ஏ. கே. செட்டியார்
ஏ. கே. செட்டியார் (ஏ. கருப்பன் செட்டியார்; பிறப்பு: நவம்பர் 3, 1911; இறப்பு: செப்டம்பர் 10, 1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படங்கள் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். காந்தி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்தவர். ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘குமரி மலர்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.
பிறப்பு, கல்வி
ஏ. கருப்பன் செட்டியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ. கே. செட்டியார், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911-ல் பிறந்தார். அவரது இளமைப்பருவம் செட்டிநாட்டிலும் திருவண்ணாமலையிலும் கழிந்தது. பள்ளிப்படிப்பை திருவண்ணாமலையில் நிறைவு செய்தார். 1935-ல் ஜப்பான் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படக்கலை பயின்றார். அதன் பிறகு சிறப்புப் பயிற்சிக்காக 1937-ல், நியூயார்க் சென்றார். அங்கு போட்டோகிராபிகல் இன்ஸ்டிட்டியூட்டில் ஓராண்டு பயின்று புகைப்படக் கலையில் சிறப்பு டிப்ளமோ பட்டம் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஏ.கே.செட்டியார் இளம் வயதிலேயே பர்மாவில் சில காலம் பணிபுரிந்தவர். அங்கு ‘தனவணிகன்’ இதழுக்குச் சில காலம் ஆசிரியராக இருந்தார். பின் தமிழகம் திரும்பியவர் தனது குடும்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டார். மக்களிடையே காந்தியத் தத்துவங்களைப் பரப்புவதையும், பொது அறிவைப் பரவலாகச் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏப்ரல் 1943-ல், குமரி மலர் மாத இதழைத் தொடங்கினார். ஒரே மாதிரியான முகப்புப் படத்தில் வண்ணங்கள் மட்டும் இதழுக்கு இதழ் மாற்றப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்ட ஏ.கே. செட்டியார், தனது பயண நூல்கள் அனைத்தையும் ’குமரி மலர்’ பதிப்பு மூலம் வெளியிட்டார். 1850-1925 காலப் பகுதியில், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 140 கட்டுரைகளைத் தொகுத்து ‘பயணக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் ஆறு நூல்களாக வெளியிட்டார்.
ஏ. கே. செட்டியார் எழுதிய மொத்த நூல்கள் 17. முதல் நூல் "ஜப்பான்'. இறுதியாக அவர் வெளியிட்ட நூல் உணவு. ஜப்பான் நாட்டில் புகைப்படக் கலையைப் படிப்பதற்காகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு எழுதிய நூல் தான் ‘ஜப்பான்'.
காந்தி பற்றிய ஆவணப்படம்
காந்தி மீது மிகவும் ஈர்ப்புக் கொண்டிருந்த ஏ.கே. செட்டியார் அவரைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்கத் தீர்மானித்தார். அதற்காக உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை பலரைத் தொடர்பு கொண்டார். பலருக்குக் கடிதம் எழுதினார். பல்வேறு தகவல்களைத் திரட்டினார். 1937-ல், தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியுடன் முன்பு தொடர்பில் இருந்தவர்களைச் சந்தித்தார். தேவையான தகவல்களைத் திரட்டினார்.
தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டார். பல நாட்டு அரசுகளிடமிருந்தும் தனியார் அமைப்பினரிடமிருந்தும், காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். அந்தச் சேமிப்புகளை அடிப்படையாக வைத்து, 12000 அடி நீளத்தில், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட அதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. 1940-ல் அந்த ஆவணப்படத்தை எடுத்து முடித்தார். தமிழில் காந்திஜி பற்றி வெளியான முதல் வரலாற்று ஆவணப்படம் அதுதான்.
ஆனால், பிரிட்டிஷாருக்கு அஞ்சி திரையரங்குகள் காந்தி பற்றிய படத்தைத் திரையிட அஞ்சின. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1948-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, புது தில்லியில் இந்தப் படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ல், தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டது
ஏ.கே.செட்டியார் இப்படத்தை 1953-ல், ஹாலிவுட்டுக்குச் சென்று ஆங்கிலத்தில் தயாரித்து வெளியிட்டார். அதன் பின்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத் திரைப்படத்தின் பிரதி, முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதின் அரிய முயற்சியால், சான்பிரான்ஸிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்டது. ஜனவரி 19, 2006-ல் சென்னையில் திரையிடப்பட்டது. இதன் மற்றொரு பிரதி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அரிய இந்த ஆவணப்படத்தில் காந்தியின் பிரிட்டிஷாருக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், உப்பு சத்தியாக்கிரகக் காட்சிகள், காந்தியின் வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணங்கள், தொண்டர்களுடான அவரது சொற்பொழிவுகள் எனப் பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரிய இந்த ஆவணப்படம் யூ ட்யூபிலும் காணக் கிடைக்கிறது[1].
மறைவு
ஆவணம்
இலக்கிய/வரலாற்று இடம்
நூல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.