நரைமுடி நெட்டையார்
நரைமுடி நெட்டையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நரைமுடி நெட்டையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
நரைமுடி நெட்டையார் பாடிய பாடல் அகநானூறில் 339-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை பிரிந்து சென்று பொருளீட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்த தலைவன், தலைவியை பிரிய முடியாமல் அடையும் மன ஊசலாட்டத்தை கூறுவதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பொருளீட்டுதலுக்கான அவசியமும் தலைவியுடன் இருந்து இன்பம் அனுபவிப்பதற்குமான ஆசை இரு பக்கமும் எரியும் கொள்ளிக்கட்டையினை போல ஆடவரின் உள்ளத்தை வாட்டுகிறது.
உவமைகள்
- தலைவனும் தலைவியும் உயிரும் உடலும் போல இணைந்திருக்கின்றனர். தலைவனை பிரிந்த தலைவியின் நிலை இரங்கத்தக்கது.
- பனிக்காலத்தில் குதிரைகளால் இழுக்கப்பெற்று விரைந்து செல்லும் பெரிய தேரின் சக்கரங்கள் அழுந்தி உண்டான பள்ளத்தில் தேங்கும் நீர் பாம்பை ஒத்து வளைந்தோடியது. பயறுகாய்கள் முளைவிட்டிருப்பது கையின் ஐந்துவிரல்கள் போல காட்சியளிக்கிறது.
பாடல் நடை
அகநானூறு - 339
- திணை: பாலை
- துறை: போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்
நோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற்
பாம்பென முடுகுநீர் ஓடக் கூம்பிப்
பற்றுவிடு விரலிற் பயறுகாய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றாற் பொழுதே
ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமந் தட்பக்
கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய
இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோளே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- அகநானூறு - 339:Tamilvu
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.