under review

புகழேந்திப் புலவர்

From Tamil Wiki
Revision as of 08:52, 24 March 2022 by Madhusaml (talk | contribs)

புகழேந்திப் புலவர் மகாபாரதம் தொடர்பான அம்மானைப் பாடல்களைப் பாடியவர் என நம்பப் படுகிறது. இவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என சொல்பவர்களும் உண்டு. வரலாற்று ஆய்வாளரான தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தன் இலக்கிய வரலாற்றில் புகழேந்திப் புலவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் குறிப்பிடுகிறார். ஆய்வாளர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் இதனை ஒத்துக்கொள்கிறார்.

ஆரிய சேகரன் என்னும் பாண்டிய நாட்டு படைத்தலைவனின் (1268 - 1311) சமக்காலத்தவர் இவர் என்பதற்குச் சான்று உள்ளது. சித்தூர் மாவட்டம் மகாதேவ மங்கல திருக்கண்டீஸ்வரர் கோவில் கல்வெட்டில் புகழேந்தி என்ற பெயர் உள்ளது. இந்த கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இவர் ஒரு புனைவு என்றும் அட்டாவதானம் வீராசாமி செட்டியாரே அம்மானைப் பதிப்புகளில் புகழேந்திப் புலவரின் பெயர் சேர்த்தார் என்றும் தமிழ்க் கதைப்பாடல்களைப் பற்றி ஆங்கிலத்தில் விரிவான நூல் எழுதிய மு.அருணாசலம் சொல்கிறார். செட்டியார் தம் காலத்தில் வழங்கிய வாய்மொழிக் கதைகளை புகழேந்திப் புலவரின் பெயரில் சேர்த்துச் சொன்ன தகவல்களை பீ.ஆர்.என் சன்ஸ் (B.R.N Sons) போன்ற பதிப்பாளர்கள் சொன்ன தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

ஆசிரியர் பற்றி

மகாபாரதம் பற்றி அம்மானை பாடல்கள் அனைத்தும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அச்சில் வந்தன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான அம்மானை வடிவில் உள்ளவை. ஆரம்பகால அச்சு பதிப்பில் புகழேந்திப் புலவரின் பெயர் இல்லை. உதாரணமாக இப்போது கிடைக்கும் “மதுரை வீராசாமி” என்னும் அம்மானைப் பாடலின் முதல் பதிப்பில் புகழேந்திப் புலவரின் பெயர் இல்லை.

நளவெண்பா” என்னும் சிறுகாவியத்தின் ஆசிரியர் பெயர் புகழேந்திப் புலவர் எனக் கண்டறியப்பட்டாலும் இருவரும் வெவ்வேறு காலத்தவர் என்ற கருத்தும் உண்டு. “நளவெண்பா”, “அம்மானை பாடல்கள்” என்ற இருவேறு நூல்களின் தரமும், காலமும் கொண்டு ஆய்வாளர் இதனை மறுக்கின்றனர். புகழேந்திப் புலவர் அம்மானைப் பாடல்களை இயற்றியதாக சொல்லக் காரணம் அவர் சிறைவாசம் செய்ததை கூறும் ஒரு வாய்மொழி கதை தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த அம்மானை எழுதிய காலம் பற்றிய குறிப்புகள் அச்சு வடிவ நூல்களில் கிடைக்கப் பெறவில்லை.

அம்மானைப் பாடல்களைப் பாடியது புகழேந்திப் புலவர் எனச் சொல்லும் மரபு வினோத மஞ்சரி நூல் வெளிவந்த பிறகு ஏற்பட்டது என்ற கருத்து உண்டு. அல்லியரசாணி மாலை முதலிய பதிமூன்று அம்மானைகள் இவர் பாடியதற்கு வாய்மொழி மரபில் ஒரு கதையும் உண்டு.

இவரைப் பற்றிய கதைகள் ‘தொண்டை மண்டல சதகம்’, ‘பாண்டிய மண்டல சதகம்’, ‘புலவர் புராணம்’, ‘தமிழ் நாவலர் சரிதை’, ‘தனிப்பாடல் திரட்டு’, ‘தனிச் செய்யுள் சிந்தாமணி’, ‘பெருந்தொகை’ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளன.

வாய்மொழி கதை

சோழ நாட்டின் தலைநகரான உறையூரில் வாழ்ந்த சோழ மன்னன் தன் மகன் குலோத்துங்கனுக்கு பட்டம் சூட்டினான். அவன் இறக்கும் தருவாயில் இருந்த போது அவைப்புலவர் ஒட்டக்கூத்தரை அழைத்து தன் மகன் குலோத்துங்கனுக்கு பாண்டிய நாட்டில் இருந்து மட்டுமே மண உறவு செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கினான்.

ஒட்டக்கூத்தரும் அந்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு குலோத்துங்கனுக்காக பாண்டிய மன்னனிடம் பேசினார். பாண்டியன் அதற்கு சம்மதித்தான். தன் மகள் சோழ நாடு செல்லும் போது அவளுக்கு சீதனமாக நாட்டில் உள்ள பல பொருட்களை வழங்கினான். அதில் ஒன்றாக புகழேந்திப் புலவரும் சென்றார். புகழேந்திப் புலவர் வருவது ஒட்டக்கூத்தருக்கு பிடிக்கவில்லை. அவரை விரட்ட தக்க சமயம் எதிர்பார்த்து காத்திருந்தார். சோழன் குலோத்துங்கன் நாட்டில் இல்லாத சமயத்தில் ஒட்டக்கூத்தர் புகழேந்திப் புலவரை சிறையில் அடைத்து ஆழாக்கு அரிசியும் ஒரு உழக்கு உப்பும் தரும்படி கட்டளையிட்டார். புகழேந்திப் புலவரும் அதனை தன் முன் ஜென்ம வினை என மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

அவர் இருந்த சிறையில் ஒரு சாளரம் இருந்தது. அந்த அறையில் சமைத்து சாப்பிட்டு சாளரம் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். ஒரு நாள் அந்த வழியாக செல்லும் பெண்களைக் கண்ட புலவர் அவர்களுக்கு அல்லியரசாணி மாலை பாடிக் காட்டினார். அந்த பாட்டில் மகிழ்ந்த பெண்கள் அவர் சமைப்பதற்கான பொருட்களை சாளரம் வழியாக தந்தனர். அதனை மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட புலவர், தினமும் அவர்கள் தரும் பொருட்களுக்கு பாரதக் கதையிலிருந்து ஒரு அம்மானைப் பாடினார். சோழ அரசன் நாடு திரும்பியதும் புகழேந்திப் புலவரை சிறையிலிருந்து மீட்டான்.

புகழேந்திப் புலவர் சிறையிலிருந்து பாடிய அல்லியரசாணி முதலிய பதிமூன்று அம்மானைகள் வாய்மொழி மரபில் நீடித்ததாக கதை சொல்கிறது.

அம்மானைப் பாடல்கள்

  • அபிமன்னன் சுந்தரிமாலை
  • அல்லியரசாணி மாலை
  • ஆரவல்லி சுரவல்லி கதை
  • ஏணியேற்றம்
  • கர்ண மகாராசன் சண்டை
  • திரௌபதிக் குறம்
  • பஞ்சபாண்டவர் வனவாசம்
  • பவளக்கொடி மாலை
  • புலந்திரன் களவு மாலை
  • புலந்திரன் தூது
  • மின்னொளியாள் குறம்
  • விதுரன் குறம்
  • வித்துவான் குறம்

பிற கதைகள்

  • கோவிலன் கதை
  • தேசிங்கு ராசன் கதை
  • மதன காமராசன் கதை
  • சித்திர புத்திர நயினார் கதை
  • நல்லதங்காள் கதை
  • மதுரை வீரன் கதை
  • சிறுத்தொண்ட பக்தன் கதை
  • செந்தில் கலம்பகம்
  • இரத்தினச் சுருக்கம்

தொடர்பான கதைகள்

  • தொண்டை மண்டல சதகம்
  • பாண்டி மண்டல சதகம்
  • புலவர் புராணம்
  • தமிழ் நாவலர் சரிதை
  • தனிப்பாடல் திரட்டு
  • தனிச் செய்யுள் சிந்தாமணி
  • பெருந்தொகை

உசாத்துணைகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.