ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் (1995) சு. தாமஸ் எழுதிய கிறிஸ்தவ இறைப் பாடல்களின் தொகுப்பு. மாலை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், தூது, பதிகம் என பல்வேறு சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக வெளிவந்தது.
வெளியீடு
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இந்நூல், ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர்: சு. தாமஸ். புலவர் நாக. சண்முகம் இந்நூலின் பதிப்பாசிரியர்.
நூல் அமைப்பு
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூல், கீழ்க்காணும் சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பாக அமைந்தது.
- வேளை நகர் அன்னையைப் போற்றும் ஆனந்தக் கும்மி
- வேளை நவமணி மாலை
- வேளை அந்தாதி
- மரியன்னை மாலை
- வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ்
- நற்செய்தி நங்கையர் மாலை
- நசராபுரி நாயகி மாலை
- நசரை நான்மணி மாலை
- மூவர் அம்மானை
- திருவெல்லை மாலை
- வேளைச் சகாய மாலை
- பேரின்பத் தூதுப் பாடல்கள்
- தெய்வ சகாயன் திருச்சரிதை
- தஞ்சை வியாகுல மாதா பதிகம்
- மனுக்குல வெண்பா
- நன்று நாற்பது
- சரணாஞ்சலி
- கத்தர் புகழாரம்
- கோட்டூர் மரியன்னை பதிகம்
உள்ளடக்கம்
ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூல் மூலம் இயேசுவின் பெருமை மற்றும் சிறப்பையும், இயேசுவின் அன்னை மேரி மாதாவின் பெருமைகள், சிறப்புகள், ஆலயங்கள் எழுந்த விதம், அற்புதங்கள் போன்றவற்றையும் சூ. தாமஸ் புலப்படுத்தினார். பதிகம், மாலை, பிள்ளைத்தமிழ், சதகம், வெண்பா, அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகைகளில் இப்பாடல்கள் அமைந்தன.
மதிப்பீடு
இயேசு மற்றும் மரியன்னையின் புகழைப் பாடும் சில சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூல் அமைந்தது. இந்நூல் பற்றி, “மரியன்னையின் பண்புகளையும், இயற்கை நிகழ்ச்சிகளையும், கற்பனை நயத்தோடும், உவமைச் சிறப்புக்களோடும் படைத்தார்” என பேராயர் பா. ஆரோக்கியசாமி குறிப்பிட்டார். ”தமிழ்மொழி உணர்வால், நூற்பொருளால் பாக்களின் இசையால், மொழிநடையால் சிறந்து வீளங்கும் இந்நூல் தமிழிலக்கிய வரலாற்றில் குறிப்பாக கிறித்துவ இலக்கிய வரலாற்றில் மற்றுமொரு பிரபந்தத் திரட்டாக - தனி ஒருவரின் சிற்றிலக்கியத் திரட்டாகச் - சிறந்து விளங்குகிறது” எனப் பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் மதிப்பிட்டார்
உசாத்துணை
- ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள், கவிக்கடல் புலவர் சு. தாமஸ், எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு. பதிப்பு: 1995.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.