வடக்கத்தி பாணிக் கூத்து
வடக்கத்தி பாணிக் கூத்து தமிழ்நாட்டின் பழங்கலைகளில் ஒன்றான தெருக்கூத்தின் பாணிகளில் ஒன்று.
நிகழ்த்தும் இடங்கள்
திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய ஊர்களையொட்டிய வடபகுதியிலும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களிலும் வடக்கத்தி பாணிக் கூத்து ஆடப்படுகிறது.
பிரிவுகள்
வடக்கத்தி பாணிக் கூத்து என்று பொதுவாக அடையாளப் படுத்தப்பட்டாலும் வட்டாரம் சார்ந்த வேறுபாடுகள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க பிரிவு வந்தவாசி-புரிசை கிராமம் சார்ந்த குழுக்கள்.
தன்மைகள்
வடக்கத்தி பாணிக் கூத்துநிகழ்த்து முறையில் தெற்கத்தி பாணியைவிட நேர்த்தியானது. வடக்கத்தி பாணியில் வன்னியர் உள்ளிட்ட இடை நிலை சாதிகள் கூத்துக் கலைஞர்கள், வாத்தியார்களாக உள்ளனர். அவர்களில் பலர் இரண்டாம், மூன்றாம் தலைமுறை கூத்துக் கலைஞர்கள்.
இசைக்கருவிகள்
- முகவீணையும், பெடல் ஹார்மோனியமும் இந்தப் பாணிக்கான சிறப்பு இசைக்கருவிகள்.
- சுருதிக்கட்டை, மிருதங்கம், தாளம் ஆகியவை பிற கருவிகள்.
- கூத்தர்கள் தாம் பாடும் பாடல்களை ராக-தாளத்தோடு குறிப்பிட்டுப் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். செவ்வியல் இசையோடு ஒன்றிப் போகவில்லையெனினும் அந்தச் சாயலோடு பாடும் வழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர்.
ஒப்பனை
- தெற்கத்தி பாணியை ஒப்பு நோக்க வடக்கத்தி பாணிக் கூத்தின் ஒப்பனை மிகப் பொலிவானது. வடக்கத்தி பாணி ஒப்பனை கேரளத்தின் கதகளி மற்றும் கர்நாடகத்தின் யக்ஷகானம் இவற்றோடு ஒப்பு நோக்கத்தக்கது.
- கண்ணாடிகள் பதிக்கப்பட்டு பொலிவாக காட்சி தரும் கிரீடங்களும், புஜக்கட்டைகளும், மார்புப் பதக்கங்களும், காது கட்டைகளும், அணிகலன்களும், இடுப்பில் கட்டப்படும் டவுறு, அதற்குமேல் கட்டப்படும் அரைப்பாவாடை ஆகியவையும் அழகுற வடிவமைக்கப்பட்டவை. டவுறு என்ற வட்டுடுப்பு உறுதியான நெகிழியால் ஆனது.
- கூத்தர்கள் விறைப்பான பாவாடைகளை அணிவர்.
- கதாபாத்திரங்களுக்காகக் கூத்தர்களின் முகங்களில் தீட்டிக் கொள்ளப்படும் வர்ணங்கள் தெற்கத்தி, மேற்கத்தி பாணியைப் போல அடிப்படை வண்ணங்களோடு நின்றுவிடுவதில்லை. பேரரசன், இளவரசன் போன்ற நாயக, எதிர் நாயகப் பாத்திரங்களுக்கான அடிப்படை வண்ணங்களுக்கு மேல் வண்ண வளைகோடுகள் முகத்தில் வரையப்படும். கிருஷ்ணன் வேடத்திற்கு நீலம், அர்ஜுனனுக்கு பச்சை, சூரனுக்கு சிகப்பு, பெண் வேடத்திற்கு ரோஸ், மஞ்சள் நிறம் பயன்படுத்துவர்.
- வடக்கத்தி பாணிக்கூத்து மரபின் பொலிவான ஒப்பனைக்கு காஞ்சிபுரம் சார்ந்த சிற்பக்கலைமரபு காரணமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
உசாத்துணை
- தெருக்கூத்து: தொண்டை மண்டலக் கலை வடிவம் - மாற்று நாடகம் - பாணர் குடியிலிருந்து ஒரு குரல்
- கலை மற்றும் பண்பாடு - ranipet district
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.