தர் ‘ஞான பாஸ்கரா’ என்ற பட்டமளித்துச் சிறப்பித்துள்ளார்.
மறைவு
ய. மகாலிங்க சாஸ்திரி, ஏப்ரல் 14,1967-ல், வீட்டில், வானொலியில் கேட்ட இசை நிகழ்ச்சி பற்றி உறவுகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே காலமானார்.
இலக்கிய இடம்
பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் தந்தவர். நகைச்சுவை அம்சமுள்ள பல கதைகளைப் படைத்தவர். இசைக் கலைஞர்கள் குறித்த இவரது கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தன. சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடத்தக்க பல படைப்புகளைத் தந்திருக்கிறார். “இளநகையும் காவிரிக்கரையில் உதித்த நாசூக்கான பேச்சும் இவருடைய தமிழ்க் கதைகளைப் படிப்போருக்குப் பொழுது போவதே தெரியாமல் செய்து விடும். குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களையும், சமூகத்தில் கால விளைவால் உண்டாகும் மாறுதல்களையும், நேர்மையுடனும் உள்ளன்புடனும் சித்திரிக்கும் சாமர்த்தியத்தைத் திரு மகாலிங்க சாஸ்திரிகளுடைய நாவல்களில் காணலாம்” என்று மதிப்பிடுகிறார் எழுத்தாளர் ரஸிகன் (நா. ரகுநாதய்யர்).
“திரு.மஹாலிங்க சாஸ்திரிகள் போல் பல துறைகளில் தலைசிறந்து விளங்குகிறவர்கள் ஒரு தலைமுறையில் வெகு சிலரே தோன்றுகிறார்கள்” என்பது தி.ஜானகிராமனின் கருத்து.
இவரது நூல்கள்
- ராஜு சாஸ்திரிகளின் மகிமை (வாழ்க்கை வரலாறு)
- மாப்பிள்ளைத் தோழன் (நாவல்)
- நாமொன்று நினைக்க (நாவல்)
- மாப்பிள்ளை ஆல்பம் (சிறுகதைத் தொகுப்பு)
சிறுகதைகள்
- மண்ணாங்கட்டி
- ராஜூ என் நண்பன்
- காபி வேண்டாம்
- இது ஒப்பந்த கல்யாணமல்ல
- நாகுவின் நாட்டுப்பெண்
- தலை தீபாவளி
- முத்துவையரின் பங்களா
- பானை பிடித்தவள்
- ராஜத்தின் கவுன்
- க்ளாஸ்மேட் செல்லப்பா
- கேப்டன் காசிநாதன்
- சீதாவின் சுயம்வரம்
- உன் முகத்தில் விழித்தேன்
- ஜோஸ்யம் மற்றும் பல
கட்டுரைகள்
- பல்லவி சோமு பாகவதர்
- மதுரை புஷ்பவனம் ஐயர்
- மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர்
- வேதாந்த தீபாவளி
- வேதாந்த சங்கீதம்
- விநாயகரும் நகைச்சுவையும்
- சிரஞ்சீவிக் கவிராயர்
- சந்திராஷ்டமம்
- மகாமகம்
- ஆகாயத்தில் அத்புதம்
- தை பிறந்தது
- ஆர்ய நவரத்ன மாலிகா
- அவள் நாடகம்
- பக்தியின் பெருமை மற்றும் பல
சிறார் படைப்புகள்
- மண்டூக நாயகி
- வீண் அபவாதம்
- சாயம் வெளுத்தது
- தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது
வடமொழி நாடகங்கள்
- ஆதிகாவ்யோதயம்
- உத்காத்ருதசானனம்
- ப்ரதிராஜசூயம்
- ச்ருங்கார நாரதீயம் மற்றும் பல
கவிதை நூல்கள்
- வனலதா
- கிங்கிணிமாலை
- ப்ரமர சந்தேசம்
- தேசிகேந்த்ரஸ்தவாஞ்சலி மற்றும் பல
உசாத்துணை
- ஸ்ரீ சாந்தி விலாஸ : https://archive.org/details/SriShantiVilasa
- பசுபதிவுகள் : http://s-pasupathy.blogspot.com/2019/07/1321-1.html
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.