second review completed

சந்திரா இரவீந்திரன்

From Tamil Wiki
Revision as of 20:09, 10 March 2024 by Tamizhkalai (talk | contribs)
சந்திரா இரவீந்திரன்
சந்திரா இரவீந்திரன்

சந்திரா இரவீந்திரன் (சந்திரா தியாகராஜா) (பிறப்பு: செப்டம்பர் 3, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

பிறப்பு, கல்வி

சந்திரா இரவீந்திரன் இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர் ஆத்தியடியில் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி இணையருக்கு செப்டம்பர் 3, 1963-ல் பிறந்தார். பருத்தித்துறை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் தனது பாடசாலைக்கல்வியை முடித்தார். கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சந்திரா இரவீந்திரனை மணந்தார். 1985-87 காலகட்டத்தில் பருத்தித்துறை மாவட்டநீதிமன்றத்தில் பயிற்சிப்பணியை முடித்தார். 1987-1991வரை யாழ் அரசசெயலகத்தில் பணியாற்றினார். 1991-ல் லண்டனுக்குப் புலம் பெயர்ந்தார். லண்டனில் 1999-2007 வரை அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்(ஐ.பி.சி) சில நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

சந்திரா இரவீந்திரனின் முதல் சிறுகதை ”ஒரு கல் விக்கிரகமாகிறது” 1981-ல் வெளியானது. ஆரம்ப காலத்தில் சந்திரா தியாகராஜா என்ற பெயரில் எழுதினார். திருமணத்திற்குப் பின் சந்திரா இரவீந்திரன் என்ற பெயரில் எழுதினார். 1988-ல் பருத்தித்துறை யதார்த்த இலக்கிய வட்டத்தினால் இவரது ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011-ல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறுகதைகள் 'காலச்சுவடு' பதிப்பகத்தினரால் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டில் 'நிலவுக்குத் தெரியும்' என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாட்டில் வெளியானது.

ஈழத்தில் சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கைப் பத்திரிகைகள், இதழ்களான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ் ஒலி, அமிர்த கங்கை ஆகியவற்றிலும் பாரிஸ் ஈழநாடு, எரிமலை, 'ஊடறு' பெண்கள் இதழ், யுகமாயினி, புலம் மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான 'யுகம்மாறும்' 'கண்ணில் தெரியுது வானம்' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் காலச்சுவடு இதழ்களிலும் வெளியாகியுள்ளன. 1986-ல் இவரது 'நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்' ஈழமுரசு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.

1993-ல் செ.யோகநாதன், சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான 'வெள்ளிப்பாதசரம்' தொகுப்பில் இவரது 'தரிசு நிலத்து அரும்பு' சிறுகதையும் இடம்பெற்றது.

விருதுகள்

  • 1986-ல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடத்திய இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது 'நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்' இரண்டாவது பரிசைப் பெற்றது.
  • 2018-ல் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான தமிழ்ச்சுடர் விருது
  • 2015-ல் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான கவின் கலை மாமணிவிருது
  • பாரிஸ் ஈழநாடு சிறுகதைப்போட்டியில் 1991-ல் அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் என்ற சிறுகதைக்காக முதலாம் பரிசும், தங்கப்பதக்கமும் பெற்றார்.

நூல் பட்டியல்

  • நிழல்கள் (சிறுகதைகளும் குறுநாவலும்) (1988)
  • நிலவுக்குத் தெரியும் (சிறுகதைத் தொகுப்பு, 2011)
  • மாமி சொன்ன கதைகள் (அனுபவப் பகிர்வு) (காலச்சுவடு வெளியீடு, 2022)

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.