under review

ஜகன்மோகினி

From Tamil Wiki
Revision as of 14:33, 27 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/reviewed by Je)
ஜகன்மோகினி

ஜகன்மோகினி (1935-1960) தமிழின் தொடக்ககால இதழ்களில் ஒன்று. நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய இதழ். பெண்கல்வி, பெண்விடுதலை ஆகியவற்றுக்காக குரல்கொடுத்த சமூகசீர்திருத்த இதழ். வை.மு.கோதைநாயகி அம்மாளின் நாவல்கள் தொடராக வெளிவந்தன. ஏராளமான பெண் எழுத்தாளர்கள் இவ்விதழில் அறிமுகம் ஆனார்கள்.

வரலாறு

வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய முதல் நாவலான வைதேகி வடுவூர் துரைசாமி ஐயங்காரின் மனோரஞ்சனி இதழில் வெளிவந்து பாதியில் நிறுத்தப்பட்டது. வை.மு.கோதைநாயகி அம்மாள் நிதிச்சிக்கலால் வெளிவராமல் நின்று போயிருந்த ஜகன்மோகினி மாத இதழை விலை கொடுத்து வாங்கி 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளியிடத் தொடங்கினார்.

ஜகன்மோகினி 48 பக்கங்களில் 1000 பிரதிகளாக வெளியிடப்பட்டது. 1937ல் இதழ் பெரும் வளர்ச்சி பெற்றது. ஜகன்மோகினி அச்சகம் சென்னையில் நிறுவப்பட்டு அதிலிருந்து நூல்கள் வெளியிடப்பட்டன. நந்தவனம் என்னும் துணை இதழும் வெளிவந்தது. 1941ல் இதழ் பத்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. இலங்கை, மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கும் தபாலில் சென்று சேர்ந்தது.

1942ல் சென்னையில் குண்டுவீச்சு அபாயம் இருந்தபோது ஜகன்மோகினி அச்சகமும் அலுவலகமும் சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் என்னும் ஊருக்கு மாற்றப்பட்டன. போர் முடிந்தபின் மீண்டும் சென்னைக்கே வந்த இதழ் 1949ல் வெள்ளிவிழாவை ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் கொண்டாடியது.கோதைநாயகி அம்மாள் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்பு 1960 வரை 35 ஆண்டுகள் வெளிவந்தது.

உள்ளடக்கம்

ஜகன்மோகினி இதழ் வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய நாவல்களை தொடராக வெளியிட்டது. வை.மு.கோதைநாயகி அம்மாள் பெண்விடுதலை, பெண்கல்வி பற்றியும் தொடர்ந்து எழுதினார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஏராளமான பெண் எழுத்தாளர்களை அதில் எழுதச்செய்தார். குமுதினி, குகப்பிரியை, எஸ். அம்புஜம் அம்மாள் போன்று பலர் அதில் எழுதியபடி அறிமுகமானார்கள். கோதைநாயகி அம்மாள் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளர்.தேசிய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டவர். காங்கிரஸ் ஆதரவுக் கட்டுரைகளும் ஜகன்மோகினியில் வெளியாயின. வை.மு.கோதைநாயகி அம்மாளுக்கு தியோசஃபிகல் சொசைட்டியுடன் நெருக்கம் இருந்தது. தியோசஃபிகல் சொசைட்டி பற்றிய செய்திகளும் ஜகன்மோகினியில் வெளிவந்தன.ஜகன்மோகினி வெற்றிக்கு அதில் சித்திரம் வரைந்த சாமுவேல் என்ற ஓவியர் ஒரு காரணம் எனப்படுகிறது.

ஜகன்மோகினி

இலக்கிய இடம்

ஜகன்மோகினி தமிழில் பெண்கள் எழுதுவதற்கான களம் அமைத்து தந்தது. அரசியல் மற்றும் சமூகச்செயல்பாடுகளில் பெண்களின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அந்தக்கோணத்தில் தமிழக பெண்ணிய வரலாற்றில் ஜகன்மோகினிக்கு ஒரு முன்னோடி இடம் உண்டு.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.