அமுதகவி சாயபு மரைக்காயர்
அமுதகவி சாயபு மரைக்காயர் (அமுதகவி) (1878-1950) இஸ்லாமியத் தமிழ்ப் புலவர். மார்க்க அறிஞர். இசை, மருத்துவம் அறிந்தவர். காரைக்கால், சிங்கப்பூர், மலேசியாவில் வணிகம் செய்தார். தமிழ்ப் பாடல்கள், கீர்த்தனைகள் என இஸ்லாமிய இலக்கியம் சார்ந்து பல்வேறு நூல்களை இயற்றினார்.
பிறப்பு, கல்வி
அமுதகவி சாயபு மரைக்காயர், பொயு 1878-ல், காரைக்காலில், அகமது லெப்பை மரைக்காயர்-ஆயிஷா அம்மாள் இணையருக்குப் பிறந்தார். மார்க்கக் கல்வியை வேலூரில் தங்கிக் கற்றார். புலவர் முகமது மஸ்தானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். தமிழ், அரபு, பார்சி, மலாய் மொழிகள் அறிந்தவர். இசையிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
தனி வாழ்க்கை
அமுதகவி சாயபு மரைக்காயர் வணிகராகச் செயல்பட்டார். மலேயா, சிங்கப்பூர் சென்று வணிகம் செய்தார். மணமானவர். காரை இறையடியான், பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இவரது பேரன்கள்.
இலக்கிய வாழ்க்கை
அமுதகவி சாயபு மரைக்காயர் கீர்த்தனைகள் மற்றும் செய்யுள்கள் இயற்றுவதில் வல்லவராக இருந்தார். தமிழில் வழக்கொழிந்த, முடுகு வெண்பா, சவலை வெண்பா போன்ற யாப்புகளிலும் பாடல்களை எழுதினார். இவரது முதல் நூல், மஹ்பூபு பரபதக் கீர்த்தனம் 1911-ல் சிங்கப்பூரில் வெளியானது. தொடர்ந்து பல கீர்த்தனைகளை, செய்யுள் நூல்களை இயற்றினார். 25-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். தன் இல்லத்தில் தமிழ், அரபு, மலாய் ஆகிய மொழிகளில் சுமார் 550 நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றை வைத்திருந்தார்.
இசை வாழ்க்கை
அமுதகவி சாயபு மரைக்காயர், முறையாக இசை கற்றவர். இசைப்பாடல்கள் பலவற்றை ராக, தாளக் குறிப்புகளுடன் இயற்றி வெளியிட்டார். அதனால் அமுதகவி என்று பாராட்டப்பட்டார்.
அமைப்புப் பணிகள்
அமுதகவி சாயபு மரைக்காயர் சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் இரண்டிலும் நல்ல அனுபவம் பெற்றிருந்தார். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார். வறுமையில் வாடிய புலவர்கள் பலரை ஆதரித்தார்.
நினைவு நூல்கள்
பொறையாறைச் சேர்ந்த மு.செ. சுல்தான் அப்துல்காதர், அமுதகவி பஞ்சகம் என்ற நூலை இயற்றினார். அதில், அமுதகவி சாயபு மரைக்காயரின் கொடைத் தன்மையை,
விண்டாய்க் கொடைகொடுத்த வித்தகனார் மார்க்கநெறி
கண்டாம் அமுதகவி கண்டீரே!
என்று குறிப்பிட்டுள்ளார்.
காரைக்கால் பெரும்புலவர் கோ. மாரியப்ப நாவலர், அமுதகவி சாயபு மரைக்காயரை,
நிலவள மோங்கி நீர்வளம் பெருகிப்
பலவளம் நிறைந்து பண்பினிற் சிறந்த
கலைவளப் புலவர் போற்றுங் காரையில்
நிலைவளச் செல்வன் நிறைவளக் கல்வியின்
அமுதகவி சாயபு மரைக்காயர்
தமையடுத் தவரைத் தாங்குப காரன்
- என்று பாராட்டினார்.
பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், அமுதகவியின் வாழ்க்கையை, அமுதகவி சாயபு மரைக்காயர் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் ஆவணப்படுத்தினார்.
மறைவு
அமுதகவி சாயபு மரைக்காயர், 1950-ல், தனது 72 ஆம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
அமுதகவி சாயபு மரைக்காயர், தமது கீர்த்தனைப் பாடல்களால் தமிழிசையைப் பரப்பினார். இவரது பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டவையாகவும், குறைந்த கல்வி அறிவு உடையோரும் எளிதில் படித்துப் பொருளுணர்ந்து கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தன. “காரைக்காலில் வாழ்ந்த இசுலாமிய தமிழ்ப் புலவர்களுள் முதன்மையானவராக அமுதகவி சாயபு மரைக்காயரை குறிப்பிட்டுக் கூறலாம்” - என்று கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நூல்கள்
- மஹ்பூபு பரபதக் கீர்த்தனம்
- உபதேசக் கீர்த்தனம்
- கப்படா சாஹிபு கீர்த்தனம்
- காரை மஸ்தான் காரணக் கீர்த்தனம்
- காஜா முய்னுதீன் கிஸ்தி
- திருமண வாழ்த்து மாலை
- மணவாழ்த்து மாணிக்க மாலை
- பனுலூன் அஸ்ஹாபி மாலை
- மாதர் மும்மணி மாலை
- மனோன்மணிக் கும்மி
- மான்மியப்பா
- சன்மார்க்க போதினி (உரைநடை நூல்)
உசாத்துணை
- அமுதகவி சாயபு மரைக்காயர்: அவ்வை நிர்மலா
- அமுதகவி சாயபு மரைக்காயர்: கீற்று இணையதளம்
- அமுதகவி சாயபு மரைக்காயர் வாழ்க்கை வரலாறு: பேராசிரியர் மு. சாயபுமரைக்காயர்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.