பெத்லகேம் குறவஞ்சி
பெத்லகேம் குறவஞ்சி ( 1794) தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய கிறிஸ்தவ நூல். குற்றாலக்குறவஞ்சியின் செல்வாக்கால் உருவானது.
எழுத்து, வெளியீடு
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் தஞ்சையில் கல்வி பயிலும்போது தன் இருபது வயதில் இதை எழுதியதாகவும், இதுவே அவருடைய முதல் படைப்பு என்றும் சொல்லப்படுகிறது. இது தஞ்சை சரபோஜி-IV அவையில் 1795-ல் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
அமைப்பு
பெத்லகேம் குறவஞ்சியின் அமைப்பு கீழ்க்கண்டவாறு
- இறைவாழ்த்து
- இயேசுவின் உலா
- தேவ மோகினி காதல்
- குறத்தி குறி கூறல்
- சிங்கன் வருகை
என்னும் ஐந்து பெரும் பகுதிகளைக் கொண்டது; பாயிரம் முதலாக வாழ்த்து ஈறாக 72 உட்பிரிவுகளைக் கொண்டது
இந்நூலில் கட்டியங்காரனாக யோவான் வந்து இயேசு வரப் போவதை அறிவிக்கிறார். எருசலேம் நகரம் விழாக் கோலம் கொள்கிறது.இயேசு உலா வருகிறார். இயேசுவைக் கண்ட மகளிர் பக்திமெய்ப்பாடு கொள்கின்றனர். சீயோன் மகள் என்னும் தேவமோகினி ஏசுவைக் கண்டு காதல்கொள்கிறாள். நிலவையும் தென்றலையும் பழிக்கிறாள். அப்போது குறவஞ்சியான சிங்கி வருகிறாள்.ஏசுவின் பெருமைகளைச் சொல்கிறாள். அதன்பின் சிங்கன் வந்து ஏசுவின் பெருமைகளைப் பாடுகிறான். சிங்கிக்கு தேவகன்னி பரிசாக அளித்த நகைகளை கண்டு சிங்கன் வியக்கிறான்.
நடை
பெத்லகேம் குறவஞ்சி நாட்டார்த்தன்மை மிகுந்த நூல். சம்ஸ்கிருத வழக்குகளும் நிறைந்தது.
தேசு மாதர்கள் பாசமாய்
வாச மேவு விலாச மரக்கிளை
மாசிலாது எடுத்து ஆசையா
யோசன்னா, பவ நாசன்னா என
ஓசையாய் கிறிஸ்தேசுவே
நீச வாகன ராசனே எங்கள்
நேசனே எனப் பேசவே ..
இசைப்பாடல்தன்மை
பெத்லகேம் குறவஞ்சி இசைப்பாடல்கள் கொண்டது இந்நூலில் உள்ள மங்களப்பாடலான
சீரேசு நாதனுக்கு செய மங்களம்,
ஆதி திரியேக நாதனுக்குச் சுப மங்களம்
என்பது இன்றும் கிறிஸ்தவ சபைகளில் பாடப்படுகிறது
இலக்கிய இடம்
தமிழ் கிறிஸ்தவ இலக்கிய நூல்களில் தொடக்ககாலத்தையது என்றும், நாட்டார் அழகியலை உள்ளடக்கியது என்றும் பெத்லகேம் குறவஞ்சி கருதப்படுகிறது. கிறிஸ்தவ இசைப்பாடல்கள் பல இதில் உள்ளன.
உசாத்துணை
✅Finalised Page