ச.பாலசுந்தரம்
ச.பாலசுந்தரம் (ஜனவரி 18, 1924 - ஆகஸ்ட் 1, 2007) தமிழறிஞர். அகராதித் தொகுப்பாளர். இலக்கண அறிஞர், பதிப்பாளர், கல்வியாளர். கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரியில் பேராசிரியராகவும் பின்னர் தஞ்சை தமிழ்ப்பல்கலை கழக அகராதிப்பணி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
ச. பாலசுந்தரம் 18 ஜனவரி 1924-ல் தஞ்சையின் புறாநகரான கருந்தட்டான்குடி (கரந்தை)யில் சிற்பியாகிய மு.சந்திரசேகரனுக்கும் – விஜயாம்பாளுக்கும் பிறந்தார். தந்தையின் கல்சிற்பக்கூடத்தில் சிற்பக்கலை பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகத் தமிழ் வித்துவான் (புலவர்) பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ச.பாலசுந்தரம் 1950ல் பங்கஜவல்லியை மணந்தார். மதிவாணன் எனும் மகனும் தமிழ்மணி என்னும் மகளும் உள்ளனர்.ச.பாலசுந்தரத்தின் மகன் பா.மதிவாணன் பேராசிரியர் மற்றும் ஆய்வாளர்
ச.பாலசுந்தரம் 1950 முதல் 1982 வரை கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றினார். 1987 முதல் 1991 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறிவழி சங்க இலக்கிய அகராதி – சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணியில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றினார். தமிழக அரசின் புதிய இலக்கண உருவாக்க குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர், பாரதியார் பல்கலைக்கழகங்களில் தேர்வாளராகவும் வினாத்தொகுப்பாளராகவும் பணியாற்றினார்
கரந்தை தமிழ்ச்சங்கம், தஞ்சை தொல்காப்பியர் கழகம், தஞ்சை திருக்குறள் பேரவை, தஞ்சை தமிழ்ச்சங்கம், கம்பன் கழகம் ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினர், துணைத்தலைவர், தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.
இலக்கியவாழ்க்கை
பாலசுந்தரம் தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி ,தெளிதமிழ் ஆகிய இதழ்களில் கவிதைகள், கவிதைநாடகங்கள், இசைநாடகங்கள், உரைநடை நாடகங்கள், இலக்கண ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியத்திறனாய்வுக் கட்டுரைகள், பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள், குறுங்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார்.
ச.பாலசுந்தரம் கரந்தைக் கோவை முதலிய சிற்றிலக்கியங்கள், இசைநாடகங்கள் எழுதினார். இலக்கிய பேச்சாளர் என அறியப்பட்டார். ஆயினும் முதன்மையாக அவர் இலக்கண அறிஞர். தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் ஆராய்ச்சியுரை எழுதியிருக்கிறார். அவற்றைபெரியார் பல்கலைக்கழகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. பாலசுந்தரம் எழுதிய தென்னூல் தமிழின் புதிய வளர்ச்சிகள் அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்ட நவீன இலக்கண நூல்.
கவிதை நாடகம்
கல்லூரி மாணவர்களுக்கெனக் கவிதை நாடகம் எழுதி இசைப்பாடல்கள் அமைத்து நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார். இவரின் கவிதை நாடகங்களுக்காக பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, நீ. கந்தசாமிப்பிள்ளை ஆகியோரின் பாராட்டைப் பெற்றார்.
தமிழிசை
பாவலர் ச.பாலசுந்தரம் தமிழிசை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் து.ஆ.தனபாண்டியன் எழுதிய இசைக்குறிப்புகளுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். அவை தஞ்சை தமிழ்ப்பல்கலை வெளியீடாக வந்துள்ளன
மறைவு
ச.பாலசுந்தரம் ஆகஸ்ட் 1, 2007-ல் மறைந்தார்
விருதுகள், பட்டங்கள்
பட்டங்கள்
- பாவலரேறு பட்டம் (பனசை- பாவலர் மன்றம், திருப்பனந்தாள்)
- தொல்காப்பியப் பேரறிஞர் (கரந்தைத் தமிழ்ச்சங்கம்)
- தொல்காப்பியச் செம்மல் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
- தமிழ்ப்பேரவைச் செம்மல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
விருதுகள்
- பாரதிதாசன் விருது (தமிழக அரசு)
- தொல்காப்பியர் விருது
- மாமன்னர் இராசராசன் விருது
- இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது
வாழ்க்கை வரலாறுகள், நினைவுகள்
இலக்கிய இடம்
மரபிலக்கியத்தின் தொடர்ச்சியை கல்விக்கூடம் வழியாகவும் மேடைவழியாகவும் நிலைநாட்டியத் தமிழறிஞர். இலக்கண நூல்களை உருவாகிவரும் புதிய கணித்தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய கல்வித்தேவைக்காக அகராதி, தொகைநூல் வடிவில் அமைத்த முன்னோடி. பாலசுந்தரம் எழுதிய தொல்காப்பிய ஆய்வுகள் தமிழ் இலக்கண ஆய்வுகளில் முக்கியமானவை. நவீனத் தமிழ்ச்சூழலில் எழுதப்பட்ட இலக்கணநூலான தென்னூல் முதன்மையான பங்களிப்பு.
நூல்கள்
ச.பாலசுந்தரம் எழுதிய நூல்கள்
சிற்றிலக்கியம்
- கரந்தைக் கோவை[1]
நாடகங்கள்
- புலவருள்ளம் -கவிதை நாடகம்
- புரவலருள்ளம்- கவிதை நாடகம்
- வேள் எவ்வி
- சிவமும் செந்தமிழும்
- ஆதிமந்தி (கவிதை நாடகம்)
குழந்தை இலக்கியம்
- மழலைத்தேன் – மூன்று பகுதிகள்
வாழ்க்கை வரலாறு
- யான் கண்ட அண்ணா
- கலைஞர் வாழ்க
- புதிய ராகங்கள்
- இரு பெருங்கவிஞர்கள்
- அருட்புலவோரும் அரும்பெறல் கவிஞரும்
- புகழ்பெற்ற தலைவர்கள்
இலக்கணநூல்கள்
- சங்க இலக்கியத் தனிச்சொல் தொகுப்பு நிரல்
- செய்யுள் இலக்கணம்
- தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை – ஐந்து பாகங்கள்
- தென்னூல் – எழுத்து சொல் படலங்கள்
- தென்னூல் – இலக்கியப் படலம்
- எழுத்திலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
- சொல்லிலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
- யாப்பிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதி
- அகப்பொருளிலக்கணக் கலைச்சொற் பொருள் அகராதி
- புறப்பொருளிலக்கணக் கலைச்சொற்பொருள்துறை அகராதி
- மடைமாறிய தமிழ் இலக்கண நூல்கள்
- மொழியாக்க நெறி மரபிலக்கணம்
- மொட்டும் மலரும் மூன்று தொகுதிகள்
- மொழி இலக்கண வரலாற்றுச் சிந்தனை
- தமிழிலக்கண நுண்மைகள்
- நன்னூல் திறனாய்வுரை
- செய்யுள் இலக்கணம்
- இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழ் இலக்கணம்
உரை
- திருக்குறள் தெளிவுரை
இசைநூல்
- புதிய ராகங்கள். (து.ஆ.தனபாண்டியன்)
தன்வரலாறு
- நினைவலைகள்
தொகுப்பு
- திரு ஆலவாய் (மதுரை வரலாற்றுச் சுருக்கம்)
பதிப்பித்தவை
- தனிப்பாடல் திரட்டு – இரண்டு பகுதிகள்
- திருப்பெருந்துறைப் புராணம்
- திருநல்லூர்ப் புராணம்
- நீதித்திரட்டு
- சீர்காழி அருணாசலக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை கம்பராமாயண ஒப்புப் பகுதிகளுடன் கூடிய ஆராய்ச்சிப் பதிப்பு
உசாத்துணை
- முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்கள் (18.01.1924 – 01.08.2007)
- தென்னூல் – ச.பாலசுந்தரம் இணையநூலகம்
- கரந்தைக்கோவை இணைய நூலகம்
- இருபதாம் நூற்றாண்டுக்கான இலக்கணம் இணையநூலகம்
- பாவலரேறு பாலசுந்தரனாரின் தமிழியல் பணிகள், ந. பிரகாஷ், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், ஜனவரி 2018
- பா மதிவாணன் இணையப்பக்கம்
- இனிதினிது பா.மதிவாணன் இணையப்பக்கம்
- வளர்தமிழ் இலக்கணம் இணைய நூலகம்
- வழக்குச் சொல் விளக்க அகராதி இணையநூலகம்
- தனிப்பாடல் திரட்டு- இணையநூலகம்
- வழக்குச் சொல் விளக்க அகராதி இணையநூலகம்
- தமிழும் அதன் இலக்கண நூல்களும்
இணைப்புகள்
✅Finalised Page