standardised

பட்டணம் சுப்பிரமணிய ஐயர்

From Tamil Wiki
Revision as of 05:08, 22 April 2022 by Jayashree (talk | contribs)

பட்டணம் சுப்பிரமணிய ஐயர் (1845 – ஜூலை 31, 1902) தியாகராஜர் இசைமரபு வழி வந்த புகழ்பெற்ற கர்னாடக இசைக்கலைஞர்.

இளமை, கல்வி

சுப்பிரமணிய ஐயர் 1845-ல் தஞ்சாவூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பரதம் வைத்தியநாத ஐயர், பாட்டனார் பரதம் பஞ்சநாத சாஸ்திரி, இருவரும் சரபோஜி மன்னர் அவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். மெலட்டூர் கணபதி சாஸ்திரி இவருடைய மாமா.

சுப்பிரமணியன் மெலட்டூர் கணபதி சாஸ்திரியிடமும் கொத்தவாசல் வேங்கடராமையரிடமும் பின்னர் மகாநோன்புச்சாவடி வேங்கடசுப்பையரிடமும் இசைப்பயிற்சி பெற்றார். மகாநோன்புச்சாவடி(மானம்புச்சாவடி) வேங்கடசுப்பையர் தியாகராஜரிடம் நேரடியாக இசை கற்றவர்.

சுப்பிரமணிய ஐயர் தனது 30-ஆவது வயதில் புகழ் பெற்ற இசைக் கலைஞரானார்.

இசைப்பணி

மேடைதோறும் தியாகராஜர் கிருதிகளைப் பாடி பிரபலப் படுத்தியவர். பல்லவி வித்வான் எனப் பெயர் பெற்றவர். பியாகடை (பேகடா) என்னும் ராகம் பாடுவதில் இருந்த தனிதிறனாலும் அதை மைசூர் அரசவையில் இரண்டு தினங்கள் தொடர்ந்து சிறப்பாகப் பாடியதாலும் பேகடை சுப்பிரமணிய ஐயர் என்றழைக்கப்பட்டார். 100 கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார். ”ரகுவம்ச சுதா” என்ற புகழ்பெற்ற கீர்த்தனையை “கதனகுதூகலம்” என்ற புதிய ராகத்தை உருவாக்கி இயற்றிய பெருமை உடையவர். இவர் “வேங்கடேஸ்வர” என்ற முத்திரையை[1] பயன்படுத்தினார்.

சுப்பிரமணிய ஐயர் மகா வைத்தியநாதய்யரோடு திருவையாறு சப்தஸ்தான விழாக்களில் கலந்துகொண்டு பாடியிருக்கிறார். இவர் சென்னைப் பட்டணத்தில் 10 ஆண்டுகள் வாழ்ந்த காரணத்தால் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் என்றழைக்கப்பட்டார்.

தெலுங்கு மற்றும் சமஸ்கிருதக் கீர்த்தனைகளே பாடியிருக்கிறார்.

மறைவு

ஜூலை 31, 1902-ல் திருவையாற்றில் காலமானார்.

மாணவர்கள்

இவரிடம் கற்ற மாணவர்களில் புகழ்பெற்றவர்கள்:

  • பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்
  • பொப்பிலி விஸ்வநாத சாஸ்திரி
  • பாலக்காடு பரமேச்வர ஐயர்
  • நாரயணசாமி ஐயர்
  • மைசூர் வாசுதேவாச்சார்
  • குருசாமி ஐயர்
  • டைகர் வரதாச்சாரியார்
  • காகிநாடா கிருஷ்ணசாமி ஐயர்
  • பிடில் கிருஷ்ணசாமி ஐயர்
  • வீணை தனம்மாள்

பாடல்கள்

வர்ணம், கீர்த்தனை, தில்லானா, ஜாவளி என நூற்றுக்கும் மேற்பட்ட இசைப்படைப்புகளை எழுதியவர்.

  • பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் அபூர்வ சாஹித்யங்கள் - 1963 - வீணை வித்வான் அரிகேசவநல்லூர் ஏ. சுப்பிரமணியம் அச்சிட்டது. இத்தொகுப்பில் 7 வர்ணங்கள், 14 கீர்த்தனைகள், 1 ஜாவளி உள்ளன.
  • இவருடைய புகழ்பெற்ற சில கீர்த்தனைகள்:
    • பஞ்சநதீஸ பாஹிமாம்
    • மரிவேரே திக்கெவரைய ராமா - ராகம் ஷண்முகப்பிரியா - ஆதி தாளம்
    • எவரி போதனாவினி - ராகம் பூர்ணசந்திரிகா - ரூபக தாளம்
    • வரமுலொசகி - ராகம் கீரவாணி - ரூபக தாளம்
    • பரிதானமிச்சிதே - ராகம் பிலஹரி - கண்ட சாபு தாளம்
  • சில வர்ணங்கள்:
    • எவரி போதன - ராகம் ஆபோகி
    • வலஜி வச்சி - நவராகமாலிகா
    • ஏரா நாபை - ஹனுமத்தோடி

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.