first review completed

சிதம்பர செய்யுட் கோவை

From Tamil Wiki
Revision as of 10:07, 16 November 2023 by Tamizhkalai (talk | contribs)

சிதம்பர செய்யுட்கோவை ஓர் சைவ சமயம் சார்ந்த இலக்கண நூல். குமரகுருபரரால் இயற்றப்பட்டது. நூலில் உள்ள உதாரணப் பாடல்கள் சிதம்பரத்தையும் நடராஜப் பெருமானையும் குறித்துப் பாடப்பட்டவை.

ஆசிரியர்

சிதம்பர செய்யுட்கோவையை இயற்றியவர் குமரகுருபரர். காசி மடத்தை நிறுவியவர். தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடையவர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களை இயற்றியவர்.

பெரும்பாலான இலக்கண நூல்கள் சமணம் சார்ந்தவையாக இருந்ததால், குமரகுருபரர் சிதம்பரத்தில் இருந்தபோது சைவ சமயம் சார்ந்த இலக்கண நூல் எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். இச்செய்தி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் 'குமரகுருபரர் சரித்திரம்' என்ற நூலில் இடம்பெறுகிறது.

நூல் அமைப்பு

சிதம்பரச் செய்யுட்கோவை கோவை பாப்பாவினம் என்னும் வைணவ இலக்கிய நூலின் அமைப்பைத் தழுவி அமைந்தது. சைவச் சார்பு கொண்டது. யாப்பருங்கலக்காரிகையின் நூற்பாக்கள் கூறும் இலக்கணங்களுக்கான உதாரணப் பாடல்களைக் கொண்டது. பாடல்கள் சிதம்பரம் நடராசப் பெருமானைப் போற்றி எழுதப்பட்டுள்ளன. காரிகையில்‌ உறுப்பியல்‌ முதல்‌ ஒழிபியல்‌ வரையிலான நூற்பாவும்‌ உரையும்‌ கூறும்‌ பாப்பாவினத்தில் காணும் தொடை முதலான இலக்கணங்களுக்கான உதாரணப் பாடல்களை இந்நூல்‌ கொண்டுள்ளது.

சிதம்பர செய்யுட் கோவையில்

  • வெண்பா விகற்பம்,
  • வெண்பாவினம்,
  • ஆசிரியப்பா விகற்பம்,
  • ஆசிரியப்பாவினம்,
  • கலிப்பா விகற்பம்
  • கலிப்பாவினம்
  • வஞ்சிப்பா விகற்பம்
  • வஞ்சிப்பாவினம்
  • மருட்பா

ஆகிய ஒன்பது பிரிவுகளில் மொத்தம் 84 உதாரணப் பாடல்கள் உள்ளன. இந்த நூற்பாடல்கள்‌ யாப்பின்‌ இலக்கணத்துக்கு எடுத்துக்‌ காட்டாக எழுதப்பட்டவையாதலால், ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடலின்‌ யாப்பிலக்கணம்‌ ஒரு தனிக்‌ குறிப்பாக உரைநடையில் சொல்லப்பட்டுள்ளது. இக்குறிப்புகளை குமரகுருபரரே எழுதியிருக்கலாம் என்றும் பிற்காலத்தில் வேறொருவர் எழுதிச் சேர்த்திருக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

செய்யுள்களின் கீழுள்ள இக்குறிப்புகளில்‌ சில காரிகையின்‌ உரைப்பகுதிகளை ஓரிருசொற்கள் மாறுதலுடன்‌ ஒத்திருக்கின்றன.

குமரகுருபரர்‌ தாம்‌ இயற்றிய நீதிநெறி விளக்கம்‌ நூலில்‌ இடம்பெற்‌றுள்ள 'நீரிற்‌ குமிழி இளமை' எனத்‌ தொடங்கும்‌ நேரிசை வெண்பாவை இந்‌நூலிலும்‌ (பாடல்‌ எண்‌ 9) இடம்பெறச்‌ செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்

யாப்புச்‌ சான்‌றிலக்கிய நூல்களுள்‌ சிதம்பரச்‌ செய்யுட்‌ கோவை மட்டுமே, யாப்பருங்கலக்காரிகையின்‌ நூற்பாவும்‌ உரையும்‌ (உறுப்‌பியல்‌ முதல்‌ ஒழிபியல்‌ வரை) கூறும்‌ இலக்கணம்‌ அனைத்தையும்‌ பின்பற்றி உதாரணப் பாடல்கள் அமைந்த ஒரே இலக்கண நூல்.

பாடல் நடை

இருவிகற்பக்குறள் வெண்பா

அறனன்று மாதவ னென்ப துலகெந்தை
தாள்காணா னாணுக் கொள.

நூலில் காணும் குறிப்பு:  இஃது இருவிகற்பக் குறள்வெண்பா. மோனை முதலிய தொடையும் தொடைவிகற்பமும் போலாது தொடுத்தமையால், இது செந்தொடை

பஃறொடை வெண்பா

பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும்
வெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியு மானேறே
அங்கவன்ற னூர்தியுமற் றவ்வேறே யவ்வேற்றின்
கண்டத்திற் கட்டுங் கதிர்மணிக்கிங் கென்கொலோ
பைந்தொடியார் செய்த பகை.

  நூலில் காணும் குறிப்பு: இது பலவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடை வெண்பா. இதன் முதலடி முதற்சீரும் முரணத் தொடுத்தமையால் பொழிப்புமுரண். நான்காமடி இறுதிச்சீரொழிந்து ஏன் முச்சீரும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் கூழைமோனை. இஃது அடிதோறும் இரண்டாமெழுத்து மெல்லினம் வரத் தொடுத்தமையால் இனவெதுகை.       

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.