நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்னும் ஊரில் உள்ள இரு சிவாலங்களில் ஒன்று சங்கரநாராயணர் ஆலயம். மூலவர் சங்கர நாராயணர் லிங்க வடிவில் உள்ளார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் இறுதி ஆலயம்.
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் நட்டாலம் பஞ்சாயத்தில் நட்டாலம் ஊர் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் பள்ளியாடியில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நட்டாலம் ஊரில் இரண்டு சிவாலயங்கள் உள்ளன. மகாதேவர் ஆலயத்தின் எதிரே உள்ள பெரிய குளத்தின் கிழக்கில் ஊரின் முக்கிய சாலையில் சங்கரநாராயணர் ஆலயம் உள்ளது.
மூலவர்
மூலவர் லிங்க வடிவில் இருக்கும் சங்கர நாராயணர். லிங்கத்தின் மேல் சங்கர நாராயண வடிவ வெள்ளி கவசம் சார்த்தப்படுகிறது.
கோவில் அமைப்பு
ஆலய வளாகம் கோட்டை மதில்சுவருடன் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிழக்கு வாசலில் முகப்பு மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி செம்புத் தகடு வேயப்பட்ட கொடிமரம் உள்ளது.
தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு வெளிபிராகாரங்களிலும் வாசல்கள் உள்ளன. மேற்கு வாசலின் எதிரே குளமும் மகாதேவர் ஆலயமும் உள்ளன. தென்கிழக்கில் கிணறு உள்ளது.
கோவிலின் முன்பகுதியில் சிறிய அறையும் அதை அடுத்து தெற்கு வடக்காக நீண்ட 21 தூண்களை கொண்ட அரங்கும் உள்ளன. அரங்கு நடுவில் வழிபாதையுடன் 100 செ.மீ. உயர திண்ணைகளுடன் உள்ள ஓட்டு கூரையாலான கட்டிடம்.
நமஸ்கார மண்டபம்: 16 தூண்களைக் கொண்ட கருங்கல்லால் ஆனது நமஸ்கார மண்டபம். இதன் நடுவில் 4 தூண்களைக் கொண்ட சிறு மண்டபம் உள்ளது, இதன் மேல் விதானத்தில் கஜலட்சுமி சிற்பம் உள்ளது. நமஸ்கார மண்டபத் தூண்களில் பாவை விளக்கு சிற்பங்களும் அரச குடும்பத்து ஆண்களின் அஞ்சலி ஹஸ்த சிற்பங்களும் உள்ளன.
ஸ்ரீகோவில்: வட்ட வடிவிலான ஸ்ரீகோவிலின் விமானத்தில் பிரம்மா, இந்திரன், நரசிம்மன் சிற்பங்களுடன் கோபுரம் தாங்கி பொம்மைகளும் கர்ணக்கூடும் உள்ளன. வேசர விமான வகையை சார்ந்தது. ஸ்ரீகோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது. உட்பகுதி சதுர வடிவம் கொண்டது. வாசலில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன.
சுற்று மண்டபம்: ஸ்ரீகோவிலையும் நமஸ்கார மண்டபத்தையும் சுற்றித் திறந்தவெளி உட்பிராகாரம் உள்ளது. சுற்றி மூன்று புறமும் சுற்று மண்டபங்கள் உள்ளன. பத்து துண்கள் கொண்ட வடக்கு மண்டபத்தில் மடப்பள்ளி உள்ளது. இதில் நான்கு தூண்களில் அஞ்சலி ஹஸ்த முழு உருவச் சிற்பங்கள் உள்ளன. எட்டுத் தூண்கள் கொண்ட மேற்கு மண்டபத்தில் இர்ண்டு தீப லட்சுமி சிற்பங்களும் அஞ்சலி ஹஸ்த சிற்பங்களும் உள்ளன.
திருவிழா
பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஒன்பதாம் நாள் வேட்டை நிகழ்ச்சி கோவிலின் மேற்கில் உள்ள குளத்தின் கரையில் நடக்கிறது. பத்தாம் நாள் ஆறாட்டு விழா காவனூர் என்ற ஊரில் நடக்கிறது.
வரலாறு
கோவிலின் கட்டுமானம் பற்றி அறிய தகவல்கள் கிடைக்கவில்லை. கோவிலுக்கு வெளியே கிடைத்துள்ள 2 கல்வெட்டுகளைக் கொண்டு இக்கோவில் 16 -ஆம் நூற்றாண்டில் இருந்ததை ஊகிக்கலாம்.
கல்வெட்டுகள்
- கி.பி.1665-ஆம் ஆண்டை சார்ந்த தமிழ் வட்டெழுதாலான கல்வெட்டு(T.A.S. Vol. VII p. 16) நட்டாலம் ஊர் அம்பலம் அருகே தங்கு மடம் ஒன்றில் உள்ளது. திருவிக்கிரமன் ரவி என்பவன் பயணிகள் தங்க சாவடி கட்டி நிபந்தமும் அளித்துள்ளான்.
- பொ.யு. 16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு(T.A.S. Vol. VII p.17) கோவிலின் வெளியே சாலையில் உள்ளது. இக்கல்வெட்டு நட்டாலம் கோவிலை ஆழ்வார் கோவில்(ஆழ்வார் விஷ்ணு) என்று குறிப்பிடுகிறது.
உசாத்துணை
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
- https://490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam
- புகைப்படங்கள் உதவி நன்றி https://shivantemple.blogspot.com/2019/07/12.html
- நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயம் படங்கள்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.