being created

டி.பி.ராஜலட்சுமி

From Tamil Wiki
Revision as of 16:08, 18 April 2023 by Ramya (talk | contribs)

டி.பி.ராஜலட்சுமி (திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி) (11 நவம்பர் 1911 - 1964) தமிழின் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர். நாடக நடிகை, தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர்.

வாழ்க்கைக் குறிப்பு

டி.பி.ராஜலட்சுமி தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலத்தில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தார். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே திரும்பினார். ராஜலட்சுமியின் தந்தையும் இறந்துவிட்டதால் குடும்பம் வறுமையில் இருந்தது. விதவைத் தாயுடன் திருச்சி வந்தார்.

நாடக வாழ்க்கை

நாடக ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகப் பயிற்சி பெற்றார். திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. டி.பி.ராஜலட்சுமி பதினொன்றாம் வயதில் தன் முதல் நாடகமான "பவளக்கொடி" என்ற நாடகம் நடித்தார். பின்னர் கே.எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் இணைந்து நடித்தார். பின்னர் கே.பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில், மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். அதன் பின்னர் எஸ்.ஜி. கிட்டப்பாவுடன் ராமா பட்டாபிஷேகம், எம்.கே. தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி ஆகிய சில நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் இராஜலட்சுமி நடித்திருந்த போதும் வி.ஏ. செல்லப்பாவுடன் இவர் வெற்றிகரமாக இணைந்து நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

விடுதலைப்போராட்டம்

தான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். கர்நாடக இசைப் பாடல்களையும் பாடினார். இவர் பாடிய "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...", "இராட்டினமாம் காந்தி கைபாணமாம்..." போன்ற தேசபக்திப் பாடல்கள் மக்களிடையே பிரபலமடைந்தன. தேசபக்திப் பாடல்களைப் பாடியதற்காகப் பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றார்.

திரை வாழ்க்கை

தமிழில் 1931ஆம் ஆண்டில் வெளிவந்த, முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்தார். 1943ஆம் ஆண்டுவரையில் மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். 1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த, தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான "கீசகவதம்" என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929இல் ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன், ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில், மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் "இராஜேசுவரி" (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். அன்றில் இருந்து அவர் 'சினிமா ராணி' என்று புகழ்பெற்றிருந்தார்.

குறும் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் இராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த "குறத்தி பாட்டும் நடனமும்" என்ற அந்தக் குறும்படம் நான்கு சுற்றுக்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931ல் தான் வெளியானது.

பேசும் படங்களில் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக கே. சுப்பிரமணியம் ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 இல் சென்னையில் சினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி "காந்தியின் கைராட்டினமே" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.

காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் (1932) என்ற படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். இக்கால கட்டத்திலேயே இவருக்கு, 'சினிமா இராணி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933 இல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த வள்ளி திருமணம் தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.

அக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கல்கத்தாவில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கே பிரௌபதி, அரிச்சந்திரா குலேபகாவலி போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள்.

இயக்குநராக கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதிக் கதாநாயகியாக நடித்து, தயாரித்து, இயக்கி, வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி. பி. ராஜசேகரன் கவனித்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

டி.பி.ராஜலட்சுமி 35-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகை டி.பி.ராஜலட்சுமியும் இவரும் ஒருவரே என சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை.

நாவல்கள்

  • கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
  • விமலா- டி.பி.ராஜலட்சுமி, 1933
  • மல்லிகா- டி.பி.ராஜலட்சுமி, 1933
  • சுந்தரி- டி.பி.ராஜலட்சுமி
  • வாஸந்திகா- டி.பி.ராஜலட்சுமி
  • உறையின் வாள்- டி.பி.ராஜலட்சுமி
  • மறைந்த முகம் - டி.பி.ராஜலட்சுமி

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.