பாமதி
பாமதி ( ) அத்வைத வேதாந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரரின் மனைவி. இவர் பெயரால் வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதி டீகா என்னும் நூலில் இருந்து பாமதி மரபு என்னும் வேதாந்த சிந்தனைப் பள்ளி உருவானதாகச் சொல்லப்படுகிறது
தொன்மம்
வாசஸ்பதி மிஸ்ரர் (பொயு 8/9) பிகாரில் அந்தணக்குடும்பத்தில் பிறந்தவர், அத்வைத மரபைச் சேர்ந்த அறிஞரான மண்டன மிஸ்ரரின் மாணவர், மண்டன மிஸ்ரர் குமரில பட்டரின் பட்டமீமாம்சையின் தரப்பில் இருந்து சங்கரரால் வாதத்தில் வெல்லப்பட்டு அத்வைதத் தரப்புக்கு வந்தவர். சங்கரர் எழுதிய பிரம்மசூத்ர பாஷ்யம் என்னும் உரைக்கு வாசஸ்பதி மிஸ்ரர் தன் ஆசிரியர்களின் பட்டமீமாம்சை சார்ந்த கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு எழுதிய உரைநூல் பாமதி டீகா எனப்படுகிறது, அதிலிருந்து பாமதி மரபு உருவானது.
வாசஸ்பதி மிஸ்ரர் இளமையிலேயே வேதாந்தக் கல்வியில் ஆர்வம்கொண்டிருந்தார் என்றும், தன் அன்னை வத்ஸலாவின் கட்டாயத்துக்கு இணங்கி பாமதி என்னும் பெண்ணை மிக இளம் அகவையில் மணந்துகொண்டார் என்றும், ஆனால் அவளை முழுமையாக மறந்து வேதாந்த ஆய்விலும் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு உரையெழுதுவதில் ஈடுபட்டிருந்தார் என்றும், பாமதி அவரை எவ்வகையிலும் இடர்படுத்தாமல் உடனிருந்து பணிவிடை செய்து அந்நூலை முடிக்க உதவினாரென்றும் கதைகள் சொல்கின்றன. நீண்ட காலம் கழித்து நூலை முடித்து இயல்புநிலைக்கு மீண்ட வாசஸ்பதி மிஸ்ரர் தனக்கு ஒரு முதியபெண் பணிவிடைகள் செய்வதைக் கண்டு அவள் யார் என்று விசாரித்தார் என்றும், அவள் தன்னை அவருடைய மனைவியாகிய பாமதி என்று அறிமுகம் செய்துகொண்டு, இளமைமுதல் அவருக்கு அவள்தான் பணிவிடைகள் செய்து வந்ததாகவும் அவர் அவளை ஏறிட்டுப்பார்க்காததனால் உருவம் அறிமுகமாகவில்லை என்றும் சொன்னாள். அவளுடைய அர்ப்பணிப்பால் உளம் நெகிழ்ந்த வாசஸ்பதி மிஸ்ரர் அந்நூலை எழுதியவள் அவளே என வாழ்த்தி அந்நூலுக்கு பாமதி டீகா என்று பெயரிட்டார். (டீகா என்பது ஒருவகை யாப்புமுறை)
உசாத்துணை
- Bhamati Tika' speaks of a women Bhamati
- The Iconic Woman - Bhamati
- BHAMATI : TRUE STORY OF AN IDEAL, BELOVED WIFE