under review

நட்டாலம் மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
நட்டாலம் மகாதேவர் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்னும் ஊரில் உள்ள இரு சிவாலங்களில் ஒன்று மகாதேவர் ஆலயம். கோவிலின் மூலவர் மகாதேவர். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்று பரவலாக அழைக்கப்படுகிறார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு ஊர்களில் பன்னிரண்டாவது ஊரான நட்டாலத்தில் சங்கரநாராயணர் ஆலயத்துடன் மகாதேவர் ஆலயமும் உள்ளது.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் நட்டாலம் பஞ்சாயத்தில் நட்டாலம் ஊர் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் பள்ளியாடியில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சங்கரநாராயணர் ஆலயத்தின் மேற்குப் பக்கம் குளத்தைத் தாண்டி மகாதேவர் ஆலயம் உள்ளது.

மூலவர்

கோவில் மூலவர் மகாதேவர். பரவலாக அர்த்தநாரீஸ்வரர் என்று அறியப்பட்டாலும் ஆவண சான்றுகள் எதுவும் இல்லை. சிவாலய ஓட்டக்காரர்கள் மத்தியில் சிவனுக்கு கண் கொடுத்தவர் என்னும் தொன்மம் பரவலாக உள்ளது. பெரிய புராணாத்தில் வரும் கண்ணப்ப நாயனார் கதையை இக்கோவிலுடன் தொடர்புப்படுத்த எந்த ஆவண சான்றும் சிற்ப சான்றும் இல்லை.

கோவில் அமைப்பு

குளம் மற்றும் ஆலயம்

கோவில் கிழக்கு நோக்கி தரைமட்டத்திலிருந்து உயரத்தில் உள்ளது. கோவிலின் எதிரே குளம் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் பலிபீடம் உள்ளது. முன்வாசலைத் தாண்டி தெற்கு வடக்காக நீண்ட ஓட்டு கட்டிடம் உள்ளது. இதனை அடுத்து நமஸ்கார மண்டபமும் கருவறையும் உள்ளன.

நமஸ்கார மண்டபம்: தரைமட்டத்திலிருந்து 75 செ.மீ. உயரத்தில் நான்கு தூண்களுடன் ஓட்டுப்பணியால் ஆனது. நடுவில் கருவறையின் நேரெதிரில் நந்தி உள்ளது.

ஸ்ரீகோவில்: கூம்பு வடிவ கூரையுடன் வட்ட வடிவில் உள்ளது. மேற்கூரை மரப்பலகையால் வேயப்பட்டு செப்புத்தகடு போர்த்தப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நீள்சதுரவடிவில் உள்ளது. கருவறையும் அதன் முன் அர்த்த மண்டபமும் உள்ளது.

கோவிலைச் சுற்றி திறந்த வெளிப்பிராகாரம் உள்ளது. வடக்கில் மடப்பள்ளியும் கன்னி மூலையில் விநாயகர் விக்கிரகமும் தென்கிழக்கில் கிணறும் உள்ளன.

நிர்மால்யமூர்த்தி: தெற்கு வெளிப்பிராகாரத்தில் நமஸ்காரமண்டபத்தின் வடக்கில் நின்றகோலமாய் இரு கைகளை ஏந்தியபடி உள்ள கல் படிமம். பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகம் 35 செ.மீ. உயரமுடையது. மூலவருக்கு அணிவித்த மாலை இவருக்குப் போடப்படுகிறது. இவர் சிவனின் மைந்தனாகவும் கோவில் சொத்துக்களுக்கு அதிபதியாகவும் கருதப்படுகிறார்.

சிவாலய ஓட்டக்காரர்கள்

கோவிலுக்கு வெளியில் வடக்கில் துர்க்கை உள்ளிட்ட அம்மன் சிற்பங்கள் உள்ளன. நாகர் சிற்பங்களும் அதிகம் உள்ளன.

பூஜைகளும் விழாக்களும்

கோவிலில் தினப்பூஜைகள் உண்டு, ஆண்டு திருவிழா கிடையாது. மகா சிவரத்திரி விழா மட்டுமே இங்கு நிகழும் முக்கிய விழா.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:38 IST