under review

பசுபதிகோவில் வீரபத்திர பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:46, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

பசுபதிகோவில் வீரபத்திர பிள்ளை (1867) ஒரு தவில் கலைஞர். நூற்றெட்டு தாளங்களுக்கு ஜதிகளும் தத்தகாரமும் எழுதியவர்.

இளமை, கல்வி

தஞ்சாவூருக்கு அருகே உள்ள பசுபதிகோவிலில் 1867-ஆம் ஆண்டு அங்கம்மாள் என்பவருக்கு வீரபத்திர பிள்ளை பிறந்தார். வீரபத்திர பிள்ளையின் குருவின் பெயர் தெரியவில்லை.

தனிவாழ்க்கை

வீரபத்திர பிள்ளை உடன் பிறந்தவர்கள் - லக்ஷ்மண பிள்ளை, ராமஸ்வாமி பிள்ளை, ஸ்வாமிநாத பிள்ளை, லோகாம்பாள் ஆகியோர். திருவிடைமருதூரை சேர்ந்த மீனாம்பாள் என்பவரை வீரபத்திர பிள்ளை மணந்து நாகம்மாள், ராஜம்மாள் எனும் இரு மகள்களைப் பெற்றார். இவ்விருவரையும் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மணந்து கொண்டார். வீரபத்திர பிள்ளையின் இரண்டாவது மனைவி ஞானம்பாள். இவர்களுக்கு கிருஷ்ணவேணியம்மாள் (கணவர்: அய்யம்பேட்டை சிவக்கொழுந்து பிள்ளை) என்று ஒரே மகள். வீரபத்திர பிள்ளைக்கு மந்திர சாஸ்திரத்தில் நல்ல தேர்ச்சி இருந்தது. மகா வைத்தியநாதய்யரின் மூத்த சகோதரருக்கும் இசையும், மந்திரமும் பெருவிருப்பம் என்பதால் இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.

இசைப்பணி

வீரபத்திர பிள்ளை முதலில் தியாகராஜரின் நேரடி சீடர்களில் ஒருவரான ஸ்வாமிநாத பிள்ளை என்னும் நாதஸ்வரக் கலைஞரிடம் தவில் வாசித்தார். ஒருமுறை மைசூர் சமஸ்தானத்தில் மகா வைத்தியநாதய்யருடன் வாசித்த நிகழ்வுக்கு மன்னர் சிங்கமுகச் சீலையும், தங்க தவிற்கம்பும், சாதராவும் வழங்கி கௌரவித்தார். வீரபத்திர பிள்ளை தவில் வாசிப்பது தவிர, தெலுங்கிலும் வடமொழியிலும் புலமையும், நன்கு பாடும் திறனும் கொண்டிருந்தார்.

உடன் வாசித்த கலைஞர்கள்

பசுபதிகோவில் வீரபத்திர பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

  • ஸ்வாமிநாத பிள்ளை
  • உறையூர் முத்துவீருஸ்வாமி பிள்ளை
  • கோபாலஸ்வாமி பிள்ளை (உறையூர் முத்துவீருஸ்வாமி பிள்ளையின் மகன்)
  • திருமருகல் நடேச பிள்ளை

மறைவு

பசுபதிகோவில் வீரபத்திர பிள்ளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1936-ஆம் ஆண்டு காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page