கந்தர்வன்
கந்தர்வன்(இயற்பெயர் நாகலிங்கம்)(பெப்ரவரி 3, 1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், பொதுவுடமைவாதி ,தொழிற்சங்கத் தலைவர். தொழிற்சங்கவாதியாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்த கலைஞராகவும் தீவிர பங்களிப்பு செய்த கந்தர்வன், வாழ்வின் அரிய தருணங்களைக் கதைகளாக்கியவர்எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
பிறப்பு,கல்வி
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கலில் கணேசன்-கனகம்மாள் இணையருக்கு பெப்ரவரி 3, 1944 அன்று பிறந்தார். தனது சிறுவயதிலேயே மளிகைக் கடை விற்பனை ஊழியர், ஜவுளிக் கடை உதவியாளர், ஓட்டல் தொழிலாளி, பால்பண்ணை மேற்பார்வையாளர் என்று பல வேலைகளையும் பார்த்து, படிக்கும் ஆர்வம் மேலெழ, நிறைய தடைகளை மீறி படித்து, தனது 29-ஆம் வயதில் அரசுப் பணிக்கு வந்தார். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.
தனி வாழ்க்கை
கந்தர்வனின் மனைவி பெயர் சந்திராதேவி. மகள்கள் மைதிலி, சாருமதி.
தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பல்லாண்டுகள் பணிக்குப் பிறகு, மாவட்டக் கருவூல அதிகாரியாக (T.O.) பணியாற்றி ஓய்வு பெற்றார். கருவூல ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மாநில அளவில் போராட்டக்காலங்களில் அனைவராலும் அறியப்பட்டவர். அதனாலேயே 19 மாதகாலப் பணியிடை நீக்கம், 6 ஆண்டு ஊதிய உயர்வு ரத்து, ஓயாத பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு
இலக்கியப் பணி
லா.ச.ராவுடன் ஒரு அழுத்தமான உரையாடல், வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற இரண்டு கட்டுரைகளும். கண்ணதாசன் இதழில் வெளிவந்து பரவலாக பேசப்பட்டன.கண்ணதாசன் இதழின் ஆசிரியர் இராம. கண்ணப்பனின் ஆலோசனையினால், திருலோக சீதாராமின் கந்தர்வ கானம் நூலில் வந்த கந்தர்வன் என்ற பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டார். கந்தர்வனின் முதல் சிறுகதை சனிப்பிணம் 1970 -ல் தாமரையில் வெளிவந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றியவர். கண்ணதாசன் இதழில் இலக்கிய விமரிசனங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா , சிகரம், செம்மலர், விகடன் என்று பல இதழ்களில் அவரது படைப்புகள் வெளிவந்தன. தீக்கதிரின் வண்ணக்கதிர் இலக்கியப்பகுதியிலும், ‘புதிய புத்தகம் பேசுது‘ இதழிலும் நூல்விமரிசனங்கள் எழுதினார். பல கவியரங்குகளில் கவிதை வாசித்தார். கந்தர்வனின் "கயிறு" கவிதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. "சனிப்பிணம்" எனும் சிறுகதையே அவரின் முதல் சிறுகதை. அந்த சிறுகதை 1970 இல் தாமரையில் வந்தது. அதற்கு பின்னால் எழுதிய 'மைதானத்து மரங்கள்' எனும் சிறுகதையை எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள் ‘இலக்கியச் சிந்தனை’யில் அந்த மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார். அந்தக் கதை பல தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கிறது, சில வருடங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் துணைப்பாடத்திலும், இடம் பெற்றது. அவரின் "தண்ணீர்" என்ற சிறுகதை இன்றைய ஒன்பதாம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
அவரது சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எம்.ஃபில், பி.எச்.டி. பட்டங்களுக்குச் சிலர் ஆய்வுசெய்து வருகிறார்கள். காலஞ்சென்ற எழுத்தாளர் இதயகீதன் கந்தர்வன் படைப்புகளை தனது எம்.ஃபில் ஆய்விற்காக தேர்ந்தெடுத்து , அந்த ஆய்வை 'பழைய சோறும் பாதாம் கீரும்,' என்ற புத்தகமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இவரது "சாசனம்" சிறுகதை என்.எஃப்.டி.சி (இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக)த்தின் நிதி உதவியோடு இயக்குநர் மகேந்திரனால் படமாக்கப்பட்டு ஜூலை 28, 2006 அன்று வெளியிடப்பட்டது. அரவிந்த் சாமி, கௌதமி, சபீதா ஆனந்த் உள்ளிட்ட பலரும் அதில் நடித்திருந்தார்கள்.
“கேள்விகள்“ ,“விசாரணை” போன்ற பல நாடகங்களையும் எழுதி, இயக்கி புதுக்கோட்டை தோழர்களைக்கொண்டு வீதிகளில் எடுத்துச்சென்றவர். எழுச்சிமிக்க நாடகங்கள் பலவற்றை மேடையேற்றியிருக்கிறார்.
“கேள்விகள்“ ,“விசாரணை” போன்ற பல நாடகங்களையும் எழுதி, இயக்கி புதுக்கோட்டை தோழர்களைக்கொண்டு வீதிகளில் எடுத்துச்சென்றவர். எழுச்சிமிக்க நாடகங்கள் பலவற்றை மேடையேற்றியிருக்கிறார். தன் வாழ்வின் சாரமாக அவர் எழுதிக்கொண்டிருந்த நாவல் முடிவுபெறுவதற்குள் இறந்து விட்டார்.
இலக்கிய இடம்
கடைசிக்காலத்தில் உருவான இந்த விலக்கம், மரணத்தைக் கண்டுகொண்டநிலைதான் கந்தர்வனைக் கோட்பாடுகளை உதறி மனிதர்களை அப்பட்டமாகப் பார்க்கச்செய்தது. தன்னுடைய சொந்த கிராமத்தையும், மண்மறைந்த உறவினர்களையும், அவர்களுடன் அழிந்த ஒரு வாழ்க்கையையும் எழுதிவிட வேண்டும் என்று வெறி கொள்ளச்செய்தது. கந்தர்வனின் கடைசிக்கதைகள் காட்டுவது புதுக்கோட்டைப் பகுதி நிலம் ஐம்பதுகளில் ஆரம்பித்து மெல்லமெல்ல புஞ்சை விவசாயம் இல்லாமலாகி பாலையாக ஆவதன் சித்திரத்தைத்தான். நிலத்தை நம்பி வாழ்ந்த சிறுநிலக்கிழார் குடும்பத்தின் அழிவையே அவர் சித்தரிக்கிறார். அது அவரது சொந்தக்குடும்பம். சொந்தச்சாதி. செழிப்பான ஒரு வாழ்க்கையில் இருந்தும் பண்பாட்டில் இருந்தும் சரிந்து பட்டினி நோக்கிச் சென்று அந்நிலையிலும் தங்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி அவமானமடையும் மக்கள். பல கதைகளில் அந்த உக்கிரமான மானுடப்பிரச்சினை பதிவாகியிருக்கிறது. ‘காளிப்புள்ளே’ என்ற கதைதான். அது மானுட மனத்தின் அதி நுண்மையான ஒரு இடத்தை மிகச்சிறந்த கலைஞனுக்குரிய விதத்தில் ‘தற்செயலாகத் தீண்டிச்செல்லும் கதை. தன் உரையாடல்களிலும், படைப்பிலும் ஒரு நுட்பமான நகைச்சுவையை எப்போதும் பொதிந்து வைத்திருந்தார் , அவரின் இறுதி நாட்கள்தான் அவர் வாழ்வில் படைப்பூக்க மிக்க நாட்கள். அல்லலுறும் மனநிலையும், தோல்வியும், துரோகமும் நிறைந்த நாட்கள் அவைகயெனினும் அதில்தான் அவர் இடைவிடாது வாசித்ததும், படித்ததும், நிகழ்வுகளில் பங்கேற்றதும்.
படைப்புகள்
கவிதைகள்
- கிழிசல்கள்
- மீசைகள்
- சிறைகள் (இவை மூன்றும் சிவகங்கை அன்னம் வெளியீடுகள்)
- கந்தர்வன் கவிதைகள் (தொகுப்பு நூல்)
சிறுகதைகள்
- சாசனம்
- பூவுக்கு கீழே
- கொம்பன்
- ஒவ்வொரு கல்லாய்
- அப்பாவும் அம்மாவும் (இவை அனைத்தும் சிவகங்கை அன்னம் பதிப்பகம்)
- கந்தர்வன் கதைகள் (தொகுப்பு நூல்)
குறுநாவல்
காவடி
உசாத்துணை
கந்தர்வன் கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன் கந்தர்வன் -ஜெயமோகன்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.